Thursday, November 17, 2011

டிராபிக் ராமசாமி Vs உதயகுமார்


தமிழ்நாட்டில் மக்கள் நலன் சார்ந்து இரண்டு முக்கிய பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கப்படுகின்றது . முதலாவது கூடங்குளம் அணுமின்நிலயத்தினை எதிர்த்து இடிந்தகரையில் நடைபெற்று கொண்டிருக்கும் போராட்டம்.இந்தப் போராட்டம் பற்றி முன்பே சேது சமுத்திரத்திட்டமும் கூடங்குளம் அணு உலையும் என்ற பதிவினை எழுதி இருக்கின்றேன்.தற்பொழுது நிலைமை முற்றிலும் மாறி இருக்கின்றது.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அணு உலையினைப் பார்வையிட்டு மிக பாதுகாப்பான அணுஉலை என்று கூறி தன் மீது படித்த மக்கள் அனைவரும் வைத்திருந்த நம்பிக்கையினை பாழாக்கிக் கொண்டார் .ராக்கெட் ஏவுகணை விஞ்ஞானி அணுஉலைக்கு உத்தரவாதம் கொடுக்கும் விந்தை இந்தியாவில் மட்டுமே நடக்கும் வினோதம்.அப்துல் கலாம் வருகை அணுஉலை எதிர்ப்பில் எந்த மாறுதலும் ஏற்படாததால் அடுத்த ஆயுதமான அந்நிய சக்திகளின் சதி என்ற கட்டுக் கதையினை நம்ப வைக்கப் படாத பாடுபடுகின்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால் எதற்கெடுத்தாலும் சோனியாவை அந்நிய சக்தி என்றுகூறிக் கொண்டிருந்தவர்களெல்லாம் கூட இப்பொழுது அந்த அன்னையின் கனவுத் (கணவர்) திட்டத்திற்கு ஆதரவு அளித்துக்கொண்டிருக்கும் நிலைதான் .


அடுத்த மிக முக்கியப் பிரச்சனை தி. நகரில் விதி முறைகளை மீறி கட்டப் பட்ட கட்டிடங்களுக்கு நீதி மன்றத்தின் உத்தரவால் மூடுவிழா நடத்தியது.அங்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களுக்கு இந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் முக்கியமான காரணம்.இது மட்டுமல்லாமல் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் (தீ விபத்து ,இயற்கை சீற்றம் ) மக்கள் எளிதாக கட்டிடங்களை விட்டு வெளியேறுவதற்கான வகையில் எந்த வசதிகளும் அந்த கட்டிடங்களில் இல்லை என்பது வெளிப்படை. இக்காரணங்களுக்காக டிராபிக் ராமசாமி பல வருடங்களாகவே நீதி மன்றத்தின் மூலம் போராடி வெற்றி பெற்றிருக்கின்றார் .இதற்காக பலரும் இவரை இணையதளங்களில் பாராட்டி மகிழ்கின்றனர். இவர் தான் உண்மையான இந்தியன் தாத்தா என்று புகழாரம் சூட்டுகின்றனர். இதில் நமக்கும் உடன்பாடே.



ஆனால் இதே போன்று மக்கள் நன்மைக்காக அணு உலையினை எதிர்த்து தீவிரமாகப் போராடி வரும் உதயகுமாரை மட்டும் ஏனோ இவர்கள் தேச விராதியாகப் பார்க்கின்றனர். அந்நிய சக்திகள் இவர் பின்னால் இருப்பதாக எந்த விதமான ஆதாரமும் இன்றி சொல்கின்றனர். உதயகுமார் அணு உலைக்கு எதிரான போராட்டத்தைப் பல வருடங்களாகவே அது தொங்கப்பட்டது முதலாகவே போராடி வருபவர் ,இதற்காக சிறைக்கும் சென்றிருக்கின்றார். அணுஉலையின் அபாயம் குறித்து அவர் எழுப்பும் கேள்விகளுக்கு அரசாங்கத்திடம் உரிய பதில் இல்லை.அதன் பாதுகாப்பு மற்றும், விபத்து ஏற்பட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்கான வசதியின்மை,அணுகதிர் வீச்சின் பரவல் அடுத்த சந்ததிகளுக்கும் பரவும் நிலை என பல அபாயங்கள் உள்ளன. ஆனால் அரசாங்கம் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள தயாராக இல்லை ,மின்சார தேவையினைச் சொல்லி பிரச்சனையின் தீவிரத்தைக் குறைப்பதிலேயே ஆர்வமாக இருக்கின்றது.

அணு உலை மிகபாதுகாப்பனது என சொல்லும் அரசாங்கம் கேரளா மற்றும் மேற்கு வங்கம் அரசாங்கள் எடுத்துள்ள அணு உலை வேண்டாம் என்ற கொள்கையினை மறுபரிசீலினை மாற்றச் சொல்லி இன்றுவரை கேட்கவே இல்லை.


டிராபிக் ராமசாமியின் முயற்சியால் மூடப்பட்ட வணிக நிறுவங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பும்,அங்கு சிறு வியாபாரம் செய்து பிழைத்து வந்த வியாபாரிகளுக்கு ஏற்பட்ட இழப்புக்காக யாரும் டிராபிக் ராமசாமியினை குறை சொல்ல முடியாது.ஏனென்றால் அங்கு எதிர்காலத்தில் விபத்து ஏற்பட்டால் ஏற்படும் இழப்பு இவை எல்லாவற்றையும் விட மிக அதிகமானதவே இருக்கும் என்பதுதான் உண்மை.

இதனையே தான் உதயகுமாரும் செய்து வருகின்றார் என்று எல்லோருக்கும் தெரியும், . அப்படியிருக்க அவரின் முயற்சியினை மட்டும் வெளிநாட்டு சக்தி,கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர் என்று குறை கூறுபவர்கள் கண்டிப்பாக மனநிலை பிழன்றவர்களாகத்தான் இருக்க முடியும்.

ஏனெனில் டிராபிக் ராமசாமின் இந்த நடவடிக்கைக்குப் பின்னால் போட்டி நிறுவனங்களின் சதி மற்றும் அவர் ஒரு பார்ப்பனர் அதனால் நாடார்களுக்கு எதிராகத்தான் இதனைச் செய்கிறார் என்று குறை கூறினால் எவ்வளவு அபத்தமாக இருக்குமோ அந்தளவுக்கு அபத்தம் உதயகுமாரக் குறை சொல்வது.நீங்கள் எந்த மதமாகவோ சாதியாகவோ இருந்தாலும் போராட்டம் மக்களுக்கான நன்மை பயக்கும் விதத்தில் இருப்பின் அதனை அனைவரும் ஆதரிப்பதே சாலச் சிறந்தது.அணு உலையின் விபத்து மிகக் கொடூரமானது எனபதும் அந்த இழப்பினை ஈடு செய்யவே இயலாது என்பதும் மறுக்க முடியாத உண்மை. எதிர்கால நலன் கருதி தி.நகரில் எடுக்கப் பட்ட நடவடிக்கையினை கூடங்குளத்திலும் எடுக்க வேண்டியது அரசின் கடமை.


நெய்வேலியில் நடக்கும் அக்கிரமங்களையும் நாம் கவனத்தில் கொள்வது நல்லது. நெய்வேலி சென்று இருப்பவர்களுக்கு நன்கு தெரியும்.அந்த வளாகத்தில் ஊழியர்களுக்கு செய்தது கொடுக்கப் பட்டிருக்கும் வசதியும் ,ஆனால் அதை சுற்றி வாழும் கிராமங்களின் நிலையும் ஒப்பிட்டு பார்த்தால் அரசின் பாரபட்சம் நன்கு புரியும். இதில் முக்கியமாக் தெரிந்து கொள்ள வேண்டியது அனல் மின் நிலையம் அமைவதற்காக நிலங்களையும் வீடுகளையும் இழந்தவர்களுக்கான இழப்பீடு இன்னும் வழங்கி முடிக்கவில்லை.வேலை உத்தரவாதம் வழங்கப்பட்டவர்களையும் இன்றும் தற்காலிகப் பணியாளராகவே வைத்திருக்கின்றனர். அடுத்ததாக அங்கு நிலத்தடி நீரின் அளவு மிகவும் குறைந்து விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே அணுஉலை போராட்டத்தை எதிர்க்கும் சகோதரர்கள் உண்மை நிலை என்ன என்பதனை தெளிவாக புரிந்து கொண்டு செயல்படவேண்டும்.

Friday, November 4, 2011

பரிதி இளம் வழுதி வேல் முருகன்- பிரச்சனை ஒன்று ! கட்சி வேறு!!






தமிழக அரசியசில் அதிர்வலைய ஏற்படுத்தியிருப்பது பரிதி மற்றும் வேல்முருகன் இருவர் மீதான கட்சி நடவடிக்கை. இருவருக்கும் பல ஒற்றுமைகள் உண்டு அதிரடி அரசியல் செய்பவர்கள்,நல்ல பேச்சாளர்கள்,சட்ட மன்றத்தில் இருவரது பணியும் குறிப்பிடத்தக்கது.
பரிதி பிரபலம் அடைந்ததே சட்ட மன்ற கூட்டங்களில் ஜெயலலிதாவுக்கு எதிராக துணிச்சலுடன் போராடியதாலும் அதற்காவே அவர் சிறையில் அடைக்கபட்டதாலும் தான் ,இவை இரண்டும் இவருக்கு தலைமையுடனான நெருக்கத்தையும் கட்சியிலும் அரசியலிலும் முக்கியப் பதவிகள் கிடைக்கக் காரணமாக அமைந்தன.
வேல்முருகன் கணீர் குரலுடன் பேசக்கூடியவர் ,தன் வசீகரப் பேச்சால் பல இளைநர்களை பாட்டாளி மக்கள் கட்சியின் பக்கம் ஈர்த்தவர். நெய்வேலி நிலச்சுரங்கத்துக்காக நிலங்களை இழந்தவர்களின் உரிமைக்காகப் போராடியவர் ,ஈழத்தமிழர் போராட்டங்களில் தன்னை அதிகம் ஈடுபடுத்திகொண்டவர் என இவருக்குப் பல முகங்கள் உண்டு .இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் கருணாநிதியின் அன்புக்குப் பாத்திரமானவர் என்ற நற்பெயரும் உண்டு .

ஆனாலும் இவ்வளவு திறமை வாய்ந்த இருவரையும் அவர்கள் சார்ந்த கட்சிகள் புறக்கணித்தது ஏன்? வெளிப்படையாக கட்சிக்கட்டுப்பாட்டை மீறி விட்டதால் நீக்கப் பட்டதாக சொல்லப்பட்டாலும் ,இரு கட்சிகளின் தலைமையுமே தனக்குப் பிறகு தன் தனயனிடமே கட்சி இருக்க வேண்டும் என பொதுவான கொள்கையுடன் இருக்கின்றன. எனவே அந்த இருவர் ஸ்டாலின் மற்றும் அன்புமணியின் சொல் கேட்டு நடப்பவர்களே அந்த கட்சிகளில் நீடிக்க முடியும் என்ற மோசமான சூழல் நிலவவுது அனைவருக்குமே தெரியும் .

இது போன்ற நடவடிக்கைகள் மூலம் நாம் வாழ்வது ஜனநாயக நாட்டிலா அல்லது மன்னராட்சியின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கின்றோமோ என்ற அச்ச உணர்வு ஏற்படுகின்றது .எல்லா திறமையும் வாய்ந்தவர்கள் தங்கள் சுய உழைப்பின் மூலம்முன்னேறியவர்களாகிய இந்த இருவரையும் ஒரே நொடியில் தங்கள் சுய லாபத்திற்காக ஒதுக்கித் தள்ளுவதென்பது ஜனநாயகதிதின் தோல்வி ஆகும் .

கட்சிகள் அனைத்தும் இன்று கார்பரேட் நிறுவனங்களை போல மாறிவிட்டன. லாபம் ஒன்றே நோக்கம் இதனால் தனி நபர் திறமைகள் ,உழைப்பு எவற்றுக்கும் மதிப்பளிப்பதில்லை ,யார் சிறந்த அடிமையாக இருக்கத் தயாரோ அவருக்கு சகலமும் கிடைக்கும். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் பன்னீர்செல்வம் நிர்வாகத் திறமை,பேச்சுத்திறமை எனஎதுவும் கிடையாது ஒரே தொழில் ஜெயலலிதாவுக்கு சிறந்த அடிமையாக இருப்பது இதனால் முதல்வர் பதவியே கிடைத்தது.

இவை அனைத்துமே நல்லப் பண்புடைய ,தலைமை தாங்கும் தகுதி நிரம்பிய மனிதர்களை அரசியலில் இருந்து நிராகரிக்கச் செய்கின்றது. தலைவனுக்கு துதிபாடும் மனிதர்களினால் நாட்டு முன்னேற்றத்திற்கு எந்த நன்மையையும் இல்லை.இது போன்ற அரசியல் அடிமைகள் தன் தலைவனைப் போலவே தம் மக்கள் நலன் மட்டுமே குறிக்கோள் என்றே செயல்படுவர். இந்த நிலை மாற முக்கியப் பணியாற்ற வேண்டியது பத்திரிக்கைகள் மட்டுமே ,தலைவர்களைப் பிரதானப்படுத்தும் நிலையினை தவிர்க்க வேண்டும்,இல்லையென்றால் சர்வாதிகாரம் ஏற்பட வழிவக்குக்கும்.