Monday, December 7, 2015

வெள்ளத்தால் வேதனைக்குள்ளான வெளிநாட்டுத் தமிழர்கள்

தமிழகத்தில் ஏற்பட்ட இந்த வெள்ள பாதிப்பினால் வெளிநாடுவாழ் தமிழர்கள் அனைவரின் உடல் வெளிநாட்டிலும் உள்ளம் தமிழகத்திலும் தத்தளித்து கொண்டிருக்கின்றது. வெள்ளம் குறித்த செய்தியினை அறிய 24 மணிநேரமும் கணினியையும் கைபேசியையும் பார்த்துக் கொண்டே இருக்கவேண்டி இருக்கின்றது. முகப்புத்தகமும் டிவிட்டரும் மிக மிக உபயோகமாக இருந்தாலும் சில சமயங்களில் வதந்திகளை பரப்பி பீதியை உண்டுபண்ணின.

நீர்ல் மூழ்கிய வீடுகள் , வாகனங்கள் ,விமான நிலையம் , ரயில்வே ஸ்டேஷன்  படங்களையும் காணொளிகளை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தோம். உறவினர்கள் , நண்பர்கள் ஆகியோரை தொடர்புகொள்ள முடியாமல் தவித்த தவிப்பினை சொல்லி மாளாது. செய்திகளில் பார்த்த மக்களின் அழுகுரலினால் சரிவர  உண்ணவோ உறங்கவோ இயலவில்லை.


பாரிஸ் நகர தாக்குதலின் போது உலகமே அதிர்ந்தது. ஆனால் சென்னையில் மிகப் பெரிய பேரிடர் ஏற்ப்பட்ட சமயத்தில் உலகம் கண்டு கொள்ளாத துயரத்தை விட இந்திய செய்தி ஊடகம் மிக மிக தாமதமாக இதனை கண்டுகொண்டது வருத்தமளிப்பதாக இருந்தது. இதனாலயே வட இந்தியர்கள் இந்த செய்தி குறித்து அதிகம் அறிந்து வைத்திருக்கவில்லை. நாங்களாகவே இந்தப் புகைப்படங்களை இந்திய நண்பர்களுக்கும் வெளிநாட்டு நண்பர்களுக்கும் காண்பித்தோம், அவர்களுக்கோ மிக ஆச்சர்யம் இவ்வவளவு முக்கியத்துவம் வாய்ந்த செய்தினை ஊடகங்கள் ஏன் கண்டு கொள்ளவில்லை என்று கோபபப்ட்டனர்.

வயதானவர்கள் ,நோயாளிகள் ,குழந்தைகள் ஆகியோருக்குத்தான் மிக அதிக பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்று நினைக்கின்றேன்.இதனை சரிசெய்ய மிக அதிக அளவிலான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.


கடந்த வாரம் செவ்வாய் கிழமை ஆரம்பித்த இந்தத் துயரம் இன்று வரை தொடந்து கொண்டிருக்கின்றது. பலரும் ஒரு மாதத்திற்கும் மேலாகும் இந்த நிலை சீராக என்கின்றனர்.இழந்த உடைமைகள் , பாதிப்படைந்த வீடுகள் மற்றும் வாகனங்கள் ஆகியவற்றை சரிசெய்ய மிக அதிக அளவுக்கான பொருளாதாரம் தேவைப்படும். இதை சரி செய்யும் அளவுக்கு மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். வணிகமும் பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது. எப்படி மீண்டுவரப் போகிறோம் என்றே தெரியாத நிலைதான் உள்ளது. இலங்கையில் போரின் போது மக்கள் திக்குத் தெரியாமல் சுற்றியது போல சென்னை நகரமெங்கும் மக்கள் பித்துப் பிடித்தது போல சுற்றிவருவதைப் பார்க்கையில் இது  நம் நகரம் தானா என்று நம்ப முடியாமல் கண்களை அகல விரித்துப் பார்க்க வேண்டி இருக்கின்றது.
Add caption



ஒரே ஒரு நன்மை ஏழை பணக்காரன் , மதம் சாதி ஆகிய ஏற்றத் தாழ்வுகளை இந்த வெள்ளம் அடித்து சென்றுவிட்டது. மனித நேயம் என்றால் என்ன என்று இந்தியாவிற்கே சென்னை  பாடம் கற்பித்தது.

பின்குறிப்பு: இந்த வெள்ள சேத சமயத்தில் கட்சிகள்   ஒருபக்கம் அரசியல் செய்து கொண்டிருக்க அலோபதி மருத்துவர்கள் சித்த மருத்துவத்தினை குறித்து அவதூறு பரப்பி வருகின்றனர். ஏற்கனவே இது குறித்து ஒரு பதிவினை எழுதி விட்டேன்.  
அல்லோபதி மருத்துவர்களும் அல்லோலூய குரூப்பும்
அலோபதி மருத்துவர்கள் செல்லத் தயங்கும் கிராமங்களில் சித்த மருத்துவர்கள் சேவை செய்து வருகின்றனர். நிலைமை இவ்வாறிருக்க இது போன்ற அசாதாரணமான சூழலில் அனைத்து மருத்துவர்களும் ஒன்றிணைந்து செயல்படுவது தான் சரியானத் தீர்வாக இருக்க முடியும்,அதை விட்டு சித்த மருத்துவமா அலோபதி மருத்துவமா என சண்டையிடுவதை தவிர்த்தல் நலம்.

நன்றி 
செங்கதிரோன்