Tuesday, September 29, 2015

சேலம் சிவராஜ் வைத்தியரும் பாலியல் நிபுணர் நாராயண ரெட்டியும் : இரு துருவங்கள்




தமிழ் நாட்டு இளைஞர்களுக்கு இருவரைப் பற்றியும் எந்த அறிமுகமும் தேவை இல்லை. அதிலும் சிவராஜ் அவர்களுக்கு பெரிய ரசிகர் கூட்டமே உண்டு. தங்கள் மனம் கவர்ந்த கனவுக் கன்னிகளால் தூக்கத்தை தொலைத்தவர்கள்  இவரின் பேச்சைக் கேட்ட பின் தூக்கமே வராமல் பீதி அடையும் நிலைக்கு செல்கின்றார்கள்.

இதற்கு மாறாக நாராயண ரெட்டி அவர்கள் பாலியல் குறித்து விழிப்புணர்வினை உண்டாக்க பல்வேறு வார மற்றும் தினசரிகளில் எழுதித் தள்ளினார், ஆனால் அவரின் கருத்துக்கள் இளைஞர்களை சென்றடையவே இல்லை.

பல தலைமுறைகளாக மருத்துவம் செய்து வருவதாகக் கூறிக் கொள்ளும் சிவராஜ் பாலியல் குறித்து பயத்தினை மட்டுமே ஏற்படுத்துவது தான் இவர்கள் தலை முறை தலை முறையாகக் கற்றுக் கொண்ட மருத்துவ தர்மமா ? (medical ethics ). ஆண்களுக்கு இயற்கையாக நடக்கும் (Physilogical changes ) மாற்றங்களை பெரிது படுத்தி, அதன் மூலம் தன் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ளும் மலிவான தந்திரத்தை எப்போது இவர் நிறுத்துவார் என்று தெரியவில்லை. இந்தத் தவறுதலான போக்கு பல ஆண்களுக்கு திருமணத்திற்கு முன் பலவிதமான குழப்பங்களை உண்டாக்குகின்றது. இவர் சொல்லும் அனைத்துக் குறிகுணங்களும்  தனக்கும் இருப்பதாக எண்ணி அச்சப்படுகின்றான். ஒரு சிலர் இந்த அச்சத்தின் உச்சமாக முதலிரவுக்கு முன் தூக்கில் தொங்கிய சம்பவங்களும் நடந்திருக்கின்றன.




பாலியல் குறித்த தெளிவான ஒரு புரிதலை கல்விக்கூடம், குடும்பம் மற்றும் சமுதாயம் என்ற எதுவுமே கற்றுத் தருவதில்லை. அது ஒரு மறைபொருளாகவே இருப்பதினால் இது போன்று தொலைக்கட்சியில் மருத்துவர்கள் என்று கூறிக் கொண்டு பேசுபவர்களின் கூற்றை நம்பி ஏமாறுகின்றனர் .இது போன்று ஏமாறுபவர்களின் பட்டியலில் படித்தவர்கள் படிக்காதவர்கள் என அனைவரும் அடங்கி இருக்கின்றனர் என்பது தான் வேதனையான செய்தி.

இப்படிப்பட்ட ஒரு சமூகத்தில்  பாலியல் குறித்த படிப்பில் முனைவர் பட்டம்  பெற்ற நாரயண ரெட்டி அவர்கள், மக்களுக்கு அச்ச உணர்வினைப்போக்க பல போராட்டங்களை சந்திக்க வேண்டி இருந்தது.முதலில் மருத்துவமனை ஆரம்பித்தபொழுது  sex clinic என்ற  பலகை வைக்கக் கூடாது என்று நிர்ப்பந்தத்திருக்கின்றனர். இந்தத் தடைகள் ஒருபறம் இருக்க பரம்பரை சித்த மருத்துவர்கள் எந்த வித அடிப்படை அறிவியல் அறிவும் அற்று , வெறுமென மக்களின் அறியாமையை மூலதனமாகக் கொண்டு பொய் பிரச்சாரம் செய்வதினை முறியடிக்கத் தான் அதிகமாக அவர் போராட வேண்டி இருந்தது


இருப்பினும் இந்த தவறான பிரச்சாரத்தின் காரணமாக இளைஞர்களில் ஒரு சிலர் திருமணத்துக்கு முன் மருத்துவர்களை சந்திக்கின்றனர். ஆனால் அவர்கள் சந்திப்பது இது போன்ற ஏமாற்று பேர் வழிகளைத்தான் , அதை விட்டு விட்டு நாராயண ரெட்டி போன்ற மருத்துவரை அணுகலாம்.அதற்கான வாய்ப்பு இல்லாதவர்கள் சித்த மருத்துவத்தில் முறையான பட்டம் பெற்ற  B.S.M.S.(Bachelor of siddha medicine and surgery) மருத்துவர்கள் உங்கள் ஊருக்கு அருகாமையிலோ அல்லது அரசு மருத்துவ மனைகளில் உள்ள சித்த மருத்துவப் பிரிவிலோ இருப்பார்கள். அவர்கள் நிச்சயம் தகுதியான ஆலோசனைகளை வழங்குவார்கள் .

சேலம் சிவராஜிடம் நீங்கள் ஏமாந்ததன் பயனாக அவருக்குக் கிடைத்தவை ஏராளம், சேலம் பக்கம் சென்றவர்களுக்குத் தெரியும், தற்பொழுது சேலத்திலே பெரிய நன்கு நட்சத்திர விடுதி இவருடையது தான் ,அது மட்டுமன்றி, சித்த ,ஆயுர்வேதா மற்றும் ஹோமியோபதி மருத்தவக் கல்லூரிகளின் உரிமையாளராகவும் ஆகி இருக்கின்றார்.

இந்தப் பதிவின் நோக்கம் போலிகளை நம்பி ஏமாறாதீர்கள் என்பதே , எவர் மீதும் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி இல்லை.ஒரு படித்த சித்த மருத்துவனாக சமுதாயத்திற்கு என்னுடைய சிறிய பங்களிப்பு தான் இந்தப் பதிவு.  பாலியல் குறித்த அடுத்த பதிவில் வெகு விளக்கமாகக் கூறுகின்றேன் .

தலைப்பு ;பாலியல்  உணர்வு என்பது ஷங்கர் படமா? ராம் படமா ?

நன்றி 
செங்கதிரோன்