Tuesday, March 25, 2014

ஜூனியர் விகடன் கழுகு காக்காவாக மாறியது

ஜூனியர் விகடன் பத்திரிக்கையில் வரும் மிஸ்டர் கழுகு பகுதி மிக பிரபலமான ஒன்று என்பது நெடுங்காலமாக அப்பத்திரிக்கையினை வாசித்து வருபவர்கள் நன்கு அறிவர். அரசியல்வாதிகள் ,நடிகர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் குறித்த ரகசிய செய்திகளினை மிஸ்டர் கழுகு பகுதியில் வழங்கி வந்தனர். எனவே இத்த்னைப் படிக்க மிகவும் ஆர்வமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும்.இப்பகுதியில் அரசியல் மட்டத்தில் நடைபெறும் செய்திகளை முன்கூட்டியே  மிஸ்டர் கழுகார் மூலம் தெரியப்படுத்துவதினாலும் அவை அப்படியே நிகழ்வதாலும் அதற்கு ஒரு நம்பகத் தன்மை இருந்தது.

கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக இப்பகுதியில் மாநிலத்தில் நடக்கும் கட்சிக்கு ஆதரவாகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் எழுதுவதினை தலையாப் பணியாக செய்து வருகின்றது. தமிழக்த்தில் மின் தட்டுப்பாடு நிலவிய தி.மு.க. ஆட்சி காலகட்டத்தில் ஜெ.ஆட்சிக்கு வந்தால் குஜராத்தில் இருந்து மின்சாரம் தருவித்து தமிழகத்தினை இருளில் இருந்து மீட்பார் என்று ஜெயலலிதாவே சொல்லாத ஒன்றை இவர்களாகவே கூறி மக்களை ஏமாற்றினர்.

கலக்குரல் பதிவில் கூறியது போல இவர்கள் பத்திரிக்கையின் நிலையக் கலைஞரான தமிழருவியை கருவியாகப் பயன்படுத்தி பா.ஜ.க.தலமையில் கூட்டணி அமைய இவர்கள் எழுதிய பொய்களுக்கு அளவே இல்லை. ஜெ.வை குழிப்படுத்த விஜயகாந்துக்கு செல்வாக்கே இல்லை என்று போலியான ஒரு கருத்துக் கணிப்பினை வெளியிட்டனர்.

அழகிரியை ஜெ.வுக்கு பயந்து நடுங்கும் ஆடு போன்று உருவகப்படுத்துவது ,ஆனால் அதே அழகிரி தி.மு.க. வினை எதிர்த்தால் புலி போல உருவகப்படுத்த்துவது என பிழைப்புவாதம் செய்தே மிஸ்டர் கழுகு இன்று காக்காவாக மாறிக் கொண்டிருக்கிறது.

இன்னுமொரு உதாரணம் சுப்ரமணியசாமி , இவரை அரசியல் கோமாளியாக தமிழக மக்களுக்கு அடையாளம் காண்பித்ததில் ஜூ.வி.முக்கியப் பங்குண்டு. ஆனால் அதே சுப்ரமணியசாமி பா.ஜ.க. ஆதரவாளராக மாறியபின் ஒரு சக்தி வாய்ந்த அரசியல்வாதியாக முன்னிலைப்படுத்துகின்றனர்.

நடுநிலையான செய்திகளை வழங்கிக் கொண்டிருந்த மிஸடர் கழுகு பகுதியில் தற்பொழுது முழுக்க முழுக்க கருணாநிதி குடும்பத்தின் செய்திகளை திரித்து கூறுவதேயே தொழிலாகக் கொண்டுள்ளது.எனவே இனி மிஸ்டர் க்ழுகார் பகுதிக்கு மிஸ்டர் காக்கா என பெயர் சூட்டி மகிழ்வோம்.

ஏன் இப்படிப்பட்ட கீழ்த்தரமான வேலையில் இறங்கி இருக்கிறார்கள் என்று பார்த்தால் இந்தியாவினை காங்கிரசின் ஊழல் ஆட்சியில் இருந்து விடுவிக்கவே இப்படி கழுகார் காக்காவாக மாறி இருப்பதாக தப்பு கணக்கு போட வேண்டாம்.இதன்  பின்னணியில் ஒரு மிகப்பெரிய சுய நல அரசியலே மேலோங்கி இருக்கின்றது.

அது என்னவென்றால் தொலைக்காட்சி ஆசை. விஜய் தொலைக்காட்சியின் மக்கத்த்தான வெற்றியும் தந்தி ,புதிய தலைமுறை போன்ற நாளிதழ்கள் தங்களுக்கென  தனி தொலைக்காட்சி வைத்திருப்பதனால் இவர்களுக்கும் அந்த ஆசை வந்து விட்டது இதனை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே கழுகு காக்காவாக நரேந்திர மோடிக்கும் ஜெயலலிதாவுக்கும் கரைந்து கொண்டிருக்கிறது.