Friday, April 29, 2016

நடிகர் சங்கத் தேர்தல் ஒரு போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்:

காதல் பிரச்சனை , சொத்து பிரச்சனை , வாரிசு பிரச்சனை ,பங்காளி பிரச்சனை என ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கு சேர்த்து நடந்த தேர்தல் தான் நடிகர் சங்கத் தேர்தல். ஊர் ரெண்டு பட்டாக் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்ற பழமொழி தலைகீழாகி கூத்தாடிகள் ரெண்டு பட்டா ஊருக்கேக் கொண்டாட்டம் என்ற நிலையாக தேர்தல் முடியும் வரை தமிழக மக்கள் அனைவரும் தங்கள் சொந்தப் பிரச்சனையை மறந்து நடிகர் சங்கப் பிரச்சனையில் மூழ்கிவிட்டனர்.

காலையில் ஒரு குழு மற்றோருக் குழுவைத் திட்ட மாலையில் அந்தக் குழு  அவர்களை பதிலுக்குத் திட்ட , மக்கள் இவை இரண்டையும் கண்டு களித்தனர்.இந்த முழுப் பிரச்சனைக்கும் மூலக் காரணமாக சொல்லப்பட்ட நபர் வரலட்சுமி சரத்குமார்.என்னதான் வண்டு முருகன் தொடந்து இதற்காகப் போராடி வந்தாலும் விஷால் களத்தில் குதித்த பிறகு தான் இந்த தேர்தல் வேகம் பிடித்தது.


வரலட்சுமிக்காக ஏன் விஷால் இறங்கினர் என்பதனை ஒரு கற்பனைக் கதை மூலம் பார்ப்போம்:
 தன அப்பா சரத்குமாருடன் ராதிகா வீட்டில் வசித்து வந்த வரலட்சுமி ஒரு நாள்  இரவு தன்  அறையில் படு சத்தமாகப் பாட்டைப் போட்டு நடனம் ஆட , ராதிகாவின் மகள் ரேயான் கோபமாகி அவரைப் பாட்டை நிறுத்த சொல்கிறார்.  அதிக சத்தத்தினால் தன் தோழியுடன் தொலைபேசியில் பேச முடியவில்லை என்று அவர் கோபப்பட இருவருக்கும் தகராறு அதிகமாக ,அந்த நேரத்தில் படப்பிடிப்பு முடிந்து அசதியாக வந்த ராதிகா, தாய் பாசத்தினால் ரேயானுக்கு பரிந்து பேச சண்டை ராதிகாவுக்கும் வரலட்சுமிக்கும் முற்ற , ஒரு கட்டத்தில் வரலட்சுமியிடம் என் வீட்டை விட்டு வெளியே போ என்கின்றார். 



 அழுது கொண்டே அணிந்திருந்த இரவு உடையுடன் வெளியேறுகின்றார், தன் சோகத்தைப் பகிர்ந்து கொள்ள நண்பன் விஷாலைத் தேடி செல்கின்றார். தன் ஆருயிர் தோழியின் அழுகையின் காரணம்தெரிந்தவுடன்  விஷால் துடிதுடித்துப் போகின்றார். இருப்பினும் அவர் தந்தை சரத்திடம் முறையிடச் சொல்கின்றார் . ஆனால் சரத்தோ இந்தப் பிரச்சனை குறித்து ராதிகா மூலம் முன்பே அறிந்திருந்ததால் தன அன்பு மகளையே கண்டிக்கின்றார். இதனைக் கேட்ட விஷால் கோபத்தின் உச்சிக்கே சென்று இவர்களின் கொட்டத்தை நான் அடக்குகின்றேன் என்று சபதம் எடுக்கின்றார் . அதனால் இதனை பாஞ்சாலி சபதம் போல் வரலட்சுமி சபதம் என்று கூறலாம்.(இந்தக் கதை புனைவாக இருந்தாலும் உண்மையாக நடந்திருக்க வாய்ப்புள்ளது என்று உங்களுக்கும் தெரியும் )

பலிகடா சிம்பு:
இந்த நடிகர் சங்க விவகாரத்தில் பலிகடா ஆனது நம்ம சிம்பு தான் , ஏக வசனத்தில் எதிரணியினரைத் திட்டி தன்னை தரம் தாழ்த்திக் கொண்டதோடு மட்டுமன்றி , தேர்தலிலும் தோற்று பரிதாப நிலைக்குப் போனார்.

ரெண்டுகெட்டான் பாக்யராஜ் :
அடுத்து பாக்யராஜ் , முதல் நாள் பாண்டவர் அணி கூட்டத்தில் கலந்து கொண்டவர் , அடுத்த நாள் ராதிகாவுடன் பத்திரிக்கையாளர் கூட்டத்தில் உட்கார்ந்திருந்ததை பார்த்து அவர் குடுமபம் மட்டுமல்ல , தமிழ் நாட்டில் உள்ள அனைத்துக் குடும்பங்களுமே அதிர்ச்சி அடைந்தனர்.

என்னடா நடக்குது:
ஆச்சர்யமூட்டும் செய்தி ஒன்று என்னவென்றால் கஸ்தூரி ராஜா இயக்கி பல ஆண்டுகளாக வெளிவராமல் இருக்கும் படத்தின் நாயகன் உதயா இந்தத் தேர்தலில் போட்டியிட்டது தான். இவர் இயக்குனர் ஏ.எல் .விஜயின் சகோதரர். சினிமாவிலே நடிக்காத ஒருவர் எப்படி நடிகர் சங்கத்தில் போட்டியிட்டார்  என்று தெரியவில்லை. வெற்றியும் பெற்றார் என்பதுதான் காலக் கொடுமை.

மோசமானவங்களிலேயே முக்கியமானவங்க இவுங்க :
தொலைக்காட்சிகளில் தேர்தல் குறித்த விவாதங்களில் அரசியல் வாதிகளின் சண்டையை மிஞ்சும் அளவுக்கு இவர்களின் சண்டை மிக மிக தரம் தாழ்ந்ததாக இருந்ததைப் பார்த்தவர்கள் அரசியல்வாதிகளின் அருமையை உணர்ந்தனர்.


தொடரும் பெயர் அரசியல் :
நடிகர் சங்கத்தின் பெயர் மீண்டும் அரசியலானது. ரஜினி தமிழ் நடிகர் சங்கம் என்று சொல்ல , கமல் உலக நாயகன் என்பதால் உலக நடிகர் சங்கம் என்று சொல்ல , நம்ம தல கவுண்டமணி நடிகர் சங்கம் என்று பெயர் வையுங்கள் என்று  கூறி எல்லோரையும் ஆப் ஆக்கினார். இருப்பினும் வெற்றி பெற்ற பிறகு பொருளார் கார்த்தி . பெயர் மாற்றுவதை  (தமிழ் -தெலுங்கில் நடிப்பதாலோ என்னவோ) விட ஏகபப்ட்ட வேலைகள் உள்ளன என்று கூறி அந்த பிரச்சனையினை திசை திருப்பினார். குழந்தை பிறந்தால் பெயர் வைப்பது தான் முதலில் நடக்கும், அதன் பிறகு தான் மற்றவை. பிற மாநிலங்களில் அந்த அந்த மொழிகளைக் கொண்டு பெயர் இருக்க இங்கு மட்டும் ஏன் தென்னிந்திய என்ற பெயர் இருக்க வேண்டும் ? தெலுங்கர்களுக்கு எதிராகக் கம்பு சுற்றும் சீமான் தான் சார்ந்த துறையில் நடக்கும் இந்த அநீதிக்கு எதிராக வாய் திறக்க மறுப்பது ஏன்? 

தூக்கி அடீச்சுடுவன் பாத்துக்க ராதாரவி:

ராதாரவி பற்றிக் கூறாமல் நடிகர் சங்க வரலாறே இல்லை . நடிகர் சங்கத்தைப் பல காலம் பராமரித்து வந்தவர் , இடையில் கொஞ்சம் நிலை தடுமாற அவரின் பங்களிப்பு எல்லாம் வீணாகி அவர் செய்த கெட்டவைகள் அவரை நடிகர் சங்கத்தை விட்டுக் கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளி விட்டு விட்டது என்றே சொல்லாம் .தவளையும் தன் வாயால் கெடும் என்றப் பழமொழி இவருக்கு நன்கு பொருந்தும்.

உண்மையான தருமர்: 
பாண்டவர்களில் தருமர் எவ்வளவு நல்லவரோ அவரை விட நல்லவரான நடிகர் சங்கத் தலைவர் நாசர் தான் பாவம் , இவரின் நண்பர்  பத்திரிக்கையாளர் ஞானி சொன்னது போல அப்பழுக்கற்ற மனிதரான இவர் ,கமலின் அன்புக் கட்டளைக்குப் பணிந்து போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கின்றார் . நடிகர் சங்கத்திற்கு இதுவரை தலைவர்களாக இருந்தவர்களிலேயே இவர் தான் மிக மிக பொருத்தமானவர். 

தமிழ் நாட்டில் நடந்த எல்லாத் தேர்தல்களையும் விட  ,இந்த நடிகர் சங்கத்  தேர்தல் குறித்து  மட்டும் தான் அனைத்து ஊடகங்களிலும் மக்கள் மத்தியிலும் அதிக கவனம் பெற்ற ஒரு தேர்தலாக இருந்தது.


அடுத்து தமிழ் நாடே காத்திருப்பது எதற்காகவென்றால் , நடிகர் சங்கக் கட்டடம் கட்டி அதில் விஷாலுக்கு வரலட்சுமிக்கும் திருமணம் நடக்கையில் இதயம் இனித்தது, கண்கள் பனித்தன என்று விஷாலும் சரத்தும் இணைவதைப் பார்ப்பதற்காக தான் என்றால் மிகையில்லை.

முழுப்பதிவையும் பொறுமையாகப் படித்ததற்கு மிக்க நன்றி நண்பர்களே 

செங்கதிரோன் 

நாம் தமிழர் கட்சியும் நண்டு ஜெகனும்:

சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சி தமிழகம் முழுவதும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.தமிழ் தேசியம் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது தான் திராவிடக் கட்சிகள் , ஆனால் காலப் போக்கில் தேசிய அரசியலில் ஈடுபட்டு தமிழ் தேசியம் கொள்கையை  பரணில் தூக்கி வைத்து விட்டார்கள்.

திராவிடக் கட்சிகளின் கவனம் சமூக நீதி ,அடிப்படை வசதிகள் , கல்வி மற்றும் சுகாதார வசதிகளில் அதிக கவனம் செலுத்தி, மாநில சுயாட்சி குறித்துக் கூட அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. சமஸ்கிருத திணிப்பு எதிர்த்த திராவிட கட்சிகள் ஆங்கில மோகத்தில் இருந்து மக்களை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனாலேயே தான் தென்னைந்தயாவிலேயே தமிழகத்தில் மட்டும்   தான் பள்ளிகளில் தாய்மொழிக் கட்டாயம் இல்லை என்ற அவல நிலை நிலவி வருகின்றது.

நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கை குறித்து அக்கட்சியைச் சேர்ந்த தம்பிகள் முகப் புத்தகம் ,உங்கள் குழாய் (Youtube) என ஒரு இடம் விடாது சிலாகித்து எழுதுகின்றனர்.ஆனால் அரசியல் பார்வையாளர்களிடம் அவர்களின் தெலுங்கு மக்களுக்கு எதிரான எதிர்ப்பு தான் அதிகம் விமர்சிக்கபடுகின்றது. 

தெலுங்கர்கள் சீமானுக்கெதிராக வழக்கு


உண்மையிலே தமிழகத்தில் தெலுங்கர்களின் ஆதிக்கம் இருக்கின்றதா?
தமிழுக்கு அடுத்து அதிகம்  பேசும் மொழியாகத் தெலுங்கு தான் இருக்கின்றது. அதுவும் வெறும் 5%தான், அவர்களின் எண்ணிக்கையும் இதே அளவில் தான் இருக்கும் அல்லது கூடுதலாக 5-10% அதிகமாக  இருக்கும். அளவில் குறைந்த இந்த எண்ணிக்கையைக் கண்து ஏன் சிமான் பயப்படுகின்றார். அவர்கள் சொல்லும் காரணம் என்னவென்று எனக்கு முழுமையாகத் தெரியாது .


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கனக்ஷன் நிகழ்ச்சி பார்க்கும் போது தான் தமிழகத்தில் வசிக்கும் தெலுங்கர்கள் தமிழ் மொழி குறித்து எவ்வளவு அலட்சியத்துடன் இருக்கின்றனர் என்பது தெரிய வந்தது.இந்த இணைப்பில் உள்ள நிகழ்ச்சியினைப் பார்த்தால் தமிழகத்தில் வாழும்  தெலுங்கு பேசும் மக்களின் தமிழ் குறித்து அவர்களின் அறியாமை நன்கு விளங்கும்.




இந்த நிகழ்ச்சியில்  படங்களை இணைத்து சொல்லப்படும்  சொல் விளையாட்டு  என்பதனால் ஒரு சில தமிழகத்துக்கே உரித்தான கலாச்சார சொற்கள் வரும். (உ-ம் :தொன்னை , இலக்கியம் சார்ந்த சிலப்பதிகாரம் போன்ற சொற்கள்  மற்றும் தமிழகத்தின் பழம்பெரும் தலைவர்கள் அண்ணா ,காமராஜர் )

நான் பார்த்தவரையில் தமிழைத் தாய் மொழியாக கொண்டிராதவர்கள் இருப்பினும் தமிழகத்தில் பல காலம் வாழ்ந்தாலும் இது தமிழ் சார்ந்த சொற்களை அறியதவர்களாக இருக்கின்றனர்.இந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்தவர்களில், தமிழினைத் தாய் மொழியாகக் கொண்டிராதவர்கள் தமிழை பள்ளியில் ஒரு பாடமாக படித்திருந்தாலே எளிதில் விடை சொல்ல முடியும். இதன் பின்னிருக்கும் நுண்ணரசியல் என்னவென்றால் , பிற மொழியினைத் தாய் மொழியாகக் கொண்டுள்ளவர்கள் அதுவும் குறிப்பாக மேல் மத்தியத் தர வர்க்கத்தினர் , தமிழ் மொழியின் அவசியத்தை உணரவே  இல்லை

தமிழையேப் படிக்காகத்தால் , தமிழகத்தின் சிறப்புக்களையோ , நம் மண்ணிற்கோ உரித்தான தலையைப் பிரச்சனைகள் குறித்தோ எந்த வித அடிப்படையும் தெரியாமல் வாழ்கின்றனர். 

இப்படிப்பட்டவர்களுக்கு, சீமான் தமிழின் பெருமை குறித்துப் பேசும்போதோ அல்லது தமிழகத்தின் தலையாயப் பிரச்சனைகள் குறித்து உணர்ச்சிப் பொங்க பேசினால் நகைச்சுவையாகத் தெரிகின்றது. சீமான் குறித்து பல்வேறு விமர்சனங்கள் நமக்கு உண்டென்றாலும் இது போன்ற பிறமொழிக்காரர்கள்  அவரை கிண்டல் செய்யும் போது நாம் அமைதியாக மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிராமல் தமிழகத்தின் பெருமைகளை எடுத்துக் கூறி அவர்களின் தவறினை நல்வழியில் உணர்த்த முயல வேண்டும்.

கனெக்ஷன் நிகழ்ச்சி நடத்தும் ஜெகனும் தெலுங்கர் என்பதுதான் இதில் கவனிக்கவேண்டிய அம்சம்  தமிழ் தொலைக்கட்சிகளில் தொகுப்பாளர்களில் எத்தனை பேர் தமிழ் மக்கள் என்று கணக்கெடுத்தால் மிகுந்த ஏமாற்றத்தினை ஏற்படுத்தும் என்பது திண்ணம். 

தீர்வுகள்:
1. முதலில் தமிழினைக் கல்விக் கூடங்களில் கட்டாயப் பாடமாக்க வேண்டும்.
2. உயர்சாதிகள் மற்றும் மாற்று மொழிகாரர்கள் தமிழுணர்வின்றி , தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் தவிர்த்து மற்றப் பாடங்களை முதன்மையான மொழியாக பயிற்றுவிப்பதை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். தமிழ் உயர்ந்தால் தான் நம் வாழ்வு உயரும். 
3. பிற மொழிக்காரர்கள் நம் மாநிலத்தில் அகதிகள் போலோ அல்லது இதனைத் தங்கள் தற்காலிக வசிப்பிடமாகவோ தான் கருதுவார்கள். ஆனால் இது உங்களின் சொந்த மண்.இம்மண்ணின் சிறப்பை மற்றவருக்கு உன்ரத்த நம் மொழியின் அருமையை அடுத்த தலைமுறைக்கு உணர்த்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
4. சீமானின் கருத்துகளையும் முழுமையாக நாம் ஏற்றுக் கொள்ளவியலாது ஏனென்றால் , ஈழத்தமிழர்கள் பிற நாடுகளில் மிக முக்கியப் பதிவிகளில் வகிக்கின்றனர். 

அயல்மொழிக்கரர்கள் இம்மண்ணிற்கே உரித்தான பண்புகளை உள்வாங்கி அதற்கேற்றவாறு நடப்பின் சீமான் போறோர்கள் கூச்சல் குறையும்.

நன்றி 

செங்கதிரோன் 

Wednesday, April 20, 2016

வயாக்ராவின் வாழ்க்கை வரலாறு:

 மருத்துவ உலகில் அதிகம் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளில் ஒன்றாக இன்றளவும் வயாக்ரா  திகழ்கின்றது.அமெரிக்காவை சேர்ந்த நிக்கோலஸ் தெர்ரெட் (Dr .Nicholas  Terrett ) என்பவரும் அவருடைய் உதவியாளர்களும் 1991ம் ஆண்டு சில்டனபில் (Sildenafil )ன்னும் மருந்தினை உயர் ரத்த அழுத்தம் மற்றும் நெஞ்சு வலிக்காக கண்டு பிடித்தனர்.



Clinical Trails என்று சொல்லப்படும் மருத்துவப் பரிசோதனைகளின் போது நோயாளிகள் தங்களுக்கு விறைப்புதன்மை அதிகம் நிகழ்வதாகக் கூறினர். இது மட்டுமன்றி அமரிக்காவில் உள்ள ஒரு மருத்துவமனையில் உள்ள இருதய சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு இந்த மருந்தினைப் பரிசோதனை முறையில் வழங்கிய போது அங்கு பணிபுரிந்த நர்ஸ்களிடம் (Nurse )நோயாளிகள் வழக்கத்துக்கு மரறாக அவர்களிடம் ஆசை வார்த்தை கூறுவது ,வித்தியாசமாகப் பார்ப்பது என்று நடத்து கொள்ள , அவர்கள் மருத்துவரிடம் முறையிட்டனர்.

அதன் பின்னர்தான் முறியாக இம்மருந்தினை ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பி செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட ஆண்களிடம் பரிசோதனை செய்ததில் இது ரத்த ஓட்டத்தினை அதிகப்படுத்தி விறைப்புத்தனமையை ஊக்குவிக்கின்றது என்று கண்டறிந்தனர். இறுதியாக அமெரிக்கவின் FDA (Food and  drug Administration) 19918ம் ஆண்டு இம்மருந்தினை அதிகாரப்பூர்வமாக ஆண்களின் பாலியல் பிரச்னைக்கு தகுந்த ஒன்றாக அங்கீகாரம் அளித்தது.

விறைப்புத்தன்மை குறையக் காரணம் என்ன?

முதிர் வயது முக்கியக் காரணமாக இருந்தாலும் நிரிழிவு , உடல் பருமன், அதிக கொழுப்பு சேர்ந்திருத்தல் ,உயர் ரத்த அழுத்தம் , அதிகமானக் குடிப்பழக்கம்,மன அழுத்தம் போன்றவை விறைப்புத்தனமியினைக் குறைக்க செய்யும். 2000ம் ஆண்டுக்கு முன்பு வரை மருத்துவ உலகில் எந்த  ஒரு சக்தி வாய்ந்த மருந்தும் விறைபுத்தன்மையினை உண்டாக்க வல்லவையாக இல்லை. வயாக்ராவின் வருகைக்குப் பின் 80% அதிகமாகவே பலனளித்தது.

பயன்படுத்தும் முறை:
சின்ன நீல மாத்திரை என்று செல்லமாக அழைக்கப்படும் இம்மருந்தானது கலவி அல்லது உறவுக்கு ஒன்று முதல் நான்கு மணி நேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும்.மருத்துவரின் ஆலோசனை பெற்று மட்டுமே சாப்பிட வேண்டும்.

இயற்கையாக நம் உடலில் ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும் முறைகள்:

நிறையப் பழவைகள் மற்றும் தானியங்கள் குறிப்பாக வாழைப்பழம் , தர்பூசணி ,மாதுளை ,ஆவகடோ போன்றவைரத்த ஓட்டம் அதிகரிக்க செய்யும்.

மிக முக்கியமாக தினமும் காலை அல்லது மாலை வேளைகளில் 15 நிமிடம் முதல் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்வதானால் உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் ரத்த ஓட்டம் சரிவரப் பாயும்.(மித வேக நடை பயற்சி , ஓட்டம் நன்கு பலனளிக்கக் கூடியவை)


வயாக்ராவின் வியத்தகு வரலாற்றின் அறிந்த்ருப்பீர்கள்.

நன்றி 
செங்கதிரோன் 

Tuesday, April 19, 2016

பேலியோ என்னும் மாயாஜாலம்:

முகபபுத்தகத்தில் தற்போது எப்படி இருந்த நான் இப்படி ஆயீட்டேன் என்ற படங்கள் ஆரோக்கியம் நலவாழ்வு என்ற குழுமத்தில் மிகப் பிரபலமாகி வருகின்றது. சினிமா அரசியல் தாண்டி உடல் நலம் தொடர்பான குழுமத்தில் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான பேர் இணைத்திருப்பது ஆச்சர்யமான ஒன்று .


இந்தக் குழுவின் நிறுவனத் தலைவர் அண்ணன் நியாண்டர் செலவன் அவர்கள் பொறுமையின் சிகரம் ,அவரால் தான் இந்தக் குழுமம் இன்றுவரை மிக சிறப்பாக இயங்கி வருகின்றது. ஒவ்வொருவர் கேள்விக்கும்  மிகப் பொறுமையாக பதிலளிப்பதனால் தான் பலரும் மிக நம்பிக்கையாகப் பேலியோ உணவு முறையினைக் கடை பிடிக்கின்றனர்.தமிழகத்தில் பல்வேறு புரட்சிகள் நடந்திருக்கின்றன, அவற்றுள் செல்வன் அவர்களின் கொழுப்புப் புரட்சியும் ஒன்றாகும்.





இந்த பூமியில் விவசாயம் தோன்றுவதற்கு முன்பின்ருந்த காலம் பேலியோ என்றழைக்கப்படுகின்றது. அந்த காலத்தில் இருந்த உணவு முறையை கடைபிடிப்பதால் இதற்கு பேலியோ என்ற பெயர் வந்தது. 


இதன் நன்மை என்ன: உடனடியாக உடல் எடைக் குறைய உதவுகின்றது , இரண்டாவது இருதய நோய் வராமல் தடுக்க உதவி புரிகின்றது.மதுமேகம் என்றழைக்கபடும் நீரிழிவு இருப்பவர்களுக்கு இந்த உணவு முறை மிகச் சிறந்த ஒன்று. இன்னும் உணவு சீரணக் கோளாறு , தைராய்டு பிரச்சனை போன்றவற்றையும் தடுக்க உதவுகின்றது.


இந்தக் குழு மிகப்பிரபலமாக ஆவதற்கு பிரபல பதிவர்கள்  ஜாக்கி சேகர் ,கேபிள் சங்கர் ஆகியோருக்கு முக்கியப் பங்கு உள்ளது.



மருத்துவர்கள் இந்த குழுமத்தில் இணைத்த பின்னர் , குழுவில் சேரும் புதியவர்களுக்கு கூடுதல் நம்பிக்கை ஏற்பட்டதோடு மட்டுமன்றி எந்த பயமும் அற்று பேலியோவினைப் பின்பற்ற ஆரம்பித்தனர். 

தற்பொழுது தமிழகத்தின் சென்னை நகரையும் தாண்டி அனைத்து சிறு நகரங்களில் வசிப்பவர்களும் இக்குழுமத்தில் இணைத்து இருக்கின்றனர். வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களும் இணைந்திருக்கின்றனர்.


ஏன் பேலியோ உணவு முறை அவசியம்:

கனடாவில் வசித்த  செல்வ கன நாயகம் என்ற பேராசிரியர் Fellow of the Royal Society of Canada விருது வாங்க க்யூபெக் நகருக்கு மனைவியுடன்  சென்ற பொழுது இரவு உணவு அருந்தி விட்டு வரும் வழியில் தனது 60 வயதில் மாரடைப்பில் ஹோட்டலின் கார் பார்க்கிங்கில் இறந்து விட்டார். எவ்வளவு பெரிய இழப்பு சமூகத்திற்கும் ,அவர் குடும்பத்திற்கும் என்று  நினைத்துப் பாருங்கள், (இந்தப் பேராசிரியர் குறித்து மேலும் அறிய இந்த இணைப்புக்கு செல்லுங்கள்). 

இருதய நோய் தாக்கி உயிரிழத்தல் தெற்காசியாவில் தான் அதிகம் , அதற்கு முக்கியக் காரணியாக இருப்பது நம் உணவு முறைகள் தான், பல்வேறு உணவு முறைகள் உலகில் இருந்தாலும் தற்போதைய நிலையில் பேலியோவின் வெற்றி நம் கண்முன்னே தெளிவாகத் தெரிகின்றது.

நடுத்தர வயதுடையவர்கள் நீரிழிவு மற்றும் இருதய நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள பேலியோ என்ற இந்த முன்னோர் உணவு சரியானதொரு வாய்ப்பு.

உங்கள் அனைவருக்கும் முன்பே தெரிந்து போல நான் படித்து பட்டம் பெற்ற சித்த மருத்துவர் ,தற்போது மூளை ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருபவன் . இந்தப் பேலியோ குறித்து இணையத்தில் ஒரு மாத காலம் தேடிப் படித்த பின்னரே கடந்த மூன்று மாதமாகப் பேலியோவினைப் பின்பற்றி வருகின்றேன் .
நீங்களும் நல்ல ஆரோக்கியத்துடன் நலமோடு வாழ தகுந்த ஆலோசனைப் பெற்று பேலியோவினைப் பின்பற்றுங்கள்.
தற்பொழுது நியண்டர் செல்வன் அவர்கள் எழுதிய பேலியோ குறித்த புத்தகமும் வெளிவந்துள்ளது அதனையும் படித்து விட்டு இந்தக் குழுமத்தில் உள்ளவர்களின் ஆலோசனைப் பெற்று பேலியோவினைக் கடைபிடியுங்கள்.
மேலும் அறிந்து கொள்ள இக்குழுமத்தின் மூத்த உறுப்பினர் சங்கர் அவர்களின் பேலியோ குறித்த இந்தக் காணோளியைக் காணுங்கள்.



நன்றி 
செங்கதிரோன் 
  

Monday, April 18, 2016

பாட்டாளி மக்கள் கட்சியும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியும்:



என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள் மக்களே! இந்த இரண்டுக்கும் தமிழக அரசியலில் மிக குறைவான வெற்றிகளையே தொடக்கத்தில் பெற்று தற்போது முதல்வர் வேட்பாளர் அறிவிக்கும் நிலைக்கு வந்திருக்கிறது பாமக , பங்களாதேஷ் அணி தொடக்க காலத்தில் அதிகம் தோல்விகளையே சந்தித்து தற்போது உலக ஜாம்பவான் அணிகளுடன் மிக தைரியமாக போராடி தோற்கின்றது ,வெகு சில நேரங்களில் வெற்றியும் அடைகின்றது .



அடுத்த முக்கிய ஒற்றுமை பாமகவில் இருக்கும் அண்ணன் மாவீரன் காடுவெட்டி குரு  அவர்களும்  பங்களாதேஷ் அணியின் தாஷிக் அகமது என்பவரையும் தொடர்புபடுத்திய செயல் தான்.கடலூரில் நடந்த தேர்தல் கூட்டத்தில் காடுவெட்டி குரு ஜெயலலிதா முன்னிலையில் நீங்கள் ஆணையிடுங்கள் கருணாதியின் தலையினைக் கொய்து வந்து உங்கள் காலடியில் சமர்ப்பிக்கின்றேன் என்று பேசினார் . இந்தப் பேச்சின் மூலம் தான் அவர் பிரபலமானார். அடுத்து பாபா படப் பெட்டியை வைத்து ஆடிய கண்ணாமூச்சி ஆட்டத்தில் ஆல் தமிழகத்துக்கும் பிரபலமாகிவிட்டார் மாவீரன் குரு . அங்கே பங்களாதேஷில் இரண்டு மூன்று வெற்றிகளை இந்தியாவுடன் ருசித்த பின்னர் அந்நாட்டு ரசிகர்கள் தாங்கள் தான் உலக சாம்பியன் என்று நினைத்துக் கொண்டு ஒரு படத்தினை வெளியிட்டனர் .பங்களாதேஷ் வீரர் தாசிக் அகமது தோனியின் தலையினைத் தன கையில் வைத்திருப்பது போல படத்தினை வெளியிட்டு இந்திய ரசிகர்களை வெறுப்பேற்றினர். அது மட்டுமா ஆஸ்தேரிலியாவில் நடந்த உலகக் கோப்பை போட்டியின் போது காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற பின் அந்நாட்டு  ரசிகர்கள் பண்ணக் காமெடிக்கு அளவே இல்லை.



தற்கால நிலை:

பாமகவும் சரி பங்களாதேஷ் அணியும் சரி இன்று முன்பிருந்த நிலையை விட மிக முன்னேறிய இடத்தில் இருக்கின்றனர் என்பதனை யாரும் மறுக்கவியலாது.விஜயகாந்த் வருகையால் இழந்த வாக்கு வங்கியினை மீண்டும் தங்களின் அசுர பிரச்சார யுகதியாலும் ,சரியான திட்டமிடலாலும் மீட்டேடுத்திருக்கின்றனர். வரும் தேர்தல் முடிவுகள் கண்டிப்பக அதனை உறுதி செய்யும் . விஜயகாந்த்  மட்டுமன்றி திராவிடக் கட்சிகளுக்கும் ஒரு அதிர்ச்சி வைத்தியம் வட  மாவட்டங்களில் காத்திருக்கின்றது .இதனால் பாமகவுக்கு என்ன பலன் என்று தெரியாது ,அன்புமணி முதன்மைப் பெற்ற பின் வன்னியர் என்ற சொல் உச்சரிப்பு குறைந்து விட்டாலும் இடை நிலை சாதி மக்களிடம் பாமக குறித்த வன்முறை கட்சி என்ற முத்திரை அகலவே இல்லை. பீகாரில் லாலு செய்தது போல வட மாவட்டங்களில் மட்டும் அதிக  கவனம் செலுத்தி ஆட்சியில் பங்கு பெற நினைப்பதே சரியான யுக்தி , தமிழகம் முழுவதும் போட்டியிடுவது அதிக கவனச் சிதறலையே உண்டாக்கும் . ஒரு பக்கம் விஜயகாந்த் வளர்ச்சியினை தடுத்தால் மறு முனையில் நாம் தமிழர் உள்ளே வர முயற்சிக்கின்றனர் .தற்போது உள்ள நிலையில் கடைசிக்கு முந்தைய இடம் தான் பாமகவுக்கு கிடைக்கும்.

பங்களாதேஷ் அணியில் முன்பெல்லாம் மொத்த அணியிலும் நன்கு விளையாடுபவர்கள் ஒன்றோ ரெண்டோ தான் ,ஆனால் தற்போதைய நிலையில் ஏறக்குறைய முக்கல்வாசி பேர் நன்கு ஆடுகின்றனர், பவுலிங்கில் கலக்கி வருகின்றனர்.சமீப வருடங்களில் இந்தியாவுடனான போட்டிகளில் மிக சிறப்பாக ஆடி வருகின்றார் , இந்தியாவும் மிக சிரமப்பட்டே அவர்களை வென்று வருகின்றது.

பங்களாதேஷின் கனவு என்றாவது ஒரு நாள் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் , பாமகவின் கனவு தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் இரண்டும் நடக்குமா நடக்கிறதா என்பது நாம் கணிக்க முடியாது .ஒரு இந்த இரண்டு நிகழ்வும் ஒரே காலகட்டத்தில் கூட நடக்கலாம் .பொறுத்திருந்து பார்ப்போம் .

நன்றி 
செங்கதிரோன்