Thursday, November 17, 2011

டிராபிக் ராமசாமி Vs உதயகுமார்


தமிழ்நாட்டில் மக்கள் நலன் சார்ந்து இரண்டு முக்கிய பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கப்படுகின்றது . முதலாவது கூடங்குளம் அணுமின்நிலயத்தினை எதிர்த்து இடிந்தகரையில் நடைபெற்று கொண்டிருக்கும் போராட்டம்.இந்தப் போராட்டம் பற்றி முன்பே சேது சமுத்திரத்திட்டமும் கூடங்குளம் அணு உலையும் என்ற பதிவினை எழுதி இருக்கின்றேன்.தற்பொழுது நிலைமை முற்றிலும் மாறி இருக்கின்றது.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அணு உலையினைப் பார்வையிட்டு மிக பாதுகாப்பான அணுஉலை என்று கூறி தன் மீது படித்த மக்கள் அனைவரும் வைத்திருந்த நம்பிக்கையினை பாழாக்கிக் கொண்டார் .ராக்கெட் ஏவுகணை விஞ்ஞானி அணுஉலைக்கு உத்தரவாதம் கொடுக்கும் விந்தை இந்தியாவில் மட்டுமே நடக்கும் வினோதம்.அப்துல் கலாம் வருகை அணுஉலை எதிர்ப்பில் எந்த மாறுதலும் ஏற்படாததால் அடுத்த ஆயுதமான அந்நிய சக்திகளின் சதி என்ற கட்டுக் கதையினை நம்ப வைக்கப் படாத பாடுபடுகின்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால் எதற்கெடுத்தாலும் சோனியாவை அந்நிய சக்தி என்றுகூறிக் கொண்டிருந்தவர்களெல்லாம் கூட இப்பொழுது அந்த அன்னையின் கனவுத் (கணவர்) திட்டத்திற்கு ஆதரவு அளித்துக்கொண்டிருக்கும் நிலைதான் .


அடுத்த மிக முக்கியப் பிரச்சனை தி. நகரில் விதி முறைகளை மீறி கட்டப் பட்ட கட்டிடங்களுக்கு நீதி மன்றத்தின் உத்தரவால் மூடுவிழா நடத்தியது.அங்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களுக்கு இந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் முக்கியமான காரணம்.இது மட்டுமல்லாமல் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் (தீ விபத்து ,இயற்கை சீற்றம் ) மக்கள் எளிதாக கட்டிடங்களை விட்டு வெளியேறுவதற்கான வகையில் எந்த வசதிகளும் அந்த கட்டிடங்களில் இல்லை என்பது வெளிப்படை. இக்காரணங்களுக்காக டிராபிக் ராமசாமி பல வருடங்களாகவே நீதி மன்றத்தின் மூலம் போராடி வெற்றி பெற்றிருக்கின்றார் .இதற்காக பலரும் இவரை இணையதளங்களில் பாராட்டி மகிழ்கின்றனர். இவர் தான் உண்மையான இந்தியன் தாத்தா என்று புகழாரம் சூட்டுகின்றனர். இதில் நமக்கும் உடன்பாடே.



ஆனால் இதே போன்று மக்கள் நன்மைக்காக அணு உலையினை எதிர்த்து தீவிரமாகப் போராடி வரும் உதயகுமாரை மட்டும் ஏனோ இவர்கள் தேச விராதியாகப் பார்க்கின்றனர். அந்நிய சக்திகள் இவர் பின்னால் இருப்பதாக எந்த விதமான ஆதாரமும் இன்றி சொல்கின்றனர். உதயகுமார் அணு உலைக்கு எதிரான போராட்டத்தைப் பல வருடங்களாகவே அது தொங்கப்பட்டது முதலாகவே போராடி வருபவர் ,இதற்காக சிறைக்கும் சென்றிருக்கின்றார். அணுஉலையின் அபாயம் குறித்து அவர் எழுப்பும் கேள்விகளுக்கு அரசாங்கத்திடம் உரிய பதில் இல்லை.அதன் பாதுகாப்பு மற்றும், விபத்து ஏற்பட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்கான வசதியின்மை,அணுகதிர் வீச்சின் பரவல் அடுத்த சந்ததிகளுக்கும் பரவும் நிலை என பல அபாயங்கள் உள்ளன. ஆனால் அரசாங்கம் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள தயாராக இல்லை ,மின்சார தேவையினைச் சொல்லி பிரச்சனையின் தீவிரத்தைக் குறைப்பதிலேயே ஆர்வமாக இருக்கின்றது.

அணு உலை மிகபாதுகாப்பனது என சொல்லும் அரசாங்கம் கேரளா மற்றும் மேற்கு வங்கம் அரசாங்கள் எடுத்துள்ள அணு உலை வேண்டாம் என்ற கொள்கையினை மறுபரிசீலினை மாற்றச் சொல்லி இன்றுவரை கேட்கவே இல்லை.


டிராபிக் ராமசாமியின் முயற்சியால் மூடப்பட்ட வணிக நிறுவங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பும்,அங்கு சிறு வியாபாரம் செய்து பிழைத்து வந்த வியாபாரிகளுக்கு ஏற்பட்ட இழப்புக்காக யாரும் டிராபிக் ராமசாமியினை குறை சொல்ல முடியாது.ஏனென்றால் அங்கு எதிர்காலத்தில் விபத்து ஏற்பட்டால் ஏற்படும் இழப்பு இவை எல்லாவற்றையும் விட மிக அதிகமானதவே இருக்கும் என்பதுதான் உண்மை.

இதனையே தான் உதயகுமாரும் செய்து வருகின்றார் என்று எல்லோருக்கும் தெரியும், . அப்படியிருக்க அவரின் முயற்சியினை மட்டும் வெளிநாட்டு சக்தி,கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர் என்று குறை கூறுபவர்கள் கண்டிப்பாக மனநிலை பிழன்றவர்களாகத்தான் இருக்க முடியும்.

ஏனெனில் டிராபிக் ராமசாமின் இந்த நடவடிக்கைக்குப் பின்னால் போட்டி நிறுவனங்களின் சதி மற்றும் அவர் ஒரு பார்ப்பனர் அதனால் நாடார்களுக்கு எதிராகத்தான் இதனைச் செய்கிறார் என்று குறை கூறினால் எவ்வளவு அபத்தமாக இருக்குமோ அந்தளவுக்கு அபத்தம் உதயகுமாரக் குறை சொல்வது.நீங்கள் எந்த மதமாகவோ சாதியாகவோ இருந்தாலும் போராட்டம் மக்களுக்கான நன்மை பயக்கும் விதத்தில் இருப்பின் அதனை அனைவரும் ஆதரிப்பதே சாலச் சிறந்தது.அணு உலையின் விபத்து மிகக் கொடூரமானது எனபதும் அந்த இழப்பினை ஈடு செய்யவே இயலாது என்பதும் மறுக்க முடியாத உண்மை. எதிர்கால நலன் கருதி தி.நகரில் எடுக்கப் பட்ட நடவடிக்கையினை கூடங்குளத்திலும் எடுக்க வேண்டியது அரசின் கடமை.


நெய்வேலியில் நடக்கும் அக்கிரமங்களையும் நாம் கவனத்தில் கொள்வது நல்லது. நெய்வேலி சென்று இருப்பவர்களுக்கு நன்கு தெரியும்.அந்த வளாகத்தில் ஊழியர்களுக்கு செய்தது கொடுக்கப் பட்டிருக்கும் வசதியும் ,ஆனால் அதை சுற்றி வாழும் கிராமங்களின் நிலையும் ஒப்பிட்டு பார்த்தால் அரசின் பாரபட்சம் நன்கு புரியும். இதில் முக்கியமாக் தெரிந்து கொள்ள வேண்டியது அனல் மின் நிலையம் அமைவதற்காக நிலங்களையும் வீடுகளையும் இழந்தவர்களுக்கான இழப்பீடு இன்னும் வழங்கி முடிக்கவில்லை.வேலை உத்தரவாதம் வழங்கப்பட்டவர்களையும் இன்றும் தற்காலிகப் பணியாளராகவே வைத்திருக்கின்றனர். அடுத்ததாக அங்கு நிலத்தடி நீரின் அளவு மிகவும் குறைந்து விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே அணுஉலை போராட்டத்தை எதிர்க்கும் சகோதரர்கள் உண்மை நிலை என்ன என்பதனை தெளிவாக புரிந்து கொண்டு செயல்படவேண்டும்.

Friday, November 4, 2011

பரிதி இளம் வழுதி வேல் முருகன்- பிரச்சனை ஒன்று ! கட்சி வேறு!!






தமிழக அரசியசில் அதிர்வலைய ஏற்படுத்தியிருப்பது பரிதி மற்றும் வேல்முருகன் இருவர் மீதான கட்சி நடவடிக்கை. இருவருக்கும் பல ஒற்றுமைகள் உண்டு அதிரடி அரசியல் செய்பவர்கள்,நல்ல பேச்சாளர்கள்,சட்ட மன்றத்தில் இருவரது பணியும் குறிப்பிடத்தக்கது.
பரிதி பிரபலம் அடைந்ததே சட்ட மன்ற கூட்டங்களில் ஜெயலலிதாவுக்கு எதிராக துணிச்சலுடன் போராடியதாலும் அதற்காவே அவர் சிறையில் அடைக்கபட்டதாலும் தான் ,இவை இரண்டும் இவருக்கு தலைமையுடனான நெருக்கத்தையும் கட்சியிலும் அரசியலிலும் முக்கியப் பதவிகள் கிடைக்கக் காரணமாக அமைந்தன.
வேல்முருகன் கணீர் குரலுடன் பேசக்கூடியவர் ,தன் வசீகரப் பேச்சால் பல இளைநர்களை பாட்டாளி மக்கள் கட்சியின் பக்கம் ஈர்த்தவர். நெய்வேலி நிலச்சுரங்கத்துக்காக நிலங்களை இழந்தவர்களின் உரிமைக்காகப் போராடியவர் ,ஈழத்தமிழர் போராட்டங்களில் தன்னை அதிகம் ஈடுபடுத்திகொண்டவர் என இவருக்குப் பல முகங்கள் உண்டு .இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் கருணாநிதியின் அன்புக்குப் பாத்திரமானவர் என்ற நற்பெயரும் உண்டு .

ஆனாலும் இவ்வளவு திறமை வாய்ந்த இருவரையும் அவர்கள் சார்ந்த கட்சிகள் புறக்கணித்தது ஏன்? வெளிப்படையாக கட்சிக்கட்டுப்பாட்டை மீறி விட்டதால் நீக்கப் பட்டதாக சொல்லப்பட்டாலும் ,இரு கட்சிகளின் தலைமையுமே தனக்குப் பிறகு தன் தனயனிடமே கட்சி இருக்க வேண்டும் என பொதுவான கொள்கையுடன் இருக்கின்றன. எனவே அந்த இருவர் ஸ்டாலின் மற்றும் அன்புமணியின் சொல் கேட்டு நடப்பவர்களே அந்த கட்சிகளில் நீடிக்க முடியும் என்ற மோசமான சூழல் நிலவவுது அனைவருக்குமே தெரியும் .

இது போன்ற நடவடிக்கைகள் மூலம் நாம் வாழ்வது ஜனநாயக நாட்டிலா அல்லது மன்னராட்சியின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கின்றோமோ என்ற அச்ச உணர்வு ஏற்படுகின்றது .எல்லா திறமையும் வாய்ந்தவர்கள் தங்கள் சுய உழைப்பின் மூலம்முன்னேறியவர்களாகிய இந்த இருவரையும் ஒரே நொடியில் தங்கள் சுய லாபத்திற்காக ஒதுக்கித் தள்ளுவதென்பது ஜனநாயகதிதின் தோல்வி ஆகும் .

கட்சிகள் அனைத்தும் இன்று கார்பரேட் நிறுவனங்களை போல மாறிவிட்டன. லாபம் ஒன்றே நோக்கம் இதனால் தனி நபர் திறமைகள் ,உழைப்பு எவற்றுக்கும் மதிப்பளிப்பதில்லை ,யார் சிறந்த அடிமையாக இருக்கத் தயாரோ அவருக்கு சகலமும் கிடைக்கும். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் பன்னீர்செல்வம் நிர்வாகத் திறமை,பேச்சுத்திறமை எனஎதுவும் கிடையாது ஒரே தொழில் ஜெயலலிதாவுக்கு சிறந்த அடிமையாக இருப்பது இதனால் முதல்வர் பதவியே கிடைத்தது.

இவை அனைத்துமே நல்லப் பண்புடைய ,தலைமை தாங்கும் தகுதி நிரம்பிய மனிதர்களை அரசியலில் இருந்து நிராகரிக்கச் செய்கின்றது. தலைவனுக்கு துதிபாடும் மனிதர்களினால் நாட்டு முன்னேற்றத்திற்கு எந்த நன்மையையும் இல்லை.இது போன்ற அரசியல் அடிமைகள் தன் தலைவனைப் போலவே தம் மக்கள் நலன் மட்டுமே குறிக்கோள் என்றே செயல்படுவர். இந்த நிலை மாற முக்கியப் பணியாற்ற வேண்டியது பத்திரிக்கைகள் மட்டுமே ,தலைவர்களைப் பிரதானப்படுத்தும் நிலையினை தவிர்க்க வேண்டும்,இல்லையென்றால் சர்வாதிகாரம் ஏற்பட வழிவக்குக்கும்.

Thursday, November 3, 2011

நீயா நானா ? தமிழ் சமூகத்தின் புதிய அடையாளம் :


சங்க காலங்களில் தமிழர்கள் பொது வெளியில் நாட்டு நடப்புகளையும்,வாழ்வியல் முறைகளையும் நீண்ட விவாதங்களின் மூலம் பேசி தீர்வுகண்டிருக்கின்றனர் . ஆனால் தற்போது தமிழர்கள் இருவரோ பலரோ நீண்ட காலம் கழித்து சந்தித்தாலும் தினமும் சந்தித்தாலும் பொதுவான நலம் விசாரிப்புகளுக்குப் பின்னர் அதிகம் விவாதிப்பது சினிமா மற்றும் நிகழ் கால அரசியல் பற்றியதாகத்தான் இருக்கும். இவை இரண்டையும் தாண்டி நாம் அதிகம் விவாதிப்பது இல்லை .

ஆனாலும் இவற்றையும் தாண்டி நாம் நம் வாழ்வியல் முறைகளையும், உலக நடப்புகள் குறித்த பார்வையினையும் ,பிற துறைகளைப் பற்றிய நமது பார்வையினையும் செம்மைப் படுத்திக் கொள்ள விரிவான விவாதங்களே சிறந்த வழி அதனை மிகச் சிறப்பாக செய்து வருவது நீயா நானா.

ஆரம்ப கால நிகழ்ச்சிகள் பரபரப்புக்காக சில தேவையில்லாத தலைப்புகளில் விவாதம் செய்தாலும் ,தற்பொழுது மிகச் சிறப்பான விவாதங்கள் நல்ல சிந்தனைகளையும் ,தெளிவானபார்வையும் வழங்குவதோடு மட்டுமல்லாமல் தமிழகத்தில் அதிகம் வெளிச்சம் இல்லாமல் வாழும் மிகச் சிறந்த ஆளுமைகளை அடையாளம் காட்டிவருவது குறிப்பிடத்தக்கது.

வெகுகாலமாக ஒளிபரப்பப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விதமான தலைப்புகள் விவாதிக்கப்பட்டுள்ளன. நாம் பொதுவெளியில் பேசத் தயங்கும் ஆண் பெண் உறவுகள் ,குடும்ப உறவுகள்,பாலியல் குறித்த பார்வை போன்ற உறவு சார்ந்த விடயங்களைப் பற்றி மிக விரிவான விவாதங்களை நடத்தியதோடு மட்டுமல்லாமல் அதிலுள்ள சிக்கல்களுக்குத் தெளிவினையும் வழங்கியிருக்கின்றது.
அதுமட்டுமல்லாமல் நமக்கு சிறிதும் தொடர்பில்லாத பிற துறைகளைப் பற்றி ஒரு பொது கருத்தினை நாம் வைத்திருப்போம். குறிப்பாக இளம் தலைமுறை கணினி தொழில்நுட்பம் சம்பத்தப் பட்ட அனைவரும் ஏதோ கலாசார சீரழிவை ஏற்படுத்திகொண்டிருப்பது போன்ற மாயையினை அது உண்மையில்லை அவர்களில் பலரும் சமூக மாற்றத்திற்கு தேவையானப் பணிகளிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள் என்பதனைப் பற்றியும் விவாதங்களின் மூலம் எடுத்துரைத்தது இருக்கின்றார்கள்.அடுத்ததாக மூட நம்பிக்கைகளின் நம்பகத்தன்மை குறித்த விவாதங்களில் இருதரப்பின் கருத்துக்களும் சமமான மதிப்பளித்து நாம் ஒதுக்கித் தள்ள வேண்டியவற்றையும் அடையாளம் காட்டியது மிகச் சிறப்பான ஒன்றாகும்.
இந்த நிகழ்ச்சியின் மிக சமீபத்திய வெற்றி அன்னா ஹசாரே போராட்டம் குறித்த விவாதம் தான். அன்னா அவர்களின் இயக்கம் குறித்த சமூகவியலாளர் முத்துகிருஷ்ணனின் கருத்துக்கள் புதியவனவாகவும் அதிர்ச்சியை தரும் வகையிலும் அமைந்திருந்தது. ஆனாலும் எதிர் தரப்பினருக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட்டு அது குறித்து விரிவாக அலசப்பட்டது தமிழ் தொலைகாட்சிகளில் யாரும் செய்யாத அற்புதமான நிகழ்வு.இவை மட்டுமல்லாமல் ஆடை அணிவதில் ஏற்பட்ட கலாச்சார மாற்றம், காதல் திருமணம், வரதட்சணை,மனிதர்களின் நிறம் குறித்தப் பார்வை,பாரம்பரிய மருத்துவத்தின் நன்மை,ஏழை பணக்கார வேறுபாடு ,இட ஒதுக்கீடு ,சாதிகொடுமைகள் ,குழந்தை வளர்ப்பு என பெரும்ப்பனமையான தலைப்புகளில் விவாதம் செய்யப் பட்டிருக்கின்றது.
இன்னொரு சிறந்த நிகழ்ச்சி மாமியார் மருமகள் பிரச்சினை. இது குடும்ப உறவுகளில் மிக முக்கியமான பிரச்சினையாக இருந்தாலும் இது குறித்து நான்கு சுவர்களுக்குள் மட்டுமே அதிகம் பேசப்பட்டது அதை பொதுவெளிக்குள் கொண்டு வந்து அவர்களின் மனக்குமுறல்களையும் ,தவறான புரிதல்களையும் அவற்றுக்கான தீர்வுகளை நகைச்சுவை கலந்து வழங்கியது மிக அரிதான நிகழ்ச்சியாகும்.

தமிழ் மொழி இது குறித்துப் பேச பேச தான் அதன் அருமையும் அதிலிருந்து எவ்வளவு விலகி சென்று கொண்டிருக்கின்றோம் என்பதனை உணர முடியும். எனவே தற்போதய தமிழ் அறிஞர்களை வைத்துப் பொட்டில் அடித்தால் போல நம் மொழியினை பாதுகாக்கவும் போற்றவும் வேண்டிய அவசியத்தினை உணர்த்தியது நிகழ் காலத்திற்கு மிகப் பொருத்தமான நிகழ்ச்சி .
சினிமா குறித்த ஒரு நிகழ்ச்சியில் யாருமே செய்ய துணியாத ஒரு செயலை செய்தனர்.அது நடிகர் விஜய் நடிப்பு குறித்து பங்கேற்பாளரின் கருத்தை மறைக்காமல் வெளியிட்டது .

மிக குறிப்பாக இந்த நிகழ்ச்சிகளின் மூலம் நமக்குப் பல நல்ல ஆளுமைகள் அடையாளம் காண்பிக்கப்பட்டனர்.குறிப்பாக தமிழ் எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த செயல் காலத்திற்கும் நிலைத்து நிற்கும்.அதுமட்டுமல்லாமல் பொதுமக்களில் பலருக்கும் அவர்களின் திறமையினையும் வெளிப்படுத்தும் களமாக செயல்பட்டது பாராட்டுக்குரியது.

இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு மிக முக்கியக்காரணம் மூவர் ,முதலாவது கோபிநாத் அழகான தமிழில் பேசுவதோடு மட்டுமல்லாமல் நிகழ்ச்சியினை நகைச்சுவை கலந்து அருமையாக தொகுத்து வழங்கி தமிழ் மக்கள் அனைவர் நெஞ்சிலும் நிலைத்து நிற்கின்றார். அதற்கு அடுத்ததாக குறிப்பிடப் பட வேண்டியவர் இந்த நிகழ்ச்சியின் இயக்குனர் ஆண்டனி அவர்கள் , நிகழ்ச்சிக்கான பொருத்தமான தலைப்பு ,அதற்கான பொருத்தமான பங்கேற்பாளர்களை தேர்வு செய்தல் என மிகச் சிறப்பாக நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து நடத்திகொண்டிருக்கின்றார். மூன்றாவதாக மிக முக்கியமானவர்கள் பார்வையாளர்களாகிய நாம் தான் , ஞாயிற்றுக் கிழமையில் நம் கவனத்தை திசை திருப்பும் வகையில் எவ்வளவோ நிகழ்ச்சிகள் இருந்தாலும் இந்த நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பார்த்து வருவது அதன் வெற்றிக்கு மிக முக்கியக் காரணம்.

இந்த நிகழ்ச்சி குறித்த எதிர் மறையான விமர்சனங்களும் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. குறிப்பாக ஆங்கிலத்தில் பேசுவதை ஊக்குவிப்பதும் சில தலைப்புகளின் விவாதம் முன் முடிவுகளின் அடிப்படையிலே விவாதம் செய்வதும் தவிர்ப்பது சிறந்ததாக இருக்கும்.

இந்த நிகழ்ச்சியின் விவாதங்கள் மக்கள் வாழ்வின் உண்மை நிலையினையும் ,கால மாற்றத்திற்கேற்ப அவர்கள் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும்,தங்கள் உள்ளங்களில் பொதிந்து கிடக்கும் மகிழ்ச்சி ,துக்கம், மாற்றுச் சிந்தனை அனைவற்றையும் பகிர்ந்து கொள்ளும் தளமாக இருப்பதினால் தமிழனின் புதிய அடையாளமாக எடுத்துக் கொள்ளலாம்.

Monday, October 24, 2011

வந்தான் வென்றான் -பட பட்ஜெட் ஒரு சிறப்புப் பார்வை





படம் வந்து பல நாள் ஆனதால் அனைவருக்கும் இந்தப் படத்தின் கதை தெரிந்திருக்கும்.எல்லாம் அதே அரைத்த மாவுதான். இவுங்க கொஞ்சம் நைசா அரைக்கலாம்னு முயற்சி பண்ணாங்க ஆனா முடியல . அப்படி என்ன இந்தப் படத்தின் பட்ஜெட் பற்றி சிறப்புன்னு ஒரு பார்வை பாக்காலாம் வாங்க.

படத்துல லோகேஷன்னு பார்த்தா மூணு வீடு ,ஒரு பஸ்,அப்புறம் ரோடு அவ்வளவு தான். நம்ம ஜீவா மேக்கப் இல்லாம தான் எவ்வளவு கேவலமா இருப்பாருங்கிரதை தெளிவா நமக்கு காமிச்சிருக்கார் .(ஒரு வேளை மேக் அப் போடறளவுக்கு பட்ஜெட்ல காசில்ல போல) .நம்ம சந்தானத்துக்கும் அதே நிலைமை தான் ஒரு ஜிப்பா,நல்லா எண்ணெய் போட்டு வழுச்சி சீவுன தலை ,நந்தாவுக்கு மட்டும் ஒரு கூலிங் கிளாஸ் எக்ஸ்ட்ரா கொடுத்திருக்காங்க. தபசிக்கு பிரச்சினை இல்லை ஏன்னா ஒரு குட்டை பாவாடை ,ரெண்டு மூணு சுடிதார் சிம்பிளா முடிச்சுட்டாங்க.(ஒரு பாட்டில் கிளிசரின் வேண்ணா இந்தப் பொண்ணு பட்ஜெட்ல சேர்த்துக்கலாம் ) .

அடுத்ததா படம் எடுக்கிறதுக்கு எவ்வளவு நாள் ஆகியிருக்கும்னு பார்க்கலாம்.ஏன்னா இது தான் முக்கியமான டவுட் ..என்னோட கணிப்பு பத்து நாள்.மும்பையில ஏழு நாள் ,கேரளாவுல ரெண்டு நாள்,ஏதோ ஒரு கிராமத்துல ஒரு நாள் அவ்வளவு தான்.(பின்னூட்டத்துல உங்க கணிப்புகள் வரவேற்கப்படுகின்றன ). இதுலயும் அந்தமுக்கியமான பார்ட்டே டுபாகூர்னு சொன்னதுனால அதையும் மைனஸ் பண்ணா மொத்தம் மூணு நாள்ல படத்த முடிச்சிடலாம்.

படம் எடுக்கிறதுக்கே இவ்வளவு நாள் ஆகிருக்குன்னா படம் எடுக்கிறதுக்கு முன்னாடி எவ்வளவு நாள் ஆகியிருக்கும் மிஞ்சிப் போனா அரை நாள் அதுவே அதிகம்னு நினைக்கிறேன்.டைரக்டர் சொந்தமா யோசித்து வைத்த ஒரே சீன் நந்தாவுக்கும் அவருடைய முன்னால் காதலிக்கும் இடையே நடக்கும் அந்த பாசபோராட்டம் தான்,மற்றது எல்லாம் தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு வந்த அதே காட்சிகள் ,ஆட்கள் மட்டும் வேற வேற .

ஜீவா -தபசி காட்சிகள் உபயம் 12B , கிராமத்து காட்சிகள் பருத்தி வீரன் படம் ,கிணறுக்கூட அதே கிணறான்னா டவுட்டா இருக்கு,கேரளா காட்சிகள் முழுக்க காக்க காக்க பட பாண்டிச்சேரி வீடு ,காபி கிளாஸ்,லவ் ப்ரோபோசல் எல்லாம் அப்படியே.. டைரக்டர் ரொம்ப ஒன்னும் மெனக்கெடல ...அதுலயும் அந்த சேசிங் சீன் தான் சூப்பர்,,தலைநகரம் படத்துல இருந்து இறக்குமதி பண்ணிட்டாங்க...
அதனால இப்படிப்பட்ட கின்னஸ் சாதனை படத்தினை எடுத்த படக்குழுவினருக்கு நம் வாழ்த்துக்களை தெரிவித்து கொல்(ள்)வோம் .
இவ்வளவு எழுதினதுக்கு அப்புறமும் படத்தை பார்க்கனும்னு யாராவது ஆசைபட்டா நீங்க கண்டிப்பா இந்த வாரம் ஒரு பதிவு இந்தப் படத்தைப் பற்றி எழுதியே தீருவீர்கள்...ஏன்னா சொல்லாம விட்டது இன்னும் நிறைய பாக்கி இருக்கு..
மொத்த செலவு நடிகர்,நடிகை,தொழில் நுட்ப வல்லுனர்கள் தவிர ரூ. 50 ,000 .
வாழ்க தமிழ் சினிமா! வளர்க தமிழ் சினிமா ரசிகர் பட்டாளம் !!