Monday, February 13, 2017

காதலர் தின நீதிக்கதை:

காதலர் தினத்தன்று காதலியை அசத்துவதற்காக குரு தன் காதலி சாந்திக்கு கவிதை எழுதி கொடுக்க முடிவு செய்தான். பூங்கா, மொட்டை மாடி , தனி அறை என  இடங்களில்  உட்கார்ந்து நடந்து பல முயற்சி செய்தும்  ஒரு வரி கூட எழுத முடியவில்லை. அந்த சமயத்தில் தான் காதலர் தின சிறப்பு ஆனந்த விகடன் குரு கையில் கிடைத்தது. பக்கத்திற்கு பக்கம் காதல் கவிதைகள் இருந்த புத்தக்கத்தினை பார்த்ததும் திருவிளையாடல் படத்தில் நாகேஷ் அடைந்த அதே போன்தொரு மகிழ்ச்சியை அடைந்தான். உடனே அப்படியே அதில் உள்ள வரிகளை மாற்றாமல் வேறொரு பேப்பரில் எழுதி விட்டான். காதலர் தினத்தன்று பரிசுப்பொருட்களுடன் அந்த கவிதையும் கொடுத்தான. காதலி சாந்தி பல பக்கங்களில் எழுதப்பட்டிருந்த அந்த கவிதையினை வாங்கி அங்கேயே படித்து ஆச்சர்யம் அடைந்தாள். 


காலங்கள் உருண்டோடின. அக்கா வீட்டிற்கு சென்றிருந்த குரு , அங்கே இருந்த பழைய குமுதம் ,ஆனந்த விகடன் மற்றும் குங்குமம் புத்தகங்களை எல்லாம் வீட்டில் இருக்கும் மனைவி படிப்பதற்காக கொண்டு வந்து கொடுத்தான். பின்னர் ஒருநாள் அலுவலகத்தில் மிக தீவிரமாக நண்பர்களுடன் அரசியல் விவாதத்தில் ஈடுபட்டிருந்த போது மனைவி இன்று மாலை உங்களுக்கு ஒரு சர்பிரைஸ் இருக்கின்றுது சீக்கிரம் வந்து விடுங்கள் என்று கூறினார்.

குரு மிக உற்சாகமாக வீட்டிற்கு சென்றான். மனைவி ஒரு கிப்ட் ஒன்றினை கொடுத்தாள். இன்றைக்கு என்ன ஸ்பெசல் என்று கேட்க இன்றைக்கு காதலர் தினம் என்று நினைத்து கொள்ளுங்கள் என்று சொன்னாள் .ஆர்வமாக பிரித்து பார்த்தான் குரு, அதில் பழைய ஆனந்தவிகடனும் , அவன் காதலர் தினத்தன்று முன்பு கொடுத்த கவிதை பேப்பரும் இருந்தது. அசடு வழிந்தான் குரு .

காதலியை ஏமாற்றலாம் மனைவியை ஏமாற்றவே முடியாது 

நன்றி 
செங்கதிரோன் 


Wednesday, February 8, 2017

கண்டம் விட்டு கண்டம் பாயும் சித்த மருத்துவம் :


சித்த மருத்துவம் உலகின் மிக தொன்மையான மருத்துவத்தில் ஒன்று.  தமிழின் உயரிய படைப்பான திருக்குறளில் , சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்படும் , வாத, பித்த ,கபம் குறித்த குறிப்புகள் உண்டு. சித்தர்களை பற்றிய பல்வேறு செய்திகளும் இலக்கியத்தில் காண கிடைக்கின்றது . 

பல்லாண்டு காலமாக தமிழ் மண்ணில் மக்களால் பயன்பாட்டில் இருந்து வரும் சித்த மருத்துவம் , மெல்ல விரிவடைந்து இந்தியாவின் பிற மாநிலங்களிலும் மக்கள் சித்த மருத்துவத்தினை பயன்படுத்தி வருகின்றனர் . குறிப்பாக கேரளாவில் சித்த மருத்துவ கல்லூரி தொடங்கப்பட்டு பலரும் ஆர்வமுடன் படித்து வருகின்றனர் . அந்த கல்லூரியில்  மிக சமீபத்தில் ஒரு ஜப்பானிய மாணவி சித்த மருத்துவம் பயின்று பட்டம் பெற்றார். தென் மாநிலங்கள் அனைத்திலுமே சித்த மருத்துவம் பரவலாக மக்களின் பயன்பாட்டில் இருக்கின்றது. அது மட்டுமன்றி ரஷ்ய மொழியில் சித்த மருத்துவம் குறித்த புத்தகமும் வெளிவந்திருக்கின்றது  

இலங்கையில் சித்த  மருத்துவ படிப்பு பன்னெடுங்காலமாகவே இருந்து வருகின்றது . அங்கு பட்டப் படிப்பு படித்த மருத்துவர்கள் மேற்படிப்பிற்காக தமிழகம் வருகின்றனர். இது தவிர தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் சிங்கப்பூர் ,மலேசியா போன்ற நாடுகளிலும் அந்த அரசுகளால் சித்த மருத்துவம் ஏற்றுக் கொள்ளப்பட்டு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆசிய கண்டத்தினை அடுத்து தற்போது ஆஸ்திரேலியா மற்றும் கனடாவில் சித்த மருத்துவத்தினை பாரம்பரிய மருத்துவம் என்ற அடிப்படையில் சில விதிமுறைகளுடன் சித்த மருத்துவம் ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கின்றது .தற்போது சித்த மருத்துவர்கள் அங்குள்ள மருத்துவ அமைப்பில் முறையாக பதிவு செய்து தமிழ் மக்களிடம் மருத்துவ சேவையினை செய்து வருகின்றனர்.


பல்வேறு சிறப்பு வாய்ந்த நம் சித்த மருத்துவம் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் அங்கீகாரம் பெறும் அளவுக்கு விரைவில் வளர்ச்சி அடையும். அவ்வாறு நிகழ்ந்தால் அது சித்த மருத்துவத்தினை உருவாக்கிய பதினெண் சித்தர்களுக்கு மிகப்பெரும் மதிப்பாக இருக்கும். உலகம் முழுக்க சித்த மருத்துவம் பயன்பாட்டிற்கு வந்து அனைத்து மக்களும் உணவே மருந்து மருந்தே உணவு என்ற சித்தர் கொளகையின் ஏற்று நீண்ட ஆயுளுடன் நலமாக வாழ வேண்டும் .

செந்தில் கிருஷ்ணசாமி, B.S.M.S, M.S. (Neuro.Sci). PhD (Canada)
சித்த மருத்துவர் , மூளை நோய்கள் குறித்த ஆராய்ச்சியாளர் (லவால் பல்கலைக்கழகம்)
கியூபெக் நகரம் 
கனடா 

கனடா நாட்டு பத்திரிக்கையில் வெளிவந்த இந்த செய்தியினை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி 

நன்றி செங்கதிரோன்