Wednesday, June 29, 2016

நவீன திருதராஷ்டன்கள் : படித்த பிள்ளைகள்களின் படிக்காத பெற்றோர்கள்

மம்மி சொல்லு டாடி சொல்லுன்னு பெருமைப்பட ஆங்கில வழியில் படிக்க வைத்த பெற்றோர்களுக்கு அந்த ஆங்கிலத்தாலே கண்ணனிருந்தும் குருடர்களாக வாழும் நிலை இன்று ஏற்பட்டிருக்கின்றது. கைபேசி தொழில்நுட்பம் மிகப் பெரிய அசுர வளர்ச்சி அடைந்த இந்த நிலையில்  பருவ வயதினர்கள் இதை பயன்படுத்தும் எண்ணிக்கை பல மடங்கு பெருகி வருகின்றது. இந்தப் பருவயதினார்கள் பெரும்பாலானோர் ஆங்கில வழிக் கல்வி பயில்பவர்கள் தான், ஆனால் இவர்களின் பெற்றோர்கள் அனைவருமே ஆங்கிலத்தின் வாசனை கூட அறியாதவர்கள். இப்படி ஒரே வீட்டில் இரு மொழி புலமை கொண்டவர்கள் வாழ்வதனால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் சிக்கல் குறித்து தான் இந்தப் பதிவு.






 படிக்காத பெற்றோர்களை நவீன திருதராட்டினன்கள் குறிப்பிடுவதற்கு முக்கியக் காரணமே தங்களின் வயது வந்த பிள்ளைகள் கைபேசியில் மற்றவர்களிடம்  ஆங்கிலத்தில் பரிமாறிக்  கொள்ளும் செய்திகளை இவர்களால் புரிந்து கொள்ள முடியாது. அதற்கான அர்த்தங்களை பெற்றோர்கள் கேட்டாலும் அவர்கள் உன்மையை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.


இன்னும் சில பெற்றோர்கள் இது போன்ற செயல்களை ஊக்குவிப்பது போல நடந்து கொள்வார்கள். எவ்வாறென்றால் முதல்  வரியில் சொன்னது போல டாடி மம்மினு கூப்பிடுவதை பெருமைப் பேசிக் கொண்டிருந்தவர்கள் இப்போது என் மகனுக்கோ அல்லது மகளுக்கோ என்னை விட அதிகம் கைபேசியை எப்படி இயக்குவது என்று தெரியும் என்று பெருமை அடித்துக் கொள்கின்றனர்.

இன்றைக்கு ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியரிடையே கூட வாட்ஸப் குரூப் உண்டு ,அவற்றில் படிப்பையும் தாண்டி மற்ற அரட்டைகள் தான் அதிகம் இருக்கின்றன . ஆனால் இந்தப் பிள்ளைகளின் பெற்றோர்கள் இதனை கண்டிக்காமல்  அதன் விபரீதம் உணராமல் இருப்பதனால் அந்த பிள்ளைகள் ஏதேனும் சிக்கலில் மாட்டிக் கொள்கின்றன.


சேலம் வினுப்ரியா தற்கொலையினைக் கூட இதனுடன் நாம் தொடர்பு படுத்திப் பார்க்கலாம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கைபேசியில் அதிக நேரம் செலவிட்டால்  அதனை கண்டிக்க வேண்டும். வளரும் வயதில் உள்ள பிள்ளைகளின் (Teen age ) மூளை வளர்ச்சி அதிகம் பக்குவபப்டுத்தி பார்க்கும் திறமை அற்றது .எதனையும் வெகுளியான மனப்பாண்மையுடன் தான் அணுகுவார்கள்.பெற்றோர்கள் தான் அவர்களுக்கு சரியான விழிப்புணர்வினை உண்டாக்க வேண்டும்.

செய்யவேண்டியவைகள்:

1.இரவு ஒன்பது மணிக்கு மேல் அவர்களை கைபேசி பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது . அவர்களின் தூக்கம் கெடுவதோடு மட்டுமன்றி கண்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும்.

2.வாட்சப் மற்றும் முகப்புத்தகத்தில் அவர்களின் படங்களை மற்றவர்களுக்கு அனுப்பக் கூடாது என்று சொல்வதோடு மட்டுமன்றி அதனால்  ஏற்படும் விளைவுகள் குறித்தும் அவர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும்.

3. மிக முக்கிய பொறுப்பு பள்ளிகளுக்கு உள்ளது .இன்றைய நிலையில் பள்ளியில் கைபேசி மற்றும் முகப்புத்தகத்தால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து முழுமையான ஒரு விழிப்புணர்வு வகுப்பு ஒன்றைக் கூட மாதம் ஒரு முறை நடத்தலாம்.

4. அதே போல காவல் துறையும் இணையக் குற்றங்களை மிக சாதாரணமான ஒன்றாக நினைக்காமல் அது குறித்த புகார்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் .

இந்தப் பிரச்சனையின் மையப்புள்ளியே மொழிதான், காலப்போக்கில் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்றே நம்புகின்றேன். இருப்பினும் நம் ஆங்கில மோகம் சில சமயங்களில் இது போன்ற சங்கடங்களைத் தருகின்றது .மேற்குலக நாடுகளில் அங்கிருக்கும் அனைத்துத் தொழில்நுடபக் கருவிகளும் அந்தந்த மக்களின் மொழியில் தான் இருக்கிறன்றன .என்னுடன் பணிபுரிந்த ஜப்பானியரின் கணினி முழுக்க முழுக்க ஜப்பானிய மொழியில் தான் இருக்கும் .அது தான் அங்கு சமூக சம நிலையினை உண்டாக்கி இருக்கின்றது.அந்த நாடுகளில் நம் நாட்டில் நிகழ்வது போன்ற குற்றங்கள் நடப்பதும் இல்லை.இதனை நாம் கவனத்தில் கொள்வது அவசியம்.


நன்றி 
செங்கதிரோன்