Friday, June 27, 2014

தொக்கணமும் கைரோபதியும் ஒன்றே...

தொக்கணம் என்றாலே என்னவென்று தெரியாது இதில் கைரோபதி என்ற புதிய வார்த்தையையும் இணைத்து என்ன சொல்ல வருகின்றீர்கள் என்று நீங்கள் கேட்பது புரிகின்றது.

கடந்த இரண்டு வாரமாக கடுமையான தோள்பட்டை வலி, இது வரை மூன்று மருத்துவர்களைப் பார்த்து விட்டேன். வலி குறையவே இல்லை. சினிமா வைத்தியமான உற்சாக பானம் அருந்தியும் வலி தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இந்நிலையில் நண்பர் ஒருவர் கைரோபதி வைத்தியம் பாருங்கள் நல்ல தீர்வு கிடைக்கும் என்றதனால் , கைரோபதி என்றால் என்ன என்று அறிந்து கொள்ள விக்கிபீடியாவில் படித்ததும் உடன் நினைவுக்கு எனக்கு நினைவுக்கு வந்தது தொக்கணம் என்ற சித்த மருத்துவ சிகிச்சை முறை.

தொக்கணம் என்பதன் அர்த்தம் மிக எளிது. தொக்கு+ அணம். அதாவது தொக்கு என்றால் நம்முடைய தோல் (skin), அணம் என்றால் பொருந்தி செய்யும் முறை. இப்பொழுது இரண்டு வார்த்தைகளையும் இணைத்தால் தோலினைப் பொருந்தி செய்யும் முறை என்று பொருள்படும். இந்த சிகிச்சை முறை சித்த மருத்துவ பாடத்திட்டத்தில் அறுவை மருத்துவத்துடன் இணைத்து வைக்கப் பட்டிருப்பதனாலேயே எலும்பு சமந்தப்பட்ட நோய்களுக்கு இது அவசியம் என்று புரிந்து கொள்ளலாம்.

சித்த மருத்துவத்தில் எந்த ஒரு குறிப்பினையும் மேலோட்டமாகவோ அல்லது உரிய விளக்கங்கள் இல்லாமலோ எழுதவதில்லை.  தொக்கணத்திணையும்  எண் வகையாகப் பிரித்து ஒவ்வொன்றிணையும் செய்யும் முறை மற்றும் அது எந்த வகையான நோய்க்கு ஏற்றது என்றும் மிகத் தெளிவாக கூறியுள்ளனர். ஆயுர்வேத மருத்துவத்திலும் இதனைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றது எனினும் அது நான்கு வகையுடன் மட்டுமே உள்ளது.

இவை மட்டுமன்றி தொக்கணத்திணை தகுந்த மருந்து கலந்த எண்ணைய் சேர்த்து செய்யும் பழக்கமும் உள்ளது. இந்த  முறையினை ஒகேனக்கல் அருவி மற்றும் பாபனாசத்தில் உள்ள அகத்தியர் அருவியில் பயிற்சி பெற்ற maaseures என்று சொல்லக்கூடிய ஆட்கள் சுற்றுலா பயணிகளுக்கு செய்வதைக் காணலாம்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த சிகிச்சை முறையினை நாம் சரிவரப் பயன்படுத்துவதில்லை. ஆனால் மேற்குலகம் கைரோபதி  என்ற பெயரில் நம்முடைய தொக்கண சிகிச்சை முறையினை சற்று மேம்படுத்தி  மக்களுக்கு பயனளிக்கும் வகையில் என்பு மற்றும் மூட்டு சார்ந்த நோய்களுக்கு தீர்வளிக்கின்றனர்.

இந்தப் பதிவின் மூலம் சொல்ல வரும் செய்தி என்னவென்றால்  நம் மண் சார்ந்த மருத்துவத்தின் வழியாகவே சிகிச்சை எடுத்துக்கொள்ள முயற்சி மேற்கொள்ள வேண்டும். தொக்கண சிகிச்சையானது தாம்பரத்தில்உள்ள தேசிய சித்த  மருத்துவ மனையிலும் மற்றும் அரும்பாக்கத்தில் அறிஞர் அண்ணா மருத்துவ மனையிலும் வழங்கப்படுகிறது.