Saturday, February 22, 2020

ரவுடி பேபி:

18 வயசுக்கு உட்பட்டவங்க !
இதயம் பலவீனமானவங்க!!
இந்த பதிவை படிக்காதீங்க !!!

தமிழ்நாட்டில் ஆண் பெண் நட்பில் புதிதாக ஏற்பட்டுள்ள   பாய் பெஸ்டி குறித்து  சமூகம் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றது. இதனை முன்வந்து கட்டுரைகளும் ,விவாதங்களும் நடைபெறுகின்றன . இதனை முன்வைத்து மனுஷ்யபுத்திரன் எழுதிய கவிதை அதிக வரவேற்பினையும், பல்வேறு விதமான எதிர்வினைகளும் ஏற்பட்டிருக்கின்ன்றது.

வெளிநாட்டில் பாய்பெஸ்டி என்பதெல்லாம் பலகாலம் முன்பே நடந்து விட்டதால் , தற்போதைய டிரண்ட் ஓரின சேர்க்கை திருமணங்களுக்கு  செல்வது தான் ,என் வெளிநாட்டு  நண்பன் தன்  தங்கையின் திருமணத்திற்கு அழைத்திருந்தான் , மாப்பிள்ளை என்ன செய்கிறார் என்று நான் கேட்பதற்கு முன்னரே அவன் சொல்லி விட்டான் , அவள் அவளுடைய நெடுநாள் தோழியை திருமணம் செய்யபோகின்றாள் என்று எந்த  பதட்டமோ தயக்கமோ இல்லாமல் சொல்ல நானும் அவ்வாறே கேட்டுக்கொண்டு  நண்பர்களுடன் சென்று திருமண விழாவில் கலந்து கொண்டேன்.

 வெளிநாடு வந்த புதிதில் ஓரின சேர்க்கையாளர்கள் குறித்து எந்த புரிதலும் இல்லை. ஒருமுறை  பேருந்தில் பயணிக்கும் போது  மடித்துவிடப்பட்ட முழுக்க சட்டை, வாயில் பற்ற வைக்கபப்டாத சிகரெட் , கூலிங் கிளாஸ் , கலரடிக்கப்பட்ட தலை என்ற உருவம் ஏறக்குறைய "புள்ளிங்கோ" தோற்றத்தில் ஒருவரை பார்த்தேன் , கொஞ்சம் ஊடுருவி பார்த்ததில் தான் தெரிந்தது அது ஒருத்தி என்று , அந்த ஒருத்தியின் காதலி மிக அடக்க ஒடுக்கமாக அமர்ந்து கொண்டு இந்த ரவுடி பேபியினை டாவடித்துக் கொண்டிருந்தார்.


வெளிநாடுகளில் ஓரினசேர்க்கையாளர்களுக்கு கலாச்சார ரீதியாகவும் , சட்ட ரீதியாகவும் பாதுக்காப்பு இருப்பதால் மிக சுதந்திரமாக இருக்கின்றார்கள். பூங்கா, தியேட்டர் , வணிக வளாகம் என எல்லாப் பொது இடங்களிலும் இவர்களைக் காண முடியும் .

 அது மட்டுமல்லாமல் பள்ளிகளிலும் ஓரின சேர்க்கையாளர்கள் சென்று தாங்களும் சமூகத்தின் ஒரு அங்கம் , வெறுக்கத்தக்கவர்களோ அல்லது தங்களின் உறவுமுறை மற்ற உறவுகளைப் போன்ற ஒன்றே என்ற விளக்கங்களை அளிப்பார்கள். இதன் மூலம் பள்ளியில் படிக்கும்  போதே மாணவர்களுக்கு இது போன்ற உறவுகள்  குறித்த விழிப்புணர்வு கிடைக்கின்றது.

எங்களுடன் பணியாற்றிய  இந்தியர்   ஒருவர்  தன் குழந்தைக்கு இது போன்றதொரு வகுப்பு நடந்தது குறித்து தன அதிருப்தியை  பகிர உள்ளூர்வாசிகள் அவரை கடிந்து கொண்டனர். வெளிநாட்டில் வாழும்போது நம கலாச்சார பண்பாடு நம்பிக்கைகளை நம் குழந்தைகளிடம் திணித்தால் அவர்கள் வளர்ந்து பெரியவர்களான பிறகு மிகுதியான துன்பத்திற்கு ஆளாவார்கள். இந்தியப் பெண்கள் இது போன்ற உறவுமுறையில் உள்ள வெளிநாட்டு பெண்களைக் காணும் போது  முகத்தில் மிகுந்த கோபம் ஆச்சரியம்  என்ற பலவகையான உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள் . அதுவும் அவர்களின் mind voice இன்னும் உக்கிரமாக இருக்கும்  என்று உறுதியாக நம்பலாம் .

ஒரு பெண்ணின் மனது ஒரு பெண்ணுக்குத்  தான் தெரியும் என்பார்கள் .இந்த ரவுடி பேபிகளுக்கிடையே அப்படி இரு புரிதல் இருக்கிறதா என்பது  ஆய்வுக்குரியது . ஆனாலும் இந்த உறவுகளுக்கிடையும் பிரேக் அப் போன்றவைகளும் உண்டு. சட்டம் அனுமதிப்பதால் இரு பெண்கள் இணைந்து குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பதும் உண்டு. 

இந்த உறவுகளை நாகரிகத்தின் உச்சம் என்றுதான் மேற்கத்திய சமூகம் நம்புகின்றது ​

நன்றி
செங்கதிரோன்

No comments: