Tuesday, March 7, 2017

யுவகிருஷ்ணா -சகலகலா வல்லவன்

பதிவர் , சினிமா விமர்சகர் , பத்திரிக்கை ஆசிரியர் (வண்ணத்திரை) , எழுத்தாளர்  போன்ற எண்ணற்ற முகங்கள் கொண்டவர் யுவகிருஷ்ணா, அதனால் தான் சகலகலா வல்லவன் என்று அவருக்குப் பிடித்த நடிகரான கமலின் படத் தலைப்பினையே அவருக்கான அடையாளமாக மாற்றி விட்டேன்.

ஒரு எழுத்தாளரின் குறிப்பின் மூலமாக தான் முகப்புத்தகத்த்தில் யுவாவை பின்பற்றத் தொடங்கினேன், கல்லூரியில் எனக்கு கிடைத்த திராவிட அரசியல் குறித்த பார்வைகளை இன்னும் மெருகேற்றிக் கொள்ள யுவாவின் பதிவுகள் மிகவும் உதவிகரமாக இருந்தன. ஏனென்றால் திராவிட அரசியல் வரலாற்று நிகழ்வுகளை மிக துல்லியமாக எழுதுவதால் நமக்கான புரிதல் மிக தெளிவாக இருக்கும்.அது மட்டுமன்றி அவர் அறிமுகப்படுத்தும் எழுத்தளார்கள் மற்றும் நூல்கள் குறித்து வாசிக்கத் தொடங்கினேன் . இது எனது வாசிப்பை பரவலாக்க செய்தது. மிக முக்கியமாக கே.என் .சிவராமன் , விமலாதித்த மாமல்லன் , விநாயக முருகன் , அதிஷா போன்ற பலர் குறித்து யுவாவின் மூலம் அறிய முடிந்தது.


ஒரு புறம் அரசியல் குறித்து எழுதினாலும் சினிமா குறித்த இவரது பதிவுகள் தான் பலருக்கும் பிடிக்கும். தன்னை ஷகிலா போன்ற கவர்ச்சி நாயகிகளின் ரசிகராக வெளிப்படியாக அறிவித்துக் கொண்ட ஒரே முகநூல் பிரபலம் இவர் மட்டுமே . தற்போது பூனம் பாஜ்வாவின் ரசிகராக மாறி அவ்வபோது அவரின் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை எல்லையற்ற மகிழ்ச்சிக்கு ஆளாக்கி வருகின்றார். முத்தாய்ப்பாக தற்போது வண்ணத்திரையின் ஆசிரியராக இருப்பதால்  பல சுவாரஸ்யமான செய்திகள் இடம் பெற்று  பத்திரிக்கை புத்தொளி பெற வழிவகைகள் செய்து வருகின்றார்.

இவரின் சினிமா விமர்சனங்களும் அதிரிபுதிரியாக இருக்கும் . எப்பொழுதுமே யுவாவின் விமர்சனங்கள் மிகுந்த மாறுபட்ட கோணத்தில் இருக்கும். சமீபத்தில் வந்த கிடாரி படம் தோல்வியினைத் தழுவியது . ஆனால் யுவா அந்தப் படம் குறித்த ஒரு மாறுபட்ட விமர்சனத்தைப் பதிவு செய்திருந்தார். எனவே அவரின் சினிமா விமர்சனங்கள் மூலம் பல்வேறு புதிய செய்திகளும் நமக்கு கிடைக்கும் .


அமர்த்தியா சென் argumentative Indian என்றொரு புத்தகம் எழுதினார் . ஆனால் யுவா ஒரு நடமாடும் argumentative Tamilian என்று சொல்லும் அளவுக்கு முக நூலில் நடக்கும் விவாதங்களில் எதிராளியை தலை தெறிக்க ஓட விடுவதில் கில்லாடி.  விஜயகாந்தின் தேமுதிக பற்றி  ஒரு புத்தகம் , நடிகைகளின் கதை , சரோஜாதேவி  போன்ற புத்தகங்கள்  எழுதி இருக்கின்றார்.


யுவாவின் ரசனையான முகம் தான் அனைவருக்கும் தெரியும் . அவரின் கடும் உழைப்பு, குடும்ப பின்னணி குறித்து அவருடைய குரு சிவராமன் பதிவு செய்த பிறகு யுவாவின் மேல் இன்னும் மதிப்பு கூடி விட்டது . சாதரண அடிப்படை தொழிலாளியாக தினமலரில் ஆர்மபித்த யுவா இன்று ஒரு பத்திரிக்கையின் ஆசிரியாராக மட்டுமன்றி எழுத்தாளர் , நூல் விமர்சகர் என்று பல்வேறு உயரங்களை அடைந்திருக்கின்றார்.


கமலஹாசன் மற்றும் கலைஞரின் தீவிர ரசிகர் . கொண்ட கொள்கையில் பிடிப்புடன் திகழும் லட்சியவாதி. 

யுவா மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

நன்றி 
செங்கதிரோன்

குற்றம்-23 : உண்மைக் கதையா ?



நம் தாத்தாக்கள் காலத்தில் பத்துக்கும் மிகாமல் குழைந்தை பெற்று சாதனை படைத்துக் கொண்டிருந்தனர். ஆனாலும் அவ்வாறு பிறக்கும் அனைத்துக் குழந்தைகளும் நெடு நாட்கள் வாழ்வதில் அதிக சிரமம் இருந்தது. ஆனால் தற்போதோ நிலையை  தலைகீழாக இருக்கின்றது.   ஒரே ஒரு குழந்தையினைப் பெற்றெடுப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகின்றது.


இந்த குழந்தையின்மை பிரச்சனையினை வைத்து பலரும் மக்களை ஏமாற்றி வருகின்றனர் . அவற்றில் முக்கியமாக ஆங்கில மருத்துவர்களில் சிலர் மக்களின் அறியாமையினை  பயன்படுத்தி பணம் சம்பாரிக்கின்றனர். 

குற்றம் -23 படத்தில் இயக்குனர் அறிவழகன் மிக துணிச்சலாக இந்த மோசடியை படமாக்கியுள்ளார். படத்தில் வரும் டாக்டர் தம்பதி போன்றே நிஜத்தில் சென்னையில் ஒரு டாக்டர் தம்பதி மிகப் பெரிய மருத்துவமனையினை அதிக விளமபரங்கள் செய்து நடத்தி வருகின்றனர். அவர்களை மனதில் வைத்து தான் இந்தக் கதையினை அறிவழகன் உருவாக்கி இருக்கின்றார் என்றே எண்ணத் தோன்றுகின்றது . மிக முக்கியமாக அதே டாக்டர் தம்பதி போன்ற உருவ ஒற்றுமை கொண்டவர்களை நடிக்க வைத்திருப்பது இதனை மேலும் உறுதி செய்வதாக இருக்கின்றது (இணையத்தில் ஆ என்ற எழுத்தில் தொடங்கும் குழந்தை மருத்துவமனையினை தேடினால் நீங்களும் கண்டு பிடித்து விடுவீர்கள்).

படம் குறித்த எனது பார்வை கீழே உள்ள காணொளியில் பாருங்கள்.



நன்றி 
செங்கதிரோன்