Monday, August 21, 2017

ஆட்சியை கவிழ்க்க முடியாத ஸ்டாலின்

அதிமுகவில் நடக்கும் உள்ளடி குழப்பங்களை பார்த்து வெறுத்துப் போனவர்கள் , ஏன் ஸ்டாலின் இந்த ஆட்சியை இன்னும் கவிழ்க்காமல் மிக்ஸர் சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றார் என்ற நியாமான கேள்வியினை எழுப்புகின்றனர். அனைவரின் ஆதங்கமும் புரிந்து கொள்ள முடிகின்றது . ஸ்டாலினுக்கும் அரியணையில் ஏற ஆசையில்லாமல் இருக்கும் என்று யாரும் எண்ணவில்லை. இருப்பினும் எது தடுக்கின்றது என்பது அரசியல் பார்வையாளர்களுக்கு நன்றாக தெரியும் .

யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் திமுக மட்டும் வெற்றி பெறவே கூடாது என்று ஓராண்டுக்கு முன் சபதமெடுத்தவர்கள் தான் இன்று தம்பி வா தலைமே ஏற்க என்று தமிழகத்தின் நான்கு மூலைகளிருந்தும் குரல் எழுப்புகின்றனர். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஆட்சியை கவிழ்க்க ஸ்டாலின் இறங்கினால் என்ன நடக்கும் என்பதை பின்வரும் பகுதியில் விவரிக்கின்றேன்.

இன்று அதிமுக இப்படி பிளவு பட்டு கிடக்கும் நிலையைப்  பார்த்து,  திமுககாரர்கள் தாங்கள் வெற்றி பெற்றிருந்தால் இதே நிலையினை தான்  பிஜேபி  தங்கள் கட்சிக்குள்ளும் நிகழ்த்தியிருக்கும் என்றே நினைத்திருப்பார்கள் . எனவே தங்களுக்கு ஒட்டுப் போடாத மக்களுக்கு உள்ளூர நன்றி தெரிவித்திருப்பார்கள் . ஏனென்றால் கருணாநிதிக்கு சாணக்கியத்தனமும் , நிர்வாகத்திறமையும் ஒருங்கே அமைத்திருந்தது . ஸ்டாலினுக்கோ நிர்வாகத்தில் மட்டுமே சிறந்தவர் எனவே ஆட்சியில் இருந்திருந்தால் பிஜேபி மிக எளிதாக வீழ்த்தியிருக்கும்.

ஏனென்றால் இரைக்காக ஒற்றைக்காலில் தவம் இருக்கும் கொக்கு போல பிஜேபி எப்பொழுது திமுக, அதிமுக எம்எல்ஏக்களை  பேரம் பேசுமோ  அப்பொழுது வசமாக வருமானவரித்துறையினை வைத்து ஒட்டு மொத்தமாக திமுகவினை பலவீனப்பப்டுத்தலாம் என்று காத்திருக்கின்றது . இதனை மிக தெளிவாக உணர்ந்ததால் தான் திமுக மிக அமைதியாக இவ்வளவையும் வேடிக்கைப் பார்க்கின்றது. அறுபதாண்டு காலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியையே ஒரு மாநிலங்களவை எம்பிக்காக குஜராத்தில் பிஜேபி செய்த களேபரங்களைப் பார்த்த பின்னர் எந்த கட்சி தானே தன் தலையில் மண்ணை வாரிபோபோட்டுக்கொள்ளும்?

எனவே பிஜேபி பலவீனமடையும் வரை ஸ்டாலின் கவிழ்ப்பு முயற்சி குறித்து சிறிதளவு கூட சிந்திக்க மாட்டார் . இதை விட மிக முக்கியமாக 2ஜி என்னும் கத்தியும் தலை மேல் தொங்கி கொண்டிருக்கின்றது. 

நாமெல்லாம் ஸ்டாலினுக்கு ஆட்சியை கவிழ்க்கும் அளவுக்கு திறைமை இல்லை என்று எண்ணிக் கொண்டிருக்கின்றோம் , ஆனால் நான் மேலே குறிப்பிட்டவாறு , ஆட்சிக்காக கட்சியையும் பணத்தையும் இழக்க விருப்பமில்லாததால் தான் மிக கவனமாக இந்த ஆட்டத்த்தினை திமுக கண்காணித்து வருகின்றது.

நன்றி 
செங்கதிரோன்