Tuesday, July 25, 2017

ஒரு கூர்வாளின் நிழலில் -புத்தக விமர்சனம்



இலங்கையில் நடந்த விடுதலைப்புலிகள் போராட்டம் குறித்த நாம் அறியாத செய்திகள் பல உள்ளன. 2009ம் ஆண்டு இந்த இயக்கம்  யாருமே எதிர்பாராத நிகழாவாக இந்த இயக்கம் முற்றாக அழித்தொழிக்கப்பட்டது. மிக வலிமை வாய்ந்த இயக்கம் என்று நாம் நம்பிக்கொண்டிருக்கையில் பிரபாகரன் அவர்கள் கொல்லப்பட்ட புகைப்படமே அந்த இயக்கத்தின் வீழ்ச்சியினை தெள்ளத் தெளிவாக உணர்த்தியது. 

இந்த வீழ்ச்சி எவ்வாறு நிகழ்ந்தது என்று அறிய விரும்புபவர்களுக்கு இந்த புத்தகம் பல்வேறு விடைகளை நமக்கு அளிக்கின்றது. இருப்பினும் அதனையும் தாண்டி  தமிழினி எப்படி இந்த இயக்கத்திற்குள் இணைந்தார் , பள்ளி பருவத்திலிருந்தே இயக்கம் குறித்த வரின் பார்வை என பல்வேறு செய்திகள் இதில் நிரம்பியிருக்கின்றன.

தமிழ்நாட்டு சூழலில் விடுதலைப் புலிகள் இயக்கம் குறித்து அதிகம் நமக்கு தெரிந்த நபர்கள் பிரபாகரன் , ஆண்டன் பாலசிங்கம் , தமிழ்ச்செலவன் போன்ற வெகு சிலர் மட்டுமே , ஆனால் புத்தகத்தில்  களப்  (போர் புரிபவர்கள் )போராளிகள் மட்டுமன்றி  , மக்களுடன் இணைந்து செயல்பட்டவர்கள்  (விவசாயம் , நீதித்துறை , காவல் துறை , அரசியல் பயிற்சி கூடம் , சிறார் பாதுகாப்பு மையம் ) என பல பிரிவுகளில் பணியாற்றியவரகள் குறித்த செய்திகள் உள்ளன . குறிப்பாக சுனாமி ஏற்பட்ட காலத்தில் இந்த இயக்கம் மக்களுக்கு செய்த பணிகள் பாராட்டுக்குரியவையாக இருந்தது.

தமிழினி இயக்கத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்றியிருப்பதனால் அவரின் கருத்துகள் மூலம் இயக்கம் எவ்வாறு செயல்பட்டது என்பதனை மிக தெளிவாக உணர முடிகின்றது . அது மட்டுமன்றி பிரபாகன் முதற்கொண்டு இயக்கத்தின் அனைத்து முன்னோடிகளுடனும் , இலங்கை அரசுடனும் , வெளிநாட்டு அமைப்புகளுடனும் தொடர்பில் இருந்தவர் என்பதனால்  அவர் இந்த விடுதலைப் போராட்டம் குறித்து அவரின் விமர்சனம் சரியானது என்றே தெரிகின்றது.

பெண் போரளிகள் பலரைப்பற்றியும் குறிப்பிட்டிருக்கின்றார் . கர்னல் விதுஷா என்பவரின் வீரசாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்பு குறித்து படிக்கையில்  மிக பிரம்மிப்பாக இருக்கின்றது . ஒரு வேளை போரில் வெற்றி அடைந்திருந்தால் இவர்களின் வீரத்தினை உலகமே போற்றியிருக்கும் என்றே தோன்றுகின்றது. தமிழினி அவர்களின் தங்கையும் இந்த போராட்டத்தில் பங்கெடுத்து மாண்டிருக்கின்றார் . 

தமிழினி குறித்த விமர்சனம் :
 இந்தப் புத்தகம் வெளிவந்த பிறகு விடுதலைப்புலி இயக்க ஆதரவாளர்கள் மிக கடுமையான எதிர்வினை ஆற்றியிருந்தனர் . ஆனால் அவற்றுக்கு பதிலளிக்க அவர் உயிருடன் இல்லை . 48வயதிலியே  புற்று நோயால் மரணமடைந்து விட்டார். போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்து விட்டதால் துரோகியாக அடையளிப்படுத்தப்பட்டார் . இலங்கை சிறையில் இரண்டு வருடம் , புனர்வாழ்வு மையத்தில் ஒருவ  வருடம் பின்னர் திருமணம் செய்து கொண்டு சில காலம் நிம்மதியான வாழ்வு என்றே இவரின் வாழ்க்கை அமைந்திருக்கின்றது.

பிரபாகரனை அனவைருக்குமே பிடிக்கும் , அதற்காக அவர் மீது விமர்சனம் வைப்பர்வர்களை துரோகி என அடையாளப்படுத்தல் தவறான முன்னுதாரணம் . மேலும் காலச்சுவடு பதிப்பகம் இப்புத்தகத்தினை வெளியிட்டதனாலேயே , அந்த பதிப்பகம் சார்ந்த அரசியலோடு இப்புத்தகம் இணைத்துப் பார்க்கப்படுகின்றது.


 பிரான்சில் வாழும் ஷோபா சக்தி என்ற இயக்கத்தின் முன்னாள் போராளி பல்வேறு விமர்சனங்களை இயக்கம் குறித்து வெளிப்படுத்தியிருந்தார் . அடுத்து இது தமிழினியின் பார்வை . ஜனநாயகம் என்பது எதிர்க்குரலை கேட்பது தான் , அது போன்ற ஒரு எதிர்க்குரல் தான் இந்த புத்தகம் . 

காலச்சுவடு பதிப்பகம் 
விலை .125
பக்கங்கள் :257 

நன்றி 
செங்கதிரோன்