Tuesday, September 29, 2015

சேலம் சிவராஜ் வைத்தியரும் பாலியல் நிபுணர் நாராயண ரெட்டியும் : இரு துருவங்கள்




தமிழ் நாட்டு இளைஞர்களுக்கு இருவரைப் பற்றியும் எந்த அறிமுகமும் தேவை இல்லை. அதிலும் சிவராஜ் அவர்களுக்கு பெரிய ரசிகர் கூட்டமே உண்டு. தங்கள் மனம் கவர்ந்த கனவுக் கன்னிகளால் தூக்கத்தை தொலைத்தவர்கள்  இவரின் பேச்சைக் கேட்ட பின் தூக்கமே வராமல் பீதி அடையும் நிலைக்கு செல்கின்றார்கள்.

இதற்கு மாறாக நாராயண ரெட்டி அவர்கள் பாலியல் குறித்து விழிப்புணர்வினை உண்டாக்க பல்வேறு வார மற்றும் தினசரிகளில் எழுதித் தள்ளினார், ஆனால் அவரின் கருத்துக்கள் இளைஞர்களை சென்றடையவே இல்லை.

பல தலைமுறைகளாக மருத்துவம் செய்து வருவதாகக் கூறிக் கொள்ளும் சிவராஜ் பாலியல் குறித்து பயத்தினை மட்டுமே ஏற்படுத்துவது தான் இவர்கள் தலை முறை தலை முறையாகக் கற்றுக் கொண்ட மருத்துவ தர்மமா ? (medical ethics ). ஆண்களுக்கு இயற்கையாக நடக்கும் (Physilogical changes ) மாற்றங்களை பெரிது படுத்தி, அதன் மூலம் தன் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ளும் மலிவான தந்திரத்தை எப்போது இவர் நிறுத்துவார் என்று தெரியவில்லை. இந்தத் தவறுதலான போக்கு பல ஆண்களுக்கு திருமணத்திற்கு முன் பலவிதமான குழப்பங்களை உண்டாக்குகின்றது. இவர் சொல்லும் அனைத்துக் குறிகுணங்களும்  தனக்கும் இருப்பதாக எண்ணி அச்சப்படுகின்றான். ஒரு சிலர் இந்த அச்சத்தின் உச்சமாக முதலிரவுக்கு முன் தூக்கில் தொங்கிய சம்பவங்களும் நடந்திருக்கின்றன.




பாலியல் குறித்த தெளிவான ஒரு புரிதலை கல்விக்கூடம், குடும்பம் மற்றும் சமுதாயம் என்ற எதுவுமே கற்றுத் தருவதில்லை. அது ஒரு மறைபொருளாகவே இருப்பதினால் இது போன்று தொலைக்கட்சியில் மருத்துவர்கள் என்று கூறிக் கொண்டு பேசுபவர்களின் கூற்றை நம்பி ஏமாறுகின்றனர் .இது போன்று ஏமாறுபவர்களின் பட்டியலில் படித்தவர்கள் படிக்காதவர்கள் என அனைவரும் அடங்கி இருக்கின்றனர் என்பது தான் வேதனையான செய்தி.

இப்படிப்பட்ட ஒரு சமூகத்தில்  பாலியல் குறித்த படிப்பில் முனைவர் பட்டம்  பெற்ற நாரயண ரெட்டி அவர்கள், மக்களுக்கு அச்ச உணர்வினைப்போக்க பல போராட்டங்களை சந்திக்க வேண்டி இருந்தது.முதலில் மருத்துவமனை ஆரம்பித்தபொழுது  sex clinic என்ற  பலகை வைக்கக் கூடாது என்று நிர்ப்பந்தத்திருக்கின்றனர். இந்தத் தடைகள் ஒருபறம் இருக்க பரம்பரை சித்த மருத்துவர்கள் எந்த வித அடிப்படை அறிவியல் அறிவும் அற்று , வெறுமென மக்களின் அறியாமையை மூலதனமாகக் கொண்டு பொய் பிரச்சாரம் செய்வதினை முறியடிக்கத் தான் அதிகமாக அவர் போராட வேண்டி இருந்தது


இருப்பினும் இந்த தவறான பிரச்சாரத்தின் காரணமாக இளைஞர்களில் ஒரு சிலர் திருமணத்துக்கு முன் மருத்துவர்களை சந்திக்கின்றனர். ஆனால் அவர்கள் சந்திப்பது இது போன்ற ஏமாற்று பேர் வழிகளைத்தான் , அதை விட்டு விட்டு நாராயண ரெட்டி போன்ற மருத்துவரை அணுகலாம்.அதற்கான வாய்ப்பு இல்லாதவர்கள் சித்த மருத்துவத்தில் முறையான பட்டம் பெற்ற  B.S.M.S.(Bachelor of siddha medicine and surgery) மருத்துவர்கள் உங்கள் ஊருக்கு அருகாமையிலோ அல்லது அரசு மருத்துவ மனைகளில் உள்ள சித்த மருத்துவப் பிரிவிலோ இருப்பார்கள். அவர்கள் நிச்சயம் தகுதியான ஆலோசனைகளை வழங்குவார்கள் .

சேலம் சிவராஜிடம் நீங்கள் ஏமாந்ததன் பயனாக அவருக்குக் கிடைத்தவை ஏராளம், சேலம் பக்கம் சென்றவர்களுக்குத் தெரியும், தற்பொழுது சேலத்திலே பெரிய நன்கு நட்சத்திர விடுதி இவருடையது தான் ,அது மட்டுமன்றி, சித்த ,ஆயுர்வேதா மற்றும் ஹோமியோபதி மருத்தவக் கல்லூரிகளின் உரிமையாளராகவும் ஆகி இருக்கின்றார்.

இந்தப் பதிவின் நோக்கம் போலிகளை நம்பி ஏமாறாதீர்கள் என்பதே , எவர் மீதும் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி இல்லை.ஒரு படித்த சித்த மருத்துவனாக சமுதாயத்திற்கு என்னுடைய சிறிய பங்களிப்பு தான் இந்தப் பதிவு.  பாலியல் குறித்த அடுத்த பதிவில் வெகு விளக்கமாகக் கூறுகின்றேன் .

தலைப்பு ;பாலியல்  உணர்வு என்பது ஷங்கர் படமா? ராம் படமா ?

நன்றி 
செங்கதிரோன்

Thursday, September 24, 2015

திரிஷா இல்லைனா நயன்தாரா படம் சொல்லும் பாடம்

விர்ஜின்பசங்க  பாவம் சும்மா விடாது என்ற வசனம் தற்பொழுது டீன் ஏஜ் பசங்களின் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்  ஸ்டேட்டஸ் ஆகி விட்டது . ஒரு தலையாகக் காதலித்தவன், தினமும் லுக் விடுகின்றவன் என எல்லா வகையினருடன் உண்மையாகக் காதலித்தவர்களும் இந்த வசனம் தங்களுக்கானது என்ற நம்பத் தொடங்கி விட்டனர்.

பெண்கள் மீது  அனைத்து ஆண்களும் இதே போன்ற கருத்து  கொண்டிருப்பதாகவும் ஒரு நிலை உண்டாகி இருக்கின்றது.ஆண்கள் நிறைந்த உலகமாக சினிமாவும் இருப்பதால் அங்கே ஆணின் உணர்வுகள் மட்டுமே பிரதிபலிக்கப்படுகின்றது. பெண்  என்பவள் பக்கம் இருக்கும் கருத்துகள் குறித்த நியாங்கள் மௌனிக்கப்படுகின்றன.ஒரு தரப்பின் நியாயங்கள் மட்டும் முக்கியத்துவம் கொடுத்து பெண்கள் குறித்த மோசமானப் பார்வையை உண்டாக்குகின்றன.

எடுத்துக்கட்டாக ஜி .வி .பிரகாஷ் தன்னை ஏமாற்றிய பெண்ணின் வீட்டிற்கு எதிரே நின்று சத்தம் போடுவது போல எந்தப் பெண்ணாவது தன்னை ஏமாற்றிய ஆணின் வீட்டின் முன்னால் சத்தம் போடுவார்களா ? வீட்டின் ஒரு மூலையில் யாருக்கும் கேட்காதவாறு அழத்தான் முடியும் .



அதே போல தன்னை ஏமாற்றிய பெண்ணின் மீது அமிலம் வீசுவது , கொலையே செய்வது அல்லது புகைப்படங்களை ஆபாச இணையதளங்களில் வெளியிடுவது என்ற மோசமான காரியங்களில் ஆண் ஈடுபடுவது போல் எந்தப் பெண்ணும் செய்வது இல்லை. இதற்கு காரணம் ஆணுக்கு இந்த சமூகத்தில் இருக்கும் சுதந்திரமும் வரம்பு மீறய அதிகாரமும் தான்.

பெண் ஆணிடமிருந்து விலகிச் செல்வதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன.  முதலாவது குடும்பம் ,உறவுகள் ஏற்படுத்தும் அழுத்தங்களுக்கு அவள் அடிபணிய வேண்டிய நிலை ஏற்படுகின்றது.அடுத்து ஆண் பெண் மீது செலுத்தும் அதிகப்படியான அதிகாரம், தாங்கள் காதலிக்கத் தொடங்கிய அடுத்த நாளிலிருந்து அவளின் உடை, நண்பர்கள் , அலுவலகம் ,மொபைல் என்ற அனைத்தும் அவனின் ஆளுக்கு கீழ் வர வேண்டும் என்று எண்ணுகிறான். அதற்கு உடன்படாத பொழுது விரிசல் ஏற்படுகின்றது. ஒரு கட்டத்தில் பெண் சலிப்படைந்து விலகுகின்றாள். அப்பொழுதும் ஆண் தன்  தவறை உணர மறுக்கின்றான். வீட்டில் தன் அப்பாவுக்கு அடிமையாக இருக்கும் அம்மாவைப் போலவே தன் காதலியும் இருக்க வேண்டும் எண்ணுகின்றான்.


அதற்காக உள்நோக்கத்துடன் பெண்கள் பழகி ஆணை ஏமாற்றும் சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன , இருப்பினும் இது இரண்டு பக்கமும் நிகழ்கின்றது. ஆண் தன் காதலி அல்லது தன்னை விட்டுப் பிரிவதை மிக உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அணுகுகின்றான் , அதிலிருந்து வெளி வர இயலாமல் அதைப் பற்றியே சிந்தித்து சில அந்தப் பெண்ணுக்கு கேடு விளைவிக்கின்றான்.இதனை ஒரு கோழைத்தனமான முடிவு என்று தான் எண்ணுகின்றேன். ஆண் இந்த ஏமாற்றத்தினை பிரிவை மிக முதிர்ச்சியுடன் தான் அணுக வேண்டும். 

அறிவியல் பூர்வாமாக பெண் மிக சீகிரமாக மனதளவில் முதிர்ச்சி அடைகின்றாள் , எனவே ஒத்த வயதில் இருக்கும் ஆண் பெண் உறவில் ஏகப்பட்ட சிக்கல்கள் ஏற்படுகின்றன.அதற்காக இந்த வயதுப் பிரச்சனை மட்டும் தான் ஒற்றைக் காரணம் என்று சொல்லி தப்பித்து விட முடியாது 

ஆணுக்கு பெண்ணின் சிக்கல்களை புரிந்து கொள்ளும் பக்குவம் வர வேண்டும். இந்தப் புரிதலை ஏற்படுத்துவதில் சமுதாயத்திற்கு முக்கியப் பங்குண்டு. அந்த சமுதாயத்தின் ஒரு முக்கிய அங்கமான சினிமா ஆணை ஒரு கோழையாகவும் , மனதளவில் ஒரு முதிர்ச்சி அற்றவானாகவும் தொடர்ந்து காண்பிப்பது என்பது குடிப்பதானால் ஏற்படும் பாதிப்பைப் போன்று பெண்களால் பாதிக்கப்பட்டால் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்ற தவறான முன்னுதாரத்தினை ஏற்படுத்துவது சமூக சீரழிவுக்கே வழி வகுக்கும் .

குறிப்பாக நிறைய பெண் இயக்குனர்கள் சினிமாவுக்கு வர வேண்டும், பெண்களின் உணர்வுகளை ஆணுக்கு உணர்த்தும் வகையிலான நல்லப் படங்களை எடுக்க வேண்டும்.


நன்றி 

செங்கதிரோன்

விவேகானந்தரின் புகழை மறைத்த கருணாநிதி



வல்லபாய் படேல் சிலையை குஜராத்தில் அமைக்க முயலும் மோடியின் முயற்சிக்கும் , திருவள்ளுவர் சிலையை கன்னியாகுமரியில் அமைத்த கருணாநிதியின் செயலுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாகவே எண்ணுகின்றேன்.ஏனென்றால் குஜாரத் மட்டுமல்ல இந்தியாவிற்குமே அடையாளமாகத் திகழும் காந்தியின் புகழை மட்டுப்படுத்தவே படேலின் சிலையின் மிக பிரம்மாண்டமாக அமைத்து  மோடி திருப்திபட்டுக்கொள்ள நினைக்கின்றார்.

முதலில் விவேகானதருக்கும்  தமிழகத்துக்குமான  தொடர்பு குறித்து பார்ப்போம் .தெரிந்த செய்தி அவர் கன்னியாகுமரியின் பாறையில் தவம் செய்ததும் அதனால் அங்கே அவருக்கு மணி மண்டபம் கட்டி விவேகானந்தர் பாறை ஒரு சுற்றுலா தளமாக விளங்கி வருவதும், தெரியாத செய்தி  அவர் வரலாற்றில் இடம் பெற மிக முக்கியக் காரணமாக இருந்தது ஒரு தமிழரின் முயற்சி என்பதுதான்.

வரலாற்று சிறப்பு மிக்க அந்த உதவியினை செய்தது ராமநாதபுர மன்னர் பாஸ்கர சேதுபதி. விவேகாந்தருக்கு சிகாகோவில் நடைபெற்ற  உலக ஆன்மீக மாநாட்டில் பேச வாய்ப்பு கிடைத்தாலும்  பயண செலவுக்கு பணம் இல்லை. எனவே தமிழகம் வந்த அவர் பாஸ்கர சேதுபதியிடம் உதவி பெற்றே அமேரிக்கா சென்றார்.அது மட்டுமன்றி அமேரிக்கா சென்று திரும்பிய விவேகானந்தரை வரவேற்க சென்னை சென்ற பாஸ்கர சேதுபதி குதிரை பூட்டிய வண்டியில் அவைகளை அகற்றி விட்டு தானே விவேகானந்தரை வண்டியில் வைத்து ஊர்வலமாக அழைத்து சென்றார்.  அது மட்டுமன்றி விவகானந்தரை தன் பங்களாவில் தங்க வைத்தார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அந்த பங்களாவே தற்பொழுது விவேகாந்தர் இல்லம் என்று அழைக்கப்படுகின்றது .  அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அந்த உதவி செய்தவரின்  பெயர்  விவேகனந்தரின் விக்கிபீடியா பக்கத்தில் இடம் பெறவே இல்லை.

பாஸ்கர சேதுபதி


வங்காளத்தில் பிறந்த ஒருவருக்கு தமிழன் செய்த இந்த உதவிக்கு கைமாறாக வங்காளம் ஏதேனும் அவரை சிறப்பிக்க முயற்சி எதுவும் எடுத்ததாகத் தெரியவில்லை. வந்தாரை  வாழவைக்கும் நாம் சின்ன உதவி ஒருவன் செய்தாலும் பெரிய அளவில் அவர்களைப் பாராட்டுவதே தொழிலாகக் கொண்டுள்ளோம்.

எனவே  தான் கருணாநிதி விவேகநாதர் பாறை கன்னியாகுமரியின் அடையாளமாக இருக்கக்கூடாது என்றி எண்ணியே மாபெரும் திருவள்ளுவர் சிலையினை அமைத்திருக்கக் கூடும்.பக்கத்தில் உள்ள கர்நாடகாவில் நம் திருவள்ளுவர் சிலையை திறக்க நாம் பட்ட பாடு தெரியும். நம் மாநிலத்தில் பிறந்த ஒருவரை யாரும் அவ்வளவு எளிதாக அங்கீகரிப்பதில்லை , ஆனால் நாமோ எந்த மனத்தடையுமன்றி அடுத்த மாநிலத்தவரை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தோடு இருக்கின்றோம் .



இருப்பினும்  கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையினையும் தொடங்கி வைத்து கருணாநிதி எனபது தான் வரலாறு. திருவள்ளுவர் சிலையினை  கன்னியாகுமரியில் அமைத்து மிக சரியான முடிவு , ஏனென்றால உலகப் பொது  மறை படைத்த ஒருவரின் புகழ் பரவ அதுவே சரியான இடம். 


இன்றும் நாளையும் கன்னியாகுமரியின் அடையாள சின்னமாக திருவள்ளுவர் சிலையே திகழும். 

இத்தருணத்தில் கருணாநிதிக்கும் மோடிக்கும் உள்ள ஒற்றுமை குறித்து நான் எழுதிய முந்தையப் பதிவினையும் படித்துப் பாருங்கள் 



Wednesday, September 23, 2015

குழந்தைகளுக்கான கழனியூரனின் இரவு நேரக் கதைகள்

சில மாதங்களுக்கு முன்னர்  அமெரிக்காவில் உள்ள என் நண்பனுடன் மெசெஞ்சரில் (Messenger ) உரையாடிக் கொண்டிருந்தபொழுது, அவன் , மச்சி என் பொண்ணுக்கு தூங்க செல்லும் முன் கதை சொல்லும் நேரம் என்று சொல்லி நாளைக்குப் பேசலாம் , என்றான்  நான் கேட்டேன் என்ன கதை சொல்லுவாய் என்று, அவன் அந்தப் புத்தகங்களின் புகைப்படங்களை அனுப்பினான். அனைத்தும் ஆங்கில புத்தகங்கள். 

பின்னர் எனக்கு கழனியூரனின் "மண்ணின் கதைகள் மக்களின் கதைகள்" என்ற புத்தகத்தினை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிராமியக் கதைகள் என்று எண்ணித்தான் படிக்க ஆரம்பித்தேன், ஆனால் அனைத்தும் குழந்தைகளுக்கு தாத்தா பாட்டி சொல்லுவதாக அமைக்கப்பட்டிருக்கும் நீதிக் கதைகள் .



பெரும்பாலான கதைகள் ஒரு பக்கம் இரண்டு பக்கங்களே கொண்டவை , பலவேறு கிராமிய சார்ந்த சொற்களும் , பழக்க வழக்கங்கள் குறித்த செய்திகளும் ஏராளம் உள்ளன. எனவே நகரங்களிலும் வெளிநாடுகளிலும் வசிப்பர்வர்களின் குழந்தைகள் நம் நாட்டைப் பற்றி  புதுபுது செய்திகளை அறிந்து கொள்ள இந்தப் புத்தகம் பயன்படும் .நீதிக் கதைகள் நிறைய இருப்பதால்  நல்லொழுக்கம் இயல்பாக வளர இந்தக் கதைகளை அவர்கள் கேட்பது மிக உதவியாக இருக்கும்.

மொத்தம் 111 கதைகள் கொண்ட இப்புத்தகம் உயிர்மை வெளியீடாக வந்துள்ளது. விலை ரூ.175.

இந்தப் புத்தகத்தினை குழந்தைகளுக்கான பிறந்த நாள் பரிசாகவும் கொடுக்கலாம்.

கழனியூரன்





Tuesday, September 22, 2015

அதிஷாவின் பேஸ்புக் பொண்ணு -குட்டி விமர்சனம்

ஒரே மூச்சில் படித்து விடக்கூடிய அளவுக்கு மிக குறைந்த பக்கங்களே (120) கொண்ட புத்தகம். நான் இரண்டு மதிய உணவு இடைவேளையில் படித்து முடித்து விட்டேன்.இந்தப் புத்தகத்தை குட்டீஸ்களுக்கு சமர்ப்பித்திருக்கின்றார் ,குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்குமான புத்தகம் தான் இது.

மொத்தம் 15 கதைகள் கொண்ட இந்தப் புத்தகத்தில் அனைத்துமே எதோ ஒரு வகையில் நம்மை ஈர்க்கக் கூடியதாகவே உள்ளன.அதிகம் சிரிக்க வைக்கக் கூடிய சாமியார் மாற்றும் பேஸ்புக் பொண்ணு கதைகள், சோகம் ஏற்படுத்தும் கெட்டவார்த்தை கதை மற்றும் குழதைகளுக்கான கதைகள் என பயணிக்கும் இந்த புத்தகம் படித்த அனுபவம் ஒரு முழு திருப்தி அளிக்கும்  விதமாகவே இருக்கும்.

பாஸ்கர் சக்தி அணிந்துரை எழுதியிருக்கின்றார்.அவர் குறிப்பிட்டது போல  அதிஷா குழந்தைகள் உலகத்துக்கு நம்மை அழைத்து செல்ல முயன்றிருக்கின்றார் .

அதிஷாவின் இந்தக் கன்னி முயற்சிக்கு வாழ்த்துக்கள். நீங்களும் இந்தப் புத்தகத்தினை வாங்கிப்  படித்து வளர்ந்து வரும் எழுத்தாளனை ஊக்குவியுங்கள்.

விலை ரூ.100
உயிர்மை பதிப்பகம்

நன்றி
செங்கதிரோன்