Wednesday, April 15, 2020

விண்டர் விநோதங்கள் : பனி வெள்ளம்


பனிப்பொழியும் (Snowfall) போது பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தாலும் இந்த பனிப்பொழிவினால் பல்வேறு தொல்லைகள் உண்டாகும் . சாலையில் நடக்கவோ ,வாகனங்களை ஓட்டவோ முடியாது. இந்த விண்டரின் ஆரமபம் முதல் முடியும் வரை பலவேறு விதமான இன்னல்களுக்கு ஆளாக நேரிடும். பிப்ரவரி மாதத்தில் ஏற்படும் குளிர்மழையினால் சாலைகள் கண்ணாடி போல மாறிவிடுவதால் நடப்பவர்கள் வழுக்கி விழுந்து கை ,கால் முறிவு ஏற்படும் , வாகனங்கள் பிரேக்குக்கு கட்டுப்படாமல் கண்ணாடி சாலையில் வழுக்கி மற்ற வாகனங்களுடன் மோதி விபத்துகள் உண்டாகும். (கண்ணாடி சாலைகள் குறித்து மேலும் அறிந்து கொள்ள-லிங்க் கமெண்ட் பகுதியில் )

பனி வெள்ளம் என்பது விண்டர் முடியும் தருவாயில் ஆறுகளை ஒட்டிய இடங்களில் ஏற்படும் . ஆங்கிலத்தில் இதற்கு freshet என்று பெயர். வசந்த காலத்தின் தொடக்கத்தில் வழக்கமாக இந்த பனி வெள்ளம் உண்டாகும் . மூன்றுமாதங்களுக்கு மேலாக பெய்த பனிபொழிவினால் ஆங்காங்கே பல்வேறு தற்காலிக பனி மலைகள் அல்லது மேடுகள் உருவாகி இருக்கும். வின்டரின் முடிவில் வெப்பநிலை உயரும் போது இந்த பனிமலைகள் உருக ஆரம்பிக்கும்.

வின்டரில் வெப்பநிலை மிக மிக குறைவாக -20க்கும் கீழ் செல்வதால் ஆறு குளம் ஏரி ஆகியவையும் உறைந்து விடும் .ஏசு கிறிஸ்து கடலில் நடந்து அற்புதம் செய்ததை போல , வின்டரில் ஒரு சிலர் உறைந்த இந்த ஆறு ஏரிகளில் நடந்து அற்புதங்களை செய்வார்கள் . இந்த உறைந்து போன ஆறுகள் விண்டரின் முடிவில் அதாவது வசந்த காலத்தின் தொடக்கத்தில் வெப்பநிலை உயர்வால் உருக ஆரம்பிக்கும். மேற்சொன்ன தற்காலிக பனி மேடுகள் உருகுதல் , இந்த உறைந்து போன ஆறுகளின் உருகுதல் இரண்டும் இணைந்து தான் இந்த பனி வெள்ளம் உண்டாகும். ஏப்ரல் முதல் ஜுலை வரை இந்த பனிவெள்ளம் கனடா மற்றும் அமெரிக்காவில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஏற்படும்.

இந்த பனி வெள்ளமானது ஆறுகளின் அருகாமையில் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கும் நுழைந்து சேதங்களை உண்டாக்கும். ஒவ்வொரு வருடமும் கனடா மற்றும் அமெரிக்க அரசுகள் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். இருப்பினும் இந்த வருடமும் நான் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் பனி வெள்ளம் ஏற்பட்டு ஒரு சில கிராமங்கள் பாதிப்படைந்தன.
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதற்கேற்ப பனி பொழிவு பார்ப்பதற்கு தான் சாதுவாக இருக்கும் ஆனால் அதனால் ஏற்படும் தொல்லைகள் அளவிட முடியாத ஒன்றாக இருக்கும்.

செங்கதிரோன்

No comments: