Thursday, January 26, 2017

முருங்கை குறித்த பாக்யராஜ் சொன்னது உண்மையா?

1983ல் வெளிவந்த முந்தானை முடிச்சு படத்தில் முருங்கை ஆணின் உடலை முறுக்கேற்றும் என்ற கருத்தினை பாக்யராஜ் சொல்ல அது  மிக பிரபலமானது. மீண்டும் அதே கருத்தினை 2013ல் வெளிவந்த உத்தம புத்திரன் படத்திலும் பாக்யராஜ் அதே கருத்தினை கூறுகின்றார். இந்த நவீன  யுகத்திலும் அவர் இந்த கருத்தினை சொல்லும்போது அதன் பிண்ணனி குறித்தும் நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கின்றது . முருங்கையின் பயன் என்பது ஆணுக்காக மட்டுமல்லாமல் அனவைருக்கும் பலனளிக்கக்கூடிய முக்கிய மூலிகையாக சித்த மருத்துவம் குறிப்பிடுகின்றது.

முருங்கை இந்தியா, இலங்கை மட்டுமன்றி ஆப்பிரிக்க  மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் பரவலாக விளையும் மூலிகை. தமிழ் பாரம்பரியத்தில் முருங்கை முக்கிய உணவுப் பொருளாக இருக்கின்றது.  ஆபிரிக்காவில் முருங்கை மரத்தினை Miracle tree என்றே குறிப்பிடுகின்றனர்.

இந்த கட்டுரையில் முதலில்  சித்த  மருத்துவத்தில் முருங்கையின் பலன்கள் குறித்து சொல்லப்பட்டுள்ளவற்றையும்  , அடுத்து அறிவியல் ரீதியாக நடத்தப்பட்ட சோதனைகள் மூலம் கண்டறியப்பட்ட முருங்கையின் பலன்கள் மற்றும் கடைசியாக பாக்யராஜ் முருங்கை குறித்த சொன்ன கருத்தின் உண்மை தன்மை குறித்தும் பார்ப்போம்.

முருங்கை இலை மற்றும் காய் ஆகியவை சமைத்து சாப்பிட்டால்   சோர்வை நீக்கி புத்துணர்வினை உண்டு பண்ணும் என்று   கூறப்பட்டுள்ளது.மிக முக்கியாயமாக பிள்ளை பெற்ற தாய்மார்களுக்கு மிக முக்கிய உணவாக இது செயல்படும்  , ஏனெனில் முருகைக்கு பால் சுரக்கும் தன்மை அதிகம் உண்டு , இதனால் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்து கிடைக்கின்றது.மேலும் சிறுவயது பிள்ளைகளுக்கு உண்டாகும் வயிற்று பூச்சி பிரச்ச்னைகளுக்கு முருங்கை இலை  நல்ல தீர்வாக  இருக்கும் என்று சித்த மருத்துவத்தில் குறிப்பிடபப்ட்டுள்ளது.

முருங்கை மரத்தின் வேர்கள் வீக்கத்தை குறைக்கவும் , காயங்களுக்கு  மருந்தாகவும்  பயன்படுகின்றது. மேலும் காது மற்றும் பல்வலியினை குணபப்டுத்துவதில் முருங்கையின் வேர் உபயோகப்படுத்தப்படுகின்றது.முருங்கை மரத்தின் பட்டை பாம்புக்கடி  போன்ற நச்சுமுறிவு மருத்துவத்தில் நல்ல பலன் கொடுக்கும் என்று சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.முருங்கைப்பிசினானது வயிறு தொடர்பான நோய்கள் , மூட்டுவலி மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்களுக்கான மருந்துகளில் சேர்க்கப்படுகின்றது.

நவீன அறிவியல் அறிஞர்கள்  சித்த  மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ளவற்றின் உண்மை தன்மை குறித்து உறுதிபடுத்த பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.முருங்கை குறித்து சித்த மருத்துவம் போன்றே  உலகம் முழுக்க உள்ள பரமப்ரிய மருத்துவ முறைகளில் சொல்லப்பட்டுள்ளவை குறித்த ஆராய்ச்சிகள் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 

பாரம்பரிய முறைகளில் முருங்கைக்கு தாய்மார்களுக்கு அதிக பால் சுரக்கும் தன்மை உடையது என்று கூறியிருப்பதை  நவீன அறிவியல் ஏற்றுக்கொண்டது . ஏனென்றால் முருங்கையில் பால் மற்றும் முட்டையில் இருப்பதை  விட அதிக அளவு கொண்ட புரதம் இருப்பதையும் மேலும் கால்சியம் அளவும் மிக அதிக அளவில் முருங்கை இலையில் இருப்பது கண்டறியபப்ட்டது..வைட்டமின் A ,B ,C மற்றும் E முருங்கையின் காய் மற்றும் இலையில் இருக்கின்றது , இதனால் கண்களுக்கு பாதுகாப்பினையும் , வைட்டமின் C குறைபாட்டினால் வரும் ஸகர்வி நோயினை தடுப்பதிலும் முக்கியபங்காற்றுகின்றது.

முருங்கையின் இலை மற்றும் காயினை (விதைகள்) பொடித்து எலிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் முருங்கை உடலில் உள்ள பலவேறு உறுப்புகள் தொடர்பான நோய்களை நீக்குவதில் சிறப்பாக செயல்படுகின்றது என்று கண்டறியப்பட்டது. 

மூளை : முருங்கை இலை மற்றும் விதைக்கு தூக்கமின்மையினை சரி செய்யும் ஆற்றல் உள்ளது கண்டுபிடித்துள்ளனர். மேலும்  வயதானவர்களுக்கு ஏற்படும் மறதி நோய்க்கு முருங்கை இலை பலனளிக்கும் என்பதனையும்  எலிகளில் நடத்திய சோதனையில் கண்டுபிடித்துள்ளனர்.

இருதயம்: இருதய நோய் உணடாவதற்கு முக்கியக் காரணமான கொழுப்புகளை கரைக்கும் ஆற்றல் முருங்கையிலைக்கு உள்ளது.முக்கியமாக ரத்தக்குழாய்களில் படியும் கொழுப்புகளை அகற்றி ரத்த ஓட்டத்தை சரி செய்வதில் மற்ற கீரைகளை விட முருங்கை சிறப்பாக செயலாற்றுகின்றது.

நீரிழிவு: நவீன அறிவியல் ஆய்வுகள் நீரிழிவு நோயாளிகள் வாரம் இருமுறை முருங்கை கீரை எடுத்துக் கொள்வதன் மூலம் நோயின் தன்மை வெகுவாக சரி செய்யும் என்று பரிந்துரைக்கின்றனர்.

மேற்சொன்னவை மட்டுமல்லாமல்  சிறுநீரக கோளாறுகள் , தோல் நோய்கள் மற்றும் வயிறு தொடர்பான நோய்களை தீர்ப்பதில் முருங்கையின் பங்களிப்பு குறித்து பலவேறு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

இறுதியாக பாக்யராஜ் முருங்கை ஆணின் உடலை முறுக்கேற்றும் என்று சொன்னது குறித்து பார்ப்போம். சித்த  மருத்துவத்தில் முருங்கைக்கு சோர்வை நீக்கி ஆற்றலை கொடுக்கும் தன்மை இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளதால் இது ஆண்களுக்கு  உடல் வலைமையினை அதிகரிக்கும் என்று புரிந்து கொள்ளலாம். நவீன அறிவியல் முருங்கை இலையில் உள்ள சப்போனின்களால் ஆண்களுக்கு தாம்பத்ய உறவில் அதிக விருப்பத்தினை உண்டாக்கும்  என்று உறுதிசெய்துள்ளது. மேலும் முருங்கை விதையில் உள்ள சத்துக்கள்  ஆண் பெண் இருவருக்குமே தாமபத்ய உறவில் ஈடுபடுவதற்கான நாட்டத்தினை பெருக்கும் என்று கண்டறிந்துள்ளனர்.

சித்தர்கள் முருங்கையினை அதன் பல தரப்பட்ட மருத்துவ செய்கைகளுக்காக  மகா மூலிகை என்றழைக்கின்றனர். நவீன மருத்துவ உலகம் நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் பாதுகாக்கும்  ஆற்றல் பெற்றிருப்பதால் அதிசயத்தக்க மரம் என்று குறிப்பிடுகின்றது. ஆண்கள் , பெண்கள் , குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அனைவருக்கும்  பலனளிக்கக் கூடிய முருங்கையினை நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டு நோயில்லா வாழ்வினைப் பெறுவோம். 

கனடாவில் வசித்து வரும் மூளை  நோய்கள் குறித்த ஆராய்ச்சியாளர் Dr. செந்தில் கிருஷ்ணசாமி PhD (Neuroscience)  அவர்களால்  எழுதப்பட்ட இந்த கட்டுரையை அவரின்அனுமதியுடன் இங்கு பகிர்கின்றேன்.

நன்றி 
செங்கதிரோன்

 

நெல்லிக்கனி :ஒளவையார் காலம் முதல் இன்று வரை


தருமபுரியை ஆண்ட மன்னன் அதியமான் தன்னிடம் இருந்த நெல்லிக்கனியினை தமிழுக்கு தொண்டாற்றும் ஒளவையார்  நீண்ட நாள் வாழ்வதற்காக வழங்கினான் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த கதை.ஆனால்  அதியமான் வாழ்ந்த காலத்தில் ஏகப்பட்ட பழங்கள் இருக்க ஏன் நெல்லிக்கனியினை ஒளவைக்கு வழங்கினான் என்பதற்கு காரணம்  நம் சித்தர்கள் காயகற்பத்தில் அதனை முதன்மையான ஒன்றாக வைத்திருந்ததேயாகும். அதியமான்-ஒளவையார் இடையே நடந்த இந்த நிகழ்வின் மூலம் அதியமானின் வள்ளல் தன்மை , ஒளவையின் தமிழ் பற்று என்ற இரண்டை மட்டுமே இன்றும் தமிழ் சமூகம் கொண்டாடும் வேளையில் சித்த மருத்துவர்களாகிய நாம் இந்த வரலாற்று நிகழ்வில் நெல்லிக்கனியின் முக்கியத்துவமும் மக்களுக்கு சொல்லப்பட்டிருக்கின்றது என்ற உண்மையினையும் எடுத்துரைக்க வேண்டிய அவசியம் உள்ளது.




நெல்லிக்கனி குறித்து நவீன அறிவியல் துணை கொண்டு நடத்திய ஆய்வு முடிவுகளும் ஆச்சரியமூட்டும் வகையில் சித்தர்கள் சொன்ன அனைத்தும் உண்மை என்று எடுத்துரைக்கின்றன. மிக குறிப்பாக இரண்டு மதத்திற்கு முன் வந்த ஒரு அறிவியல் கட்டுரை நெல்லிக்கனி குறித்து இதுவரை நடைபெற்ற ஆய்வு முடிவுகள் குறித்து ஒரு தொகுப்பினை வெளியிட்டிருக்கின்றது.

நெல்லிக்கனியில் வைட்டமின் சி அதிகம் நிரம்பியிருக்கின்றது என்பது தெரிந்த ஒன்று,மற்றோரு மூலக்கூறான கேலிக்அமிலம் (Gallic acid) தான் விட்டமின் சி யைவிட அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. ஏனென்றால் கேலிக் அமிலத்திற்கு Anti-inflammatory, Antioxidant, Anti-inflammatory, Anti-proliferative, Anti-cancer, Anti-diabetic, Cardio-protective, Neuroprotective, Antibacterial என்ற  பல்வேறு செயல்களை செய்கின்றது. இன்னும் விரிவாக பார்த்தோமானால் , திரிபலா சூரணத்தில் சேரும் மற்ற இரண்டு மூலிகைகளான கடுக்காய் , தான்றிக்காயினை விட நெல்லிக்காயில் மட்டுமே அதிக அளவு கேலிக் அமிலம் இருக்கின்றது. அதனால் தான் நெல்லிக்காயானது மற்ற மூலிகைகளை தாண்டி முக்கியத்துவம் பெறுகின்றது.

கீழ்க்கண்ட படத்தில் உள்ளது  போல் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் சார்ந்து ஏற்படும் நோய்களை தீர்ப்பதில் நெல்லிக்காய் முக்கியபங்காற்றுகின்றது.மேற்சொன்ன ஆய்வுக்கட்டுரையில் நெல்லிக்கனியில் உள்ள பல்வேறு வேதிப்பொருட்கள் நீரிழிவு , புற்று நோய் , மூளை தொடர்பான நோய்களில் செயலாற்றும் விதம் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.



கட்டுரையின் முடிவில் சொல்லப்பட்டுள்ள கருத்து தான் நெல்லிக்கனியின் நோய் தீர்க்கும் ஆற்றல் குறித்த கருத்துக்களுக்கு வலு சேர்க்கும் விதமாக உள்ளது. அது என்னவென்றால் ஒரு துப்பாக்கி குண்டு மனிதனின் ஆயுளை போக்கும் ஆற்றல் வாய்ந்தது , அது போல தான் குண்டு வடிவத்தில் இருக்கும் ஒரு  நெல்லிக்கனிக்கு  மனிதனின் ஆயுளை நீட்டிக்க செல்லும் அளவுக்கான சிறப்பு கொண்டது என்று முடித்துள்ளனர்.

மேற்சொன்ன செய்திகளிலிருந்து ஒளவையார் காலம் முதல் இன்று வரை நெல்லிக்கனியானது அதன் தன்மையினை இழக்காமல் மக்களுக்கு நன்மை அளித்து வருகின்றது என்பதனை உணர்ந்து கொள்ள முடியும்.

References:
1.     Emblica officinalis (Amla): A review for its phytochemistry, ethnomedicinal uses and medicinal potentials with respect to molecular mechanisms. Pharamcology research.2016, Sept.

கனடாவில் வசித்து வரும் மூளை  நோய்கள் குறித்த ஆராய்ச்சியாளர்

Dr. செந்தில் கிருஷ்ணசாமி PhD (Neuroscience)  அவர்களால்  எழுதப்பட்ட இந்த கட்டுரையை அவரின் அனுமதியுடன் இங்கு பகிர்கின்றேன்.

நன்றி 
செங்கதிரோன்

Saturday, January 14, 2017

வெளிநாட்டு வாழ்க்கை சொர்க்கத்தில் நரகம் -கண்ணாடி சாலைகள்

வெற்றிக்கொடி கட்டு படத்தில் வடிவேலு வெளிநாட்டு சாலையில் முகம் பார்க்கும் அளவுக்கு சுத்தமாக இருக்கும் என்றும் அங்கு இலை போடாமலே சாதம் போட்டு சாப்பிடலாம் என்று சொல்லுவார். ஏனென்றால் அவ்வளவு சுத்தமாக இருக்கும். ஆனால் இது வெளிநாட்டு சாலைகளின் சுத்தம் பற்றிய பதிவல்ல.

பனிப்பொழிவிற்கு பிறகு சாலைகளில் தேங்கிய இந்த பனிக்கட்டிகள் மிகுதியான குளிரினால் உறைந்து விடும். இதனால் சாலைகள் கண்ணாடி போலாக மாறிவிடும் . பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தாலும் இந்த சாலை கள் மிக ஆபத்தானது.ஏனென்றால் இந்த சாலைகளில் நடக்கும்போதும் , வண்டி ஓட்டும்போதும்  மிக கவனமாக இருக்க வேண்டும்.

பனிக்காலங்களில் இங்கே  அனைவரும் பூட்ஸ் மட்டுமே அனைத்து செல்வர், அது கால்களுக்கு குளிரிலிருந்து பாதுகாப்பினையும் நடக்கும்போது இந்த கண்ணாடி சாலைகளில் இருந்து வழுக்கி விழாமல் நடக்க உதவும்.இப்படி பூட்ஸ் போட்டுக் கொண்டு நடந்தாலும் வழுக்கி விழுவது அடிக்கடி நிகழும். இது போன்ற விழுவதனால் சாதாரண அடி  முதல் எலும்பு முறிவு ஏற்படும் அளவுக்கு வரை விபத்து நிகழும். அதனாலேயே அனைவரும் மிக மெதுவாக கீழே பார்த்து நடப்பார்கள்.

கண்ணாடி சாலை


வாகனங்களுக்கும் குளிர்காலத்திற்கு ஏற்ற சக்கரம் இருக்கின்றது. குளிர் காலம் வந்தவுடன் அனைத்து வாகனங்களுக்கும் குளிர்கால சக்கரம் மாற்றி தான் வண்டிகளை இயக்குவர். பலரும் அதிக பனிப்பொழிவின் போது வாகனம் ஓட்ட மிக சிரமபப்டுவர். இதிலும் ஒரு வேடிக்கையான சம்பவம் என்னெவென்றால் இந்த கண்ணாடி சாலைகளில் மிக சரிவான பாதைகளில் வண்டி ஒட்டி செல்லும் போது பிரேக்க்கும் கட்டுப்படாமல் வண்டி வழுக்கிக் கொண்டே செல்லும்.

கண்ணாடி சாலையில் வாகனங்கள் வழுக்கி செல்வதைப் பாருங்கள் 


வெளிநாட்டில் இந்த குளிர் காலங்களில் இது போன்ற பல்வேறு சுகமான அவஸ்தைகள் அதிகம் இருக்கின்றன.

நன்றி
செங்கதிரோன்

Tuesday, January 3, 2017

ஆப்பிரிக்க மருத்துவர் -பிரெஞ் திரைப்படம்

பிரான்சின் ஒரு சிறு நகரத்தில்  ஒரு ஆப்பிரிக்க மருத்துவருக்கு நடந்த   இனவெறி சோகத்தை மிக நகைச்சுவையாக விவரிக்கும் படம் தான் மிக சமீபத்தில் வெளிவந்த  ஆபிரிக்க மருத்துவர் திரைப்படம்.

உலகமெங்குமே மருத்துவர்கள்  கிராமத்தில் பணியாற்ற அதிக ஆர்வம் காட்டுவதில்லை. அதே போன்ற ஒரு நிலைதான் தான்  பிரான்ஸ் நாட்டில் உள்ள சிறுநகரத்தின் மேயரும் தன கிராமத்திற்கு பணியாற்ற ஒரு மருத்துவரை தேடி கொண்டிருந்தார்.  அதே நேரத்தில் பிரெஞ் மருத்துவ கல்லூரியில் படிப்பு முடித்த ஆப்பிரிக்க இளைஞனுக்கு அவனுடைய நாட்டின் அதிபருக்கு மருத்துவராக பணியாற்ற வாய்ப்பு கிடைக்கின்றது.ஆனால் அதிபரின் சர்வாதிகாரத்தனமும்  ஊழலும் பிடிக்காததால் அந்த வேலையை செய்ய மறுக்கின்றான். அப்பொழுது அந்த தன் நகரத்திற்கு மருத்துவரை தேடும் மேயரை சந்தித்து அந்த வாய்ப்பினை தனக்கு வழங்குமாறு கேட்கின்றார். ஆனால் அவரோ நீ அதுக்கு சரிப்பட மாட்ட என்கின்றார். நான் கருப்பன் என்பதால் தான் மறுக்கின்றீர்களாஎன்று கேட்டு மடக்கி அந்த வாய்ப்பை பெறுகின்றார்.

இதன் பிறகு நடப்பவை அனைத்தும் சோகம் கலந்த நகைச்சுவை. ஏனென்றால் அவரின் மனைவி மற்றும் குழ்நதைகள் தாங்கள் பாரிஸ் நகருக்கு செல்லப் போகிறோம் என்று நினைத்து கனவுக் கோட்டை கட்டுகின்றார்கள். பிரான்ஸ் வந்து இறங்கியபின் தான் தெரிய வருகின்றது , அது எந்த ஒரு ஆடம்பரமுமில்லாத சிறு நகரம் அங்கு தாங்கள் எப்படி வாழப்போகிறோம் என்று திடுக்கின்றார்கள். 

பள்ளிகளில் அந்த மருத்துவரின் குழ்நதைகளுக்கு நடக்கும் இனவெறி தாக்குதல்கள். மருத்துவமனையில் கறுப்பினர் மருத்துவராக இருந்ததால் யாரும் மருத்துவமனைக்கே வரவில்லை.

ஆனால் இந்த இனவெறி தொடர்பான தாக்குதல்கள் மற்றும் மக்கள் அவரை ஏற்றுக் கொள்ளாததை அவர் மிகப் பெரிய குற்றமாக கருதாமல் அது மக்கள் திடீரென கறுப்பர்களை பார்க்கும் போது  இது போன்ற எதிர்வினைகள் வருவது இயல்பான ஒன்று என்றே அந்த மருத்துவர் பார்த்தது தான அவருக்கு பின்னால் வெற்றியைத் தேடி தந்தது.





படத்தின் சிறப்பம்சங்கள்:

1. தன் நாட்டு அதிபருக்கு மருத்துவராக சேவை செய்யும் அறிய வாய்ப்பு கிடைத்தும் அவர் ஊழல்வாதி என்பதால் அதனை மறுக்கும் துணிச்சல்.
2. தன் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் குறித்த அதிக அக்கறை கொண்ட அவரின் அக்கறையினை பார்க்கும்போது அது நமக்கும் ஒரு உத்வேகத்தினை கொடுக்கின்றது  
3. மக்களை தன பக்கம் ஈர்ப்பதற்காக அவர் எடுக்கும் முயற்சிகள்
4.முதன் முதலாக பனிபொழிவினை(snow fall) பார்த்து அந்த மொத்தக் குடும்பமும் கொண்டாடும் அந்த தருணம்
5.மற்ற நகரங்களில் வசிக்கும் இந்த ஆபிரிக்க குடும்பத்தின் சொந்தங்கள் வந்து இந்த சிறு நகரத்தின் ஒட்டு மொத்த மக்களையும் திரும்பி பார்க்க வைக்கும் அளவுக்கு அவர்கள் போடும் ஆட்டம்.

இது உண்மையாக நடந்த சம்பவம் என்பதனால் இந்தப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையினை அமைத்தது அந்த மருத்துவரின் இளைய மகன். தன் அப்பாவின் போராட்ட வாழ்வினை மிக அருமையாக பதிவு செய்த்திருக்கின்றார். 

உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் இந்தப் படத்தினை பார்த்து மகிழுங்கள்  

நன்றி 
செங்கதிரோன்