Tuesday, March 7, 2017

யுவகிருஷ்ணா -சகலகலா வல்லவன்

பதிவர் , சினிமா விமர்சகர் , பத்திரிக்கை ஆசிரியர் (வண்ணத்திரை) , எழுத்தாளர்  போன்ற எண்ணற்ற முகங்கள் கொண்டவர் யுவகிருஷ்ணா, அதனால் தான் சகலகலா வல்லவன் என்று அவருக்குப் பிடித்த நடிகரான கமலின் படத் தலைப்பினையே அவருக்கான அடையாளமாக மாற்றி விட்டேன்.

ஒரு எழுத்தாளரின் குறிப்பின் மூலமாக தான் முகப்புத்தகத்த்தில் யுவாவை பின்பற்றத் தொடங்கினேன், கல்லூரியில் எனக்கு கிடைத்த திராவிட அரசியல் குறித்த பார்வைகளை இன்னும் மெருகேற்றிக் கொள்ள யுவாவின் பதிவுகள் மிகவும் உதவிகரமாக இருந்தன. ஏனென்றால் திராவிட அரசியல் வரலாற்று நிகழ்வுகளை மிக துல்லியமாக எழுதுவதால் நமக்கான புரிதல் மிக தெளிவாக இருக்கும்.அது மட்டுமன்றி அவர் அறிமுகப்படுத்தும் எழுத்தளார்கள் மற்றும் நூல்கள் குறித்து வாசிக்கத் தொடங்கினேன் . இது எனது வாசிப்பை பரவலாக்க செய்தது. மிக முக்கியமாக கே.என் .சிவராமன் , விமலாதித்த மாமல்லன் , விநாயக முருகன் , அதிஷா போன்ற பலர் குறித்து யுவாவின் மூலம் அறிய முடிந்தது.


ஒரு புறம் அரசியல் குறித்து எழுதினாலும் சினிமா குறித்த இவரது பதிவுகள் தான் பலருக்கும் பிடிக்கும். தன்னை ஷகிலா போன்ற கவர்ச்சி நாயகிகளின் ரசிகராக வெளிப்படியாக அறிவித்துக் கொண்ட ஒரே முகநூல் பிரபலம் இவர் மட்டுமே . தற்போது பூனம் பாஜ்வாவின் ரசிகராக மாறி அவ்வபோது அவரின் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை எல்லையற்ற மகிழ்ச்சிக்கு ஆளாக்கி வருகின்றார். முத்தாய்ப்பாக தற்போது வண்ணத்திரையின் ஆசிரியராக இருப்பதால்  பல சுவாரஸ்யமான செய்திகள் இடம் பெற்று  பத்திரிக்கை புத்தொளி பெற வழிவகைகள் செய்து வருகின்றார்.

இவரின் சினிமா விமர்சனங்களும் அதிரிபுதிரியாக இருக்கும் . எப்பொழுதுமே யுவாவின் விமர்சனங்கள் மிகுந்த மாறுபட்ட கோணத்தில் இருக்கும். சமீபத்தில் வந்த கிடாரி படம் தோல்வியினைத் தழுவியது . ஆனால் யுவா அந்தப் படம் குறித்த ஒரு மாறுபட்ட விமர்சனத்தைப் பதிவு செய்திருந்தார். எனவே அவரின் சினிமா விமர்சனங்கள் மூலம் பல்வேறு புதிய செய்திகளும் நமக்கு கிடைக்கும் .


அமர்த்தியா சென் argumentative Indian என்றொரு புத்தகம் எழுதினார் . ஆனால் யுவா ஒரு நடமாடும் argumentative Tamilian என்று சொல்லும் அளவுக்கு முக நூலில் நடக்கும் விவாதங்களில் எதிராளியை தலை தெறிக்க ஓட விடுவதில் கில்லாடி.  விஜயகாந்தின் தேமுதிக பற்றி  ஒரு புத்தகம் , நடிகைகளின் கதை , சரோஜாதேவி  போன்ற புத்தகங்கள்  எழுதி இருக்கின்றார்.


யுவாவின் ரசனையான முகம் தான் அனைவருக்கும் தெரியும் . அவரின் கடும் உழைப்பு, குடும்ப பின்னணி குறித்து அவருடைய குரு சிவராமன் பதிவு செய்த பிறகு யுவாவின் மேல் இன்னும் மதிப்பு கூடி விட்டது . சாதரண அடிப்படை தொழிலாளியாக தினமலரில் ஆர்மபித்த யுவா இன்று ஒரு பத்திரிக்கையின் ஆசிரியாராக மட்டுமன்றி எழுத்தாளர் , நூல் விமர்சகர் என்று பல்வேறு உயரங்களை அடைந்திருக்கின்றார்.


கமலஹாசன் மற்றும் கலைஞரின் தீவிர ரசிகர் . கொண்ட கொள்கையில் பிடிப்புடன் திகழும் லட்சியவாதி. 

யுவா மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

நன்றி 
செங்கதிரோன்

குற்றம்-23 : உண்மைக் கதையா ?



நம் தாத்தாக்கள் காலத்தில் பத்துக்கும் மிகாமல் குழைந்தை பெற்று சாதனை படைத்துக் கொண்டிருந்தனர். ஆனாலும் அவ்வாறு பிறக்கும் அனைத்துக் குழந்தைகளும் நெடு நாட்கள் வாழ்வதில் அதிக சிரமம் இருந்தது. ஆனால் தற்போதோ நிலையை  தலைகீழாக இருக்கின்றது.   ஒரே ஒரு குழந்தையினைப் பெற்றெடுப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகின்றது.


இந்த குழந்தையின்மை பிரச்சனையினை வைத்து பலரும் மக்களை ஏமாற்றி வருகின்றனர் . அவற்றில் முக்கியமாக ஆங்கில மருத்துவர்களில் சிலர் மக்களின் அறியாமையினை  பயன்படுத்தி பணம் சம்பாரிக்கின்றனர். 

குற்றம் -23 படத்தில் இயக்குனர் அறிவழகன் மிக துணிச்சலாக இந்த மோசடியை படமாக்கியுள்ளார். படத்தில் வரும் டாக்டர் தம்பதி போன்றே நிஜத்தில் சென்னையில் ஒரு டாக்டர் தம்பதி மிகப் பெரிய மருத்துவமனையினை அதிக விளமபரங்கள் செய்து நடத்தி வருகின்றனர். அவர்களை மனதில் வைத்து தான் இந்தக் கதையினை அறிவழகன் உருவாக்கி இருக்கின்றார் என்றே எண்ணத் தோன்றுகின்றது . மிக முக்கியமாக அதே டாக்டர் தம்பதி போன்ற உருவ ஒற்றுமை கொண்டவர்களை நடிக்க வைத்திருப்பது இதனை மேலும் உறுதி செய்வதாக இருக்கின்றது (இணையத்தில் ஆ என்ற எழுத்தில் தொடங்கும் குழந்தை மருத்துவமனையினை தேடினால் நீங்களும் கண்டு பிடித்து விடுவீர்கள்).

படம் குறித்த எனது பார்வை கீழே உள்ள காணொளியில் பாருங்கள்.



நன்றி 
செங்கதிரோன்  

Monday, February 13, 2017

காதலர் தின நீதிக்கதை:

காதலர் தினத்தன்று காதலியை அசத்துவதற்காக குரு தன் காதலி சாந்திக்கு கவிதை எழுதி கொடுக்க முடிவு செய்தான். பூங்கா, மொட்டை மாடி , தனி அறை என  இடங்களில்  உட்கார்ந்து நடந்து பல முயற்சி செய்தும்  ஒரு வரி கூட எழுத முடியவில்லை. அந்த சமயத்தில் தான் காதலர் தின சிறப்பு ஆனந்த விகடன் குரு கையில் கிடைத்தது. பக்கத்திற்கு பக்கம் காதல் கவிதைகள் இருந்த புத்தக்கத்தினை பார்த்ததும் திருவிளையாடல் படத்தில் நாகேஷ் அடைந்த அதே போன்தொரு மகிழ்ச்சியை அடைந்தான். உடனே அப்படியே அதில் உள்ள வரிகளை மாற்றாமல் வேறொரு பேப்பரில் எழுதி விட்டான். காதலர் தினத்தன்று பரிசுப்பொருட்களுடன் அந்த கவிதையும் கொடுத்தான. காதலி சாந்தி பல பக்கங்களில் எழுதப்பட்டிருந்த அந்த கவிதையினை வாங்கி அங்கேயே படித்து ஆச்சர்யம் அடைந்தாள். 


காலங்கள் உருண்டோடின. அக்கா வீட்டிற்கு சென்றிருந்த குரு , அங்கே இருந்த பழைய குமுதம் ,ஆனந்த விகடன் மற்றும் குங்குமம் புத்தகங்களை எல்லாம் வீட்டில் இருக்கும் மனைவி படிப்பதற்காக கொண்டு வந்து கொடுத்தான். பின்னர் ஒருநாள் அலுவலகத்தில் மிக தீவிரமாக நண்பர்களுடன் அரசியல் விவாதத்தில் ஈடுபட்டிருந்த போது மனைவி இன்று மாலை உங்களுக்கு ஒரு சர்பிரைஸ் இருக்கின்றுது சீக்கிரம் வந்து விடுங்கள் என்று கூறினார்.

குரு மிக உற்சாகமாக வீட்டிற்கு சென்றான். மனைவி ஒரு கிப்ட் ஒன்றினை கொடுத்தாள். இன்றைக்கு என்ன ஸ்பெசல் என்று கேட்க இன்றைக்கு காதலர் தினம் என்று நினைத்து கொள்ளுங்கள் என்று சொன்னாள் .ஆர்வமாக பிரித்து பார்த்தான் குரு, அதில் பழைய ஆனந்தவிகடனும் , அவன் காதலர் தினத்தன்று முன்பு கொடுத்த கவிதை பேப்பரும் இருந்தது. அசடு வழிந்தான் குரு .

காதலியை ஏமாற்றலாம் மனைவியை ஏமாற்றவே முடியாது 

நன்றி 
செங்கதிரோன் 


Wednesday, February 8, 2017

கண்டம் விட்டு கண்டம் பாயும் சித்த மருத்துவம் :


சித்த மருத்துவம் உலகின் மிக தொன்மையான மருத்துவத்தில் ஒன்று.  தமிழின் உயரிய படைப்பான திருக்குறளில் , சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்படும் , வாத, பித்த ,கபம் குறித்த குறிப்புகள் உண்டு. சித்தர்களை பற்றிய பல்வேறு செய்திகளும் இலக்கியத்தில் காண கிடைக்கின்றது . 

பல்லாண்டு காலமாக தமிழ் மண்ணில் மக்களால் பயன்பாட்டில் இருந்து வரும் சித்த மருத்துவம் , மெல்ல விரிவடைந்து இந்தியாவின் பிற மாநிலங்களிலும் மக்கள் சித்த மருத்துவத்தினை பயன்படுத்தி வருகின்றனர் . குறிப்பாக கேரளாவில் சித்த மருத்துவ கல்லூரி தொடங்கப்பட்டு பலரும் ஆர்வமுடன் படித்து வருகின்றனர் . அந்த கல்லூரியில்  மிக சமீபத்தில் ஒரு ஜப்பானிய மாணவி சித்த மருத்துவம் பயின்று பட்டம் பெற்றார். தென் மாநிலங்கள் அனைத்திலுமே சித்த மருத்துவம் பரவலாக மக்களின் பயன்பாட்டில் இருக்கின்றது. அது மட்டுமன்றி ரஷ்ய மொழியில் சித்த மருத்துவம் குறித்த புத்தகமும் வெளிவந்திருக்கின்றது  

இலங்கையில் சித்த  மருத்துவ படிப்பு பன்னெடுங்காலமாகவே இருந்து வருகின்றது . அங்கு பட்டப் படிப்பு படித்த மருத்துவர்கள் மேற்படிப்பிற்காக தமிழகம் வருகின்றனர். இது தவிர தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் சிங்கப்பூர் ,மலேசியா போன்ற நாடுகளிலும் அந்த அரசுகளால் சித்த மருத்துவம் ஏற்றுக் கொள்ளப்பட்டு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆசிய கண்டத்தினை அடுத்து தற்போது ஆஸ்திரேலியா மற்றும் கனடாவில் சித்த மருத்துவத்தினை பாரம்பரிய மருத்துவம் என்ற அடிப்படையில் சில விதிமுறைகளுடன் சித்த மருத்துவம் ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கின்றது .தற்போது சித்த மருத்துவர்கள் அங்குள்ள மருத்துவ அமைப்பில் முறையாக பதிவு செய்து தமிழ் மக்களிடம் மருத்துவ சேவையினை செய்து வருகின்றனர்.


பல்வேறு சிறப்பு வாய்ந்த நம் சித்த மருத்துவம் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் அங்கீகாரம் பெறும் அளவுக்கு விரைவில் வளர்ச்சி அடையும். அவ்வாறு நிகழ்ந்தால் அது சித்த மருத்துவத்தினை உருவாக்கிய பதினெண் சித்தர்களுக்கு மிகப்பெரும் மதிப்பாக இருக்கும். உலகம் முழுக்க சித்த மருத்துவம் பயன்பாட்டிற்கு வந்து அனைத்து மக்களும் உணவே மருந்து மருந்தே உணவு என்ற சித்தர் கொளகையின் ஏற்று நீண்ட ஆயுளுடன் நலமாக வாழ வேண்டும் .

செந்தில் கிருஷ்ணசாமி, B.S.M.S, M.S. (Neuro.Sci). PhD (Canada)
சித்த மருத்துவர் , மூளை நோய்கள் குறித்த ஆராய்ச்சியாளர் (லவால் பல்கலைக்கழகம்)
கியூபெக் நகரம் 
கனடா 

கனடா நாட்டு பத்திரிக்கையில் வெளிவந்த இந்த செய்தியினை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி 

நன்றி செங்கதிரோன் 

Thursday, January 26, 2017

முருங்கை குறித்த பாக்யராஜ் சொன்னது உண்மையா?

1983ல் வெளிவந்த முந்தானை முடிச்சு படத்தில் முருங்கை ஆணின் உடலை முறுக்கேற்றும் என்ற கருத்தினை பாக்யராஜ் சொல்ல அது  மிக பிரபலமானது. மீண்டும் அதே கருத்தினை 2013ல் வெளிவந்த உத்தம புத்திரன் படத்திலும் பாக்யராஜ் அதே கருத்தினை கூறுகின்றார். இந்த நவீன  யுகத்திலும் அவர் இந்த கருத்தினை சொல்லும்போது அதன் பிண்ணனி குறித்தும் நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கின்றது . முருங்கையின் பயன் என்பது ஆணுக்காக மட்டுமல்லாமல் அனவைருக்கும் பலனளிக்கக்கூடிய முக்கிய மூலிகையாக சித்த மருத்துவம் குறிப்பிடுகின்றது.

முருங்கை இந்தியா, இலங்கை மட்டுமன்றி ஆப்பிரிக்க  மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் பரவலாக விளையும் மூலிகை. தமிழ் பாரம்பரியத்தில் முருங்கை முக்கிய உணவுப் பொருளாக இருக்கின்றது.  ஆபிரிக்காவில் முருங்கை மரத்தினை Miracle tree என்றே குறிப்பிடுகின்றனர்.

இந்த கட்டுரையில் முதலில்  சித்த  மருத்துவத்தில் முருங்கையின் பலன்கள் குறித்து சொல்லப்பட்டுள்ளவற்றையும்  , அடுத்து அறிவியல் ரீதியாக நடத்தப்பட்ட சோதனைகள் மூலம் கண்டறியப்பட்ட முருங்கையின் பலன்கள் மற்றும் கடைசியாக பாக்யராஜ் முருங்கை குறித்த சொன்ன கருத்தின் உண்மை தன்மை குறித்தும் பார்ப்போம்.

முருங்கை இலை மற்றும் காய் ஆகியவை சமைத்து சாப்பிட்டால்   சோர்வை நீக்கி புத்துணர்வினை உண்டு பண்ணும் என்று   கூறப்பட்டுள்ளது.மிக முக்கியாயமாக பிள்ளை பெற்ற தாய்மார்களுக்கு மிக முக்கிய உணவாக இது செயல்படும்  , ஏனெனில் முருகைக்கு பால் சுரக்கும் தன்மை அதிகம் உண்டு , இதனால் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்து கிடைக்கின்றது.மேலும் சிறுவயது பிள்ளைகளுக்கு உண்டாகும் வயிற்று பூச்சி பிரச்ச்னைகளுக்கு முருங்கை இலை  நல்ல தீர்வாக  இருக்கும் என்று சித்த மருத்துவத்தில் குறிப்பிடபப்ட்டுள்ளது.

முருங்கை மரத்தின் வேர்கள் வீக்கத்தை குறைக்கவும் , காயங்களுக்கு  மருந்தாகவும்  பயன்படுகின்றது. மேலும் காது மற்றும் பல்வலியினை குணபப்டுத்துவதில் முருங்கையின் வேர் உபயோகப்படுத்தப்படுகின்றது.முருங்கை மரத்தின் பட்டை பாம்புக்கடி  போன்ற நச்சுமுறிவு மருத்துவத்தில் நல்ல பலன் கொடுக்கும் என்று சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.முருங்கைப்பிசினானது வயிறு தொடர்பான நோய்கள் , மூட்டுவலி மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்களுக்கான மருந்துகளில் சேர்க்கப்படுகின்றது.

நவீன அறிவியல் அறிஞர்கள்  சித்த  மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ளவற்றின் உண்மை தன்மை குறித்து உறுதிபடுத்த பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.முருங்கை குறித்து சித்த மருத்துவம் போன்றே  உலகம் முழுக்க உள்ள பரமப்ரிய மருத்துவ முறைகளில் சொல்லப்பட்டுள்ளவை குறித்த ஆராய்ச்சிகள் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 

பாரம்பரிய முறைகளில் முருங்கைக்கு தாய்மார்களுக்கு அதிக பால் சுரக்கும் தன்மை உடையது என்று கூறியிருப்பதை  நவீன அறிவியல் ஏற்றுக்கொண்டது . ஏனென்றால் முருங்கையில் பால் மற்றும் முட்டையில் இருப்பதை  விட அதிக அளவு கொண்ட புரதம் இருப்பதையும் மேலும் கால்சியம் அளவும் மிக அதிக அளவில் முருங்கை இலையில் இருப்பது கண்டறியபப்ட்டது..வைட்டமின் A ,B ,C மற்றும் E முருங்கையின் காய் மற்றும் இலையில் இருக்கின்றது , இதனால் கண்களுக்கு பாதுகாப்பினையும் , வைட்டமின் C குறைபாட்டினால் வரும் ஸகர்வி நோயினை தடுப்பதிலும் முக்கியபங்காற்றுகின்றது.

முருங்கையின் இலை மற்றும் காயினை (விதைகள்) பொடித்து எலிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் முருங்கை உடலில் உள்ள பலவேறு உறுப்புகள் தொடர்பான நோய்களை நீக்குவதில் சிறப்பாக செயல்படுகின்றது என்று கண்டறியப்பட்டது. 

மூளை : முருங்கை இலை மற்றும் விதைக்கு தூக்கமின்மையினை சரி செய்யும் ஆற்றல் உள்ளது கண்டுபிடித்துள்ளனர். மேலும்  வயதானவர்களுக்கு ஏற்படும் மறதி நோய்க்கு முருங்கை இலை பலனளிக்கும் என்பதனையும்  எலிகளில் நடத்திய சோதனையில் கண்டுபிடித்துள்ளனர்.

இருதயம்: இருதய நோய் உணடாவதற்கு முக்கியக் காரணமான கொழுப்புகளை கரைக்கும் ஆற்றல் முருங்கையிலைக்கு உள்ளது.முக்கியமாக ரத்தக்குழாய்களில் படியும் கொழுப்புகளை அகற்றி ரத்த ஓட்டத்தை சரி செய்வதில் மற்ற கீரைகளை விட முருங்கை சிறப்பாக செயலாற்றுகின்றது.

நீரிழிவு: நவீன அறிவியல் ஆய்வுகள் நீரிழிவு நோயாளிகள் வாரம் இருமுறை முருங்கை கீரை எடுத்துக் கொள்வதன் மூலம் நோயின் தன்மை வெகுவாக சரி செய்யும் என்று பரிந்துரைக்கின்றனர்.

மேற்சொன்னவை மட்டுமல்லாமல்  சிறுநீரக கோளாறுகள் , தோல் நோய்கள் மற்றும் வயிறு தொடர்பான நோய்களை தீர்ப்பதில் முருங்கையின் பங்களிப்பு குறித்து பலவேறு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

இறுதியாக பாக்யராஜ் முருங்கை ஆணின் உடலை முறுக்கேற்றும் என்று சொன்னது குறித்து பார்ப்போம். சித்த  மருத்துவத்தில் முருங்கைக்கு சோர்வை நீக்கி ஆற்றலை கொடுக்கும் தன்மை இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளதால் இது ஆண்களுக்கு  உடல் வலைமையினை அதிகரிக்கும் என்று புரிந்து கொள்ளலாம். நவீன அறிவியல் முருங்கை இலையில் உள்ள சப்போனின்களால் ஆண்களுக்கு தாம்பத்ய உறவில் அதிக விருப்பத்தினை உண்டாக்கும்  என்று உறுதிசெய்துள்ளது. மேலும் முருங்கை விதையில் உள்ள சத்துக்கள்  ஆண் பெண் இருவருக்குமே தாமபத்ய உறவில் ஈடுபடுவதற்கான நாட்டத்தினை பெருக்கும் என்று கண்டறிந்துள்ளனர்.

சித்தர்கள் முருங்கையினை அதன் பல தரப்பட்ட மருத்துவ செய்கைகளுக்காக  மகா மூலிகை என்றழைக்கின்றனர். நவீன மருத்துவ உலகம் நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் பாதுகாக்கும்  ஆற்றல் பெற்றிருப்பதால் அதிசயத்தக்க மரம் என்று குறிப்பிடுகின்றது. ஆண்கள் , பெண்கள் , குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அனைவருக்கும்  பலனளிக்கக் கூடிய முருங்கையினை நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டு நோயில்லா வாழ்வினைப் பெறுவோம். 

கனடாவில் வசித்து வரும் மூளை  நோய்கள் குறித்த ஆராய்ச்சியாளர் Dr. செந்தில் கிருஷ்ணசாமி PhD (Neuroscience)  அவர்களால்  எழுதப்பட்ட இந்த கட்டுரையை அவரின்அனுமதியுடன் இங்கு பகிர்கின்றேன்.

நன்றி 
செங்கதிரோன்