Monday, October 24, 2011

வந்தான் வென்றான் -பட பட்ஜெட் ஒரு சிறப்புப் பார்வை





படம் வந்து பல நாள் ஆனதால் அனைவருக்கும் இந்தப் படத்தின் கதை தெரிந்திருக்கும்.எல்லாம் அதே அரைத்த மாவுதான். இவுங்க கொஞ்சம் நைசா அரைக்கலாம்னு முயற்சி பண்ணாங்க ஆனா முடியல . அப்படி என்ன இந்தப் படத்தின் பட்ஜெட் பற்றி சிறப்புன்னு ஒரு பார்வை பாக்காலாம் வாங்க.

படத்துல லோகேஷன்னு பார்த்தா மூணு வீடு ,ஒரு பஸ்,அப்புறம் ரோடு அவ்வளவு தான். நம்ம ஜீவா மேக்கப் இல்லாம தான் எவ்வளவு கேவலமா இருப்பாருங்கிரதை தெளிவா நமக்கு காமிச்சிருக்கார் .(ஒரு வேளை மேக் அப் போடறளவுக்கு பட்ஜெட்ல காசில்ல போல) .நம்ம சந்தானத்துக்கும் அதே நிலைமை தான் ஒரு ஜிப்பா,நல்லா எண்ணெய் போட்டு வழுச்சி சீவுன தலை ,நந்தாவுக்கு மட்டும் ஒரு கூலிங் கிளாஸ் எக்ஸ்ட்ரா கொடுத்திருக்காங்க. தபசிக்கு பிரச்சினை இல்லை ஏன்னா ஒரு குட்டை பாவாடை ,ரெண்டு மூணு சுடிதார் சிம்பிளா முடிச்சுட்டாங்க.(ஒரு பாட்டில் கிளிசரின் வேண்ணா இந்தப் பொண்ணு பட்ஜெட்ல சேர்த்துக்கலாம் ) .

அடுத்ததா படம் எடுக்கிறதுக்கு எவ்வளவு நாள் ஆகியிருக்கும்னு பார்க்கலாம்.ஏன்னா இது தான் முக்கியமான டவுட் ..என்னோட கணிப்பு பத்து நாள்.மும்பையில ஏழு நாள் ,கேரளாவுல ரெண்டு நாள்,ஏதோ ஒரு கிராமத்துல ஒரு நாள் அவ்வளவு தான்.(பின்னூட்டத்துல உங்க கணிப்புகள் வரவேற்கப்படுகின்றன ). இதுலயும் அந்தமுக்கியமான பார்ட்டே டுபாகூர்னு சொன்னதுனால அதையும் மைனஸ் பண்ணா மொத்தம் மூணு நாள்ல படத்த முடிச்சிடலாம்.

படம் எடுக்கிறதுக்கே இவ்வளவு நாள் ஆகிருக்குன்னா படம் எடுக்கிறதுக்கு முன்னாடி எவ்வளவு நாள் ஆகியிருக்கும் மிஞ்சிப் போனா அரை நாள் அதுவே அதிகம்னு நினைக்கிறேன்.டைரக்டர் சொந்தமா யோசித்து வைத்த ஒரே சீன் நந்தாவுக்கும் அவருடைய முன்னால் காதலிக்கும் இடையே நடக்கும் அந்த பாசபோராட்டம் தான்,மற்றது எல்லாம் தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு வந்த அதே காட்சிகள் ,ஆட்கள் மட்டும் வேற வேற .

ஜீவா -தபசி காட்சிகள் உபயம் 12B , கிராமத்து காட்சிகள் பருத்தி வீரன் படம் ,கிணறுக்கூட அதே கிணறான்னா டவுட்டா இருக்கு,கேரளா காட்சிகள் முழுக்க காக்க காக்க பட பாண்டிச்சேரி வீடு ,காபி கிளாஸ்,லவ் ப்ரோபோசல் எல்லாம் அப்படியே.. டைரக்டர் ரொம்ப ஒன்னும் மெனக்கெடல ...அதுலயும் அந்த சேசிங் சீன் தான் சூப்பர்,,தலைநகரம் படத்துல இருந்து இறக்குமதி பண்ணிட்டாங்க...
அதனால இப்படிப்பட்ட கின்னஸ் சாதனை படத்தினை எடுத்த படக்குழுவினருக்கு நம் வாழ்த்துக்களை தெரிவித்து கொல்(ள்)வோம் .
இவ்வளவு எழுதினதுக்கு அப்புறமும் படத்தை பார்க்கனும்னு யாராவது ஆசைபட்டா நீங்க கண்டிப்பா இந்த வாரம் ஒரு பதிவு இந்தப் படத்தைப் பற்றி எழுதியே தீருவீர்கள்...ஏன்னா சொல்லாம விட்டது இன்னும் நிறைய பாக்கி இருக்கு..
மொத்த செலவு நடிகர்,நடிகை,தொழில் நுட்ப வல்லுனர்கள் தவிர ரூ. 50 ,000 .
வாழ்க தமிழ் சினிமா! வளர்க தமிழ் சினிமா ரசிகர் பட்டாளம் !!

Thursday, October 20, 2011

சேது சமுத்திரத்திட்டமும் கூடங்குளம் அணு உலையும்


கூடங்குளம் அணு உலைத்திட்டத்தினை எதிர்த்து மக்கள் நடத்தி வரும் போராட்டம் ,சேது சமுத்திரத் திட்டத்தினை எதிர்த்து நடத்திய போராட்ட்டத்தை நினைவுபடுதுகின்றது.மத நம்பிக்கையை மூலதனமாக்கி இந்தியா முழுக்க எதிர்ப்பினை உண்டாக்கி அந்தத் திட்டத்தினை கிடப்பில் போட்டனர்.பத்திரிக்கைகளும் இதனை முதல் பக்கத்தில் வெளியிட்டு தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தனர்.அந்தத் திட்டத்தினை எதிர்க்க அவர்கள் இரண்டு காரணங்கள் சொன்னார்கள். முதல் காரணம் அது ராமரால் கட்டப்பட்டது என்றும் அதனை அழித்து கட்டுவது மத நம்பிக்கையை புண்படுத்துவது போல என்றார்கள்.2ஜி கதாநாயகன் என்று சொல்லபடும் சாமி நாசாவிடம் இருந்து அங்கு ராமர் பாலம் இருப்பதற்கான அடையாளம் உறுதி செய்யப்பட தகவல் தன்னிடம் இருப்பதாக் கூறி மேலும் குட்டையை குழப்பினார்.அனைத்து இந்து அமைப்புகளும் தங்கள் பங்குக்கு கூப்பாடு போட்டனர். இரண்டாவது காரணம் சுனாமி பயம்.அதாவது சேது திட்டம் அமையும் இடத்தில் நிறைய பவளப் பாறைகள் இருக்கின்றன, திட்டம் அமைக்குப் படும் பொழுது அவைகளை அகற்ற வேண்டி இருக்கும் , அப்படி செய்தால் சுனாமி ஏற்படும் என பூச்சாண்டி காண்பித்தனர்.இந்த இரண்டு காரணங்களையும் பொய் என்றும் ,சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்ற வாதமும் கடைசி வரை எடுபடாமல் போனது.இத்தனைக்கும் இந்த திட்டத்தின் மூலம் பலன் பெறப்போவது தமிழகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுமே தான் என்பது அனைவருக்குமே தெரியும்.இருந்தும் மிகக் குறுகிய மனபான்மையோடு அந்தத் திட்டத்தினை கிடப்பில் போட வைத்து வெற்றி கண்டனர்.

இன்றைக்கு அதே போன்றதொரு சூழ்நிலை அதே தமிழகத்தில் ஏற்பட்டிருக்கின்றது ,ஆனால் அன்று கூப்பாடு போட்ட அதே கூட்டம் இன்று அணு உலை திட்டத்தினை ஆதிரித்து எழுதிகுவிக்கின்றனர். பவளப் பாறைக்கு ஆபத்து என்று கவலைப்பட்ட கூட்டம் இன்று மக்களுக்கு ஆபத்தினை குறித்து ஏன் கவலைப்படவில்லை? இந்தத் திட்டத்தினை எதிர்ப்பவர்களை தேச துரோகிகள் என்றும் புலி ஆதரவாளர்கள் என்றும் கொச்சைப்படுத்தி வருகின்றனர்.இவர்கள் ஒரு திட்டத்தினை எதித்தால் அது தேச பாதுகாப்பு,மத பாதுகாப்பு ,ஆனால் பொதுமக்கள் போராடினால் தேசதுரோகம் இது எந்த விதத்தில் நியாயம்? மின்சாரம் அத்தியாவசியமான ஒன்று என்பதனை மறுப்பதற்கில்லை. ஆனால் இந்தத் தவறுக்கு முழுக்காரணமும் ஆட்சியாளர்கள்தானே? கடந்த காலங்களில் மின்சார தேவையினை பூர்த்தி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ,அதற்கு மக்கள் என்ன செய்ய முடியும் ? நம் மண்ணில் இருந்து எடுக்கப்படும் நிலக்கரியில் இருந்து தாயரிக்கப் படும் மின்சாரம் மற்ற மாநிலங்களுக்கு வழங்கப்படுகின்றது.இதே போன்று இந்த அணு உலை திட்டத்தினையும் மற்ற மாநிலத்தில்அமைத்து நம் மின்சாரத்தேவையை பூர்த்தி செய்யலாமே? இது பாதுகாப்பானது என்று கூவும் அனைவரும் ஜப்பானில் ஏற்பட்ட அணு கதிர்வீச்சின் அபாயம் பற்றி பேசத் தயங்குவது ஏன்? கல்பாக்கம் அணு உலை மிகப் பாதுகாப்பாக இயங்கி வருவதாக புளங்காகிதம் அடைகின்றனர். இங்கு அனைவருக்குமே ஒரு உண்மை தெரியும் பத்திரிகைகள் எல்லா உண்மையினையும் எழுதி விட முடியாது. கல்பாக்க அணு கதிர்வீச்சின் விளைவுகள் குறித்து மருத்துவர் புகழேந்தி என்பவர் விரிவான ஆராய்சிகளை நீண்ட காலமாக மேற்கொண்டு வருகின்றார்.அவரின் கருத்துகள் ஏடுகளில் வராதவண்ணம் பார்த்துக்கொள்வதுதான் அரசாங்கத்தின் முழுமையான பணி. இறுதியாக சொல்வது என்னவென்றால் நம்மையும் நம் மக்களையும் இது போன்ற விஷகிருமி குணம் படைத்தவர்களிடம் இருந்து காப்பது நம் கடமை ,எனவே அனைவரு கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு குழுவினருக்கு ஆதரவாக இருந்து அவர்கள் வெற்றியடைய உதவ வேண்டும்.